பக்கம் எண் :

69

NABIGAL
நெஞ்சில் நிறைந்த நபிமணி
நபியவர்களின் போதனைப் பகுதி

நெஞ்சில் நிறைந்த நபிமணி

[யாஸய்யிதீ யாரசூ லல்லாஹி குத்பியதி’-
என்ற பைத்தை இந்த இடத்தில் ஓதிக்
கொள்வது ஏற்றமுடையது]

ஹம்து ஸலவாத்
 


மௌலாய ஸல்லி வஸல்
     லிம்தாயி மனஅ பதா
அலாஹ பீபிக்க கை
     ரில்கல்க்கி குல்லி ஹிமி

எல்லாப் புகழும் அந்த
     ஏகனாம் அல்லாஹ் வுக்கே
உள்ளதாம் என்று சொல்லி
     உவப்புறு வாய்!என் நெஞ்சே


நாயகம் மீதும் அன்னார்
     நண்பர்கள் மீதும் அன்பாய்
தூயநல் ‘ஸலவாத்’ ஓதி
     துவங்கிடு வாய்!என் நெஞ்சே

உயர்நபி வாழ்வு தன்னை
    ஓவிய மாக்கிக் காண
நயமுடன் பாக்கள் செய்தே
    நல்கிட லானேன் நெஞ்சே


நல்லருள் நபியைப் பாடின்
    நாவெல்லாம் இனிக்கு தென்போம்
வல்லவன் நபியைப் பாடும்
    வாய்ப்பதும் வாய்ப்ப தாமோ !


அன்னவர் பெருமை சொல்லும்
    ஆற்றலைப் பெற்றே னில்லை
மன்னர்க்கும் மன்ன ரான
    மாண்புதான் என்னே நெஞ்சே


நினைத்திட இனிக்கும் வள்ளல்
    நேர்த்திசேர் வாழ்வு தன்னைப்
புனைந்துனக் களிப்ப தானேன்
    போற்றிடு வாய் ! என் நெஞ்சே

வெற்றியே வாழ்க்கை என்று
    விளக்கிய நபிய வர்க்குச்
சொற்களால் மாலை செய்து
    சூட்டிடல் எளிதோ ? நெஞ்சே


ஆடவர் பெண்க ளுக்கும்
    அன்புடைச் சிறுவ ருக்கும்
பாடவ ரும்வி தத்தில்
    பாடினேன் இசைப்பாய் நெஞ்சே


பாக்கவி பாடு கின்றேன் ;
    பாங்குடன் இசைப்ப வர்கள்
பாக்கிய நபிய வர்தம்
    பரிவினைப் பெறுவார் நெஞ்சே


நாயகம் என்ற சொல்லை
    நாமிங்கு நவிலும் போது
வாயெலாம் இனிக்கும் அந்த
    வளமதைப் பாராய் நெஞ்சே

உங்களுக் கென்று சொல்லி
    உவப்புடன் இறைவன் தந்த
தங்கத்தின் பெருமை தன்னைத்
    தருகின்றேன் கேளாய் ! நெஞ்சே


ஸலவாத் மகிமை

முஹம்மது முஹம்ம தென்று
    முழக்கிடும் ஒலியைக் கேட்டே
இகமது கொள்ளும் இன்பை
    இயம்பிடல் எளிதோ? நெஞ்சே


புகழப்பட் டோரென் றோதும்
    பொற்புறு பெயருக் கேற்ப
புகழுற்ற நாய கத்தின்
    பொற்பதும் என்னே நெஞ்சே


நெஞ்சினில் ஒளிபெ ருக்கும்
    நெஞ்சத்தைக் கொண்ட அண்ணல்
நெஞ்சத்தில் இறைவன் நின்ற
    நீர்மையும் என்னே ! நெஞ்சே

நம்பிக்கை கொண்டோர் மீது
    நாயன்தான் விளித்து ரைத்த
செம்மொழி இன்பந் தன்னைச்
    செப்பிடக் கேட்பாய் நெஞ்சே

 

இந்த இடத்தில் கீழ்க்காணும் குர்ஆன்
ஆயத்தை எல்லோரும் சேர்ந்து ஓதவேண்டும்
அல்லாஹும்ம ஸல்லி அலா ஸய்யிதினா
முஹம்மதின் வஅலா ஆலி ஸய்யிதினா முஹம்
மதின் வபாரிக் வஸல்லிம் அலஹ்


இறையுரைக் கேற்ற வணக்கம்
    இயம்பும்முக் காலத் திற்கும்
நிறைஸல வாத்மு ழக்கம்
    நிகழ்வதைப் பாராய் நெஞ்சே


