பக்கம் எண் :

67

NABIGAL
நெஞ்சில் நிறைந்த நபிமணி
நபியவர்களின் போதனைப் பகுதி

பெண்ணுலகு காத்த பெருந்தகையாளர்


உரிமைகள் அனைத்தும் பெற்றே
    உவப்புடன் பெண்கள் எல்லாம்
சரிநிக ராக வாழச்
    செய்தவர் நபியே நெஞ்சே


படைப்பினில் பாதி யான
    பாவையர் மாண்பு ணர்ந்தோன்
படைத்தவன் மாண்பு ணர்ந்தோன்-
    பார்எனச் சொன்னார் நெஞ்சே


வீட்டுக்கு விளக்கைப் போன்றோர்
    விளங்குபெண் இனத்தார் என்றே
நாட்டமாய் உரைத்த சீலர்
    நல்லுளம் பாராய் நெஞ்சே

ஆணுக்குப் பெண்ணும்-தூய
    பெண்ணுக்கு ஆண்க ளும்தான்
மாணெழில் உடையாம் - என்ற
    மறையினைத் தந்தார் நெஞ்சே


பெண்களின் பெருமை தன்னைப்
    பெரும்புவி தன்னில் காக்கப்
பெண் - என்ற தலைப்பு தன்னைப்
    பெய்மறை பெற்றார் நெஞ்சே


பெற்றவர் துடி துடிக்கப்
    பெண்சிசு வைப்பு தைக்கும்
குற்றத்தைக் களைந்தெ டுத்த
    கொற்றவர் நபியே நெஞ்சே


ஆணினம் அரிவை யர்க்கே
    அல்லல்கள் அளித்த போது
தேனனை மொழியால் நீதி
    செப்பிய தவரே நெஞ்சே

திருமணம் செய்து கொண்டு
    தேசுறு வாழ்வைப் போற்றார்
ஒருநாளும் என்னைச் சாரார்-
    உறுதிஎன் றாரே நெஞ்சே


இருமனம் இயைந்த பின்பே
    இன்புடன் செய்து கொள்ளும்
திருமணம் உவந்த தென்றே
    திருநபி உரைத்தார் நெஞ்சே


மூடத்தால் கட்டா யத்தால்
    முடித்திடும் திரும ணம்தான்
கூடாதே என்று வாழ்வில்
    கூறிய தவரே நெஞ்சே


மனைவியின் மனம்க வர்ந்து
    மகிழ்ச்சியை அளித்து வாழ்வோன்
மனிதருள் மனிதன்-என்ற
    மாண்பினைப் பாராய் நெஞ்சே

பெண்மையின் மாண்பு ணர்ந்து
    பெட்புடன் காப்ப ளிப்போர்
கண்ணனை மனிதன் என்ற
    கருத்தினைத் தந்தார் நெஞ்சே


செல்வத்துள் சிறந்த செல்வம்
    செம்மைசேர் மனைவி-என்ற
சொல்லதற் குவமை உண்டோ ?
    சொல்லுவாய் எனது நெஞ்சே


களிப்புற்றுக் கணவ னுக்குக்
    கனிவன்புப் பணிகள் செய்தே
ஒளிருவோள் பெண்ணாள் - என்ற
    உரைக்குரை உண்டோ? நெஞ்சே


கொண்டவன் உளம் கலந்து
    கொள்கையில் வெற்றி கண்ட
பெண்ணவள் பெண்ணாள் - என்ற
    பெருமையைப் பாராய் நெஞ்சே

அடிமைகொள் பொருளாய்ப் பெண்ணை
    அல்லலில் ஆழ்த்து வோன்என்
அடிபற்ற முடியா-தென்ற
    அறவுரை பாராய் நெஞ்சே


வன்முறைச் செயலால் பெண்ணை
    வருத்தியே வாழு கின்றோர்
நன்முறைக் குதவார் - என்று
    நவின்றதை அறிவாய் நெஞ்சே


பிடித்தமில் உள்ளத் தோரை
    பெருவய துடையோர் கொள்ளல்
கொடுமையுட் கொடுமை-என்ற
    குணமணி அவரே நெஞ்சே


பற்றில்லை என்ற போது
    பான்மையாய்ப் பிரிந்து வாழ
உற்றவோர் துணய ளித்த-
    உத்தமர் அவரே நெஞ்சே

பற்றற்ற போதும் கூடப்
    பாங்குடன் உறவைப் பேணிச்
சுற்றத்தைக் காக்கும் வாழ்வே
    சுடர்வாழ்க்கை என்றார் நெஞ்சே


குற்றங்கள் ஏதும் இன்றிக்
    கொண்டவ ளைத்து றப்போன்
நற்கதி அடையான்-என்று
    நவின்றதும் அவரே நெஞ்சே


கணவனை இழந்து நிற்போர்
    கடிமணம் மீண்டும் காண
மணமுறை வகுத்துத் தந்த
    மன்னரும் அவரே நெஞ்சே


கொண்டவன் துணயி ழந்து
    குழந்தையோ டவலங் கொண்ட
பெண்களுக் குதவி செய்தல்
    பெருந்துணை-என்றார் நெஞ்சே

தீயஎண் ணத்தைக் கொண்டு
    திரும்பியே பெண்ணைப் பார்ப்போன்
தீயவை செய்வோன் என்ற
    திருமொழி பாராய் நெஞ்சே


பிறமனை நோக்கா தன்மை
    பெரும்பொருள் காக்கும்-என்ற
அறவுரை அருளிச் செய்த
    அண்ணலும் அவரே நெஞ்சே


உலகமும் பொருள்கள் தாமும்
    உயர்ந்ததே, அதனில் மிக்காள்
அலகில்கற் புடையாள்-என்ற
    அருஞ்சொலைப் பாராய் நெஞ்சே


அழகு,நற் செல்வம், மாண்பும்
    அரிவையர் உடையா ரேனும்
ஒழுக்கத்தில் உயர்ந்த பெண்ணே
    உகந்தவர்-என்றார் நெஞ்சே

சொத்ததில் உரிமை யோடு
    சுகதுக்கப் பங்கும் பெற்றே
உத்தம நெறியில் பெண்கள்
    உவந்திடச் செய்தார் நெஞ்சே


பெற்றவர் ஏவ லின்கண்
    பேரின்பம் காணு கின்றோர்
நற்றவ மக்கள் - என்ற
    நன்னெறி பெரிதே நெஞ்சே


ஆணினம் போன்று நல்ல
    அரிவையர் குலமும் ஓங்க
மாணெழில் நெறிவ குத்த
    மன்னவர் அவரே நெஞ்சே


பெண்ணினம் காத்த அந்தப்
    பெருந்தகை பெருமை எண்ணி
மண்ணகம் மகிழு கின்ற
    மாண்பதும் என்னே நெஞ்சே