விண்ணவர் எல்லாம் நன்றே
    வியன்நபி ஸலவாத் தோதி
கண்ணியம் காக்கும் அந்தக்
    காட்சியைப் பாராய் நெஞ்சே


வரலாற்றுச் சுருக்கம்

நெஞ்சகம் மகிழ்வால் விம்ம
    நேயஞ்சேர் அடியார் தம்மைச்
செஞ்சொல்லால் இறைவன் போற்றும்
    சிறப்பினைப் பாராய் நெஞ்சே

[மூன்று முறை எல்லோரும் சேர்ந்து ஸலவாத் ஓதவேண்டும்]

குறைஷியர் குலத்தில் தோன்றி
    குறையெல்லாம் போக்க வந்த
நிறைவுடை நாய கத்தின்
    வாழ்வினைக் கேளாய் நெஞ்சே


மக்காவின் மணியாய் வந்து
    மக்களின் மனங்க வர்ந்து
திக்கெலாம் நெறியைக் கண்ட
    திருநபி அவரே நெஞ்சே


ஈன்றவர் தமையி ழந்தும்
    இன்புடன் வளர்ந்தே அன்பின்
பான்மையை விளக்க வந்த
    பண்புளார் நபியே நெஞ்சே


கல்லாமல் கற்ற செல்வர்
    கல்வியின் பெருமை தன்னைச்
சொல்லாத மக்க ளுண்டோ ?
    சொல்லுவாய் எனது நெஞ்சே

மழலையின் பேச்சை, நல்ல
    மாணிசை யாழை வெல்லும்
குழைவுடன் பேச வல்ல
    குணநபி அவரே நெஞ்சே


குழந்தைகள் இடத்தி லேஓர்
    குழந்தையாய்க் கொஞ்சிப் பேசி
பழகிய நாய கத்தின்
    பரிவினைப் பாராய் நெஞ்சே


பாலைகள் சூழ்ந்தி ருந்த
    பசுமையில் நாட்டின் கண்ணே
சோலையாய் வந்து தித்த
    சுடர்மணி அவரே நெஞ்சே


வீட்டிலுள் வேலை யோடு
    விருப்புடன் செம்பெ டுத்தே
ஆட்டின்பா லைக்க றந்தும்
    அளித்திட லானார் நெஞ்சே

தாழையின் பாயில் தூங்கி
    தக்கநல் எளிமை ஏற்றார்
வாழ்விலே அதனை எண்ணி
    வாழ்த்துவாய் எனது நெஞ்சே


மாண்பொருள் பெருநி லத்தை
    மண்மிசை உதறித் தள்ளும்
பான்மைசேர் உள்ளம் கொண்ட
    பான்மையர் நபியே நெஞ்சே


ஒட்டிய வயிற்றில் கல்லை
    உளமொப்பிக் கட்டிக் கொண்டு
பட்டினி கிடந்த அந்த
    பண்பினை நினைவாய் நெஞ்சே


குடிசையில் வாழ்ந்தி ருந்த
    குணநபி கொள்கை தன்னைப்
படியெலாம் கொள்ளு கின்ற
    பான்மைதான் என்னே நெஞ்சே

விளக்கினை ஏற்று தற்கும்
    வீட்டினில் வசதி யின்றி
உளத்தொளி ஏற்றி நின்ற
    உத்தமர் அவரே நெஞ்சே


வாணிபம் என்ற போதும்
    வாய்மையே வேண்டும் என்ற
நானிலத் தரசைப் போற்றி
    நாடொறும் மகிழ்வாய் நெஞ்சே


அல்லல்கள் தந்தோர் கூட
    ‘அல்அமீன்’* என்ற ழைக்க
நல்லொளி பாய்ச்ச வந்த
    நாயகம் அவரே நெஞ்சே

*அல்அமீன்: நம்பிக்கைக்குரியவர்; வாய்மைமிக்கவர்,


பணியாளர் இடத்தும் கூடப்
    பண்பினைக் காட்டி நிற்கும்
கனிவுடைப் பெருமா னாரின்
    கருணையைப் பாராய் நெஞ்சே


தெரிந்தவர் தெரியார் என்ற
    பிரிவதே இல்லா வண்ணம்
உரிமைகொள் அன்பு கொண்ட
    உவந்ததும் அவரே நெஞ்சே


பிறருக்கே உழைப்ப தாலே
    பேரின்பம் உண்டா மென்றே
அறத்திற்கு வழிவ குத்த
    அண்ணலைப் பாராய் நெஞ்சே


நங்கையர் கொள்ளு கின்ற
    நாணத்தில் அதிகம் கொண்டே
இங்குநம் நாய கம்தான்
    இலங்கினா ரன்றோ ! நெஞ்சே


ஏழையர் கண்ணீ ரெல்லாம்
    என்கண்ணீர் என்று சொல்லிப்
பீழையைத் துடைத்த அண்ணல்
    பெருமனம் என்னே நெஞ்சே

இரக்கத்தை ஏந்தி வந்தே
    இன்னலாம் கடலுள் நம்மை
மரக்கலம் போன்று காத்த
    மாண்புதான் என்னே நெஞ்சே


பொறுமையைப் போர்வை யாக்கிப்
    பணிவதை நிறைவ தாக்கிப்
பெருமையைப் பெற்ற அண்ணல்
    பெட்பதும் பெரிதே நெஞ்சே


உலகத்தோர் துன்பத் திற்கே
    உருகியே நிற்பே னென்ற
அலகிலாப் புகழைக் கொண்ட
    அவர்க்கிணை உண்டோ? நெஞ்சே


தாக்கிய தீயோர் பாலும்
    தம்முடைக் கொள்கை ஒதும்
ஊக்கமும் அவர்பால் தானே
    உள்ளதைக் கண்டோம் நெஞ்சே

கழுத்தினில் துணியை இட்டுக்
    கயவர்கள் வதைத்த போதும்
பழுத்தநல் அனபி னாலே
    பார்த்தவர் அவரே நெஞ்சே


வசைக்கவி செய்து பாடி
    வருத்தத்தைத் தந்த போதும்
நசையுடன் பொறுத்து நின்ற
    நல்லவர் அவரே நெஞ்சே


தொழுதிடச் செல்லும் போது
    துணிவுடன் தடுத்த போதும்
தொழுகையை நிறுத்தே னென்ற
    தோன்றலும் அவரே நெஞ்சே


ஒட்டக நச்சுப் பையை
    உடலிலே இட்ட போதும்
நிட்டையில் உலையா நின்ற
    நேசரும் அவரே நெஞ்சே

முள்ளிட்ட பாத கர்க்கும்
    முறுவலைக் காட்டி நின்ற
வள்ளலை நினைக்கும் தோறும்
    வாழ்வொளி தோன்றும் நெஞ்சே


நகைக்கும்கீழ்ப் பகைய தற்கும்
    நல்லன்பைப் பொழிந்து நின்ற
தகவுடை நாய கத்தின்
    தன்மைதான் என்னே நெஞ்சே


எதிர்ப்பினை அன்பால் வென்ற
    ஏந்தலின் மாண்பு ணர்ந்த
எதிரிகள் பின்பு கொண்ட
    ஏற்றமும் என்னே நெஞ்சே


நிந்தனை செய்த வர்க்கும்
    நீள்இடர் இழைத்த வர்க்கும்
சிந்தனை ஒளியைத் தந்த
    செல்வரும் அவரே நெஞ்சே

துன்பத்தின் எல்லை கண்டும்
    துவண்டுமே அயரா வண்ணம்
இன்புறு இஸ்லாம் தன்னை
    இணைத்தவர் அவரே நெஞ்சே


தள்ளியே வைத்தி ருந்து
    தம்முளம் களித்தோ ரெல்லாம்
அள்ளியே அணைத்துக் கொண்ட
    அதிசயம் பெரிதே நெஞ்சே


ஏறிட்டுப் பாரா வண்ணம்
    ஏளனம் செய்தோ ரெல்லாம்
வீறிட்டே எழுந்த காட்சி
    வியப்பினும் வியப்பே நெஞ்சே


திரும்பிய பக்க மெல்லாம்
    தீமைகள் செய்த மக்கள்
விரும்பியே தழுவி நின்ற
    விந்தைதான் என்னே நெஞ்சே

*நானும்என் அமரர் தாமும்
    நபிதமை வாழ்த்து கின்றோம்
காணும்அவ் வின்ப வாழ்த்தில்
    கலந்திடு என்றான் நெஞ்சே

குடித்திடும் கொடியோர் நெஞ்சும்
    கொள்கையில் படியும் என்னும்
படிக்கிங்கு செய்த வள்ளல்
    பார்மிசை அவரே நெஞ்சே


கள்வெறி கொலைகள் தம்மைக்
    கண்டித்தும் உலகின் கண்ணே
உள்ளொளி விளக்கை ஏற்றி
    உளத்தமர்ந் தாரே நெஞ்சே


பற்பல கொள்கை தன்னைப்
    பாரிடைப் போக்கி வைத்தே
அற்புதக் கொள்கை தன்னை
    அளித்ததும் அவரே நெஞ்சே


* இந்தக் கவிதையை 935ஆம் பக்கத்தில் 3503ஆம் கவிதைக்குப் பிறகு பாடும்போது இணைத்துக் கொள்ள வேண்டும்.

வாழ்ந்திட நினைப்ப வர்க்கும்
    வாழ்ந்துமே அலுத்த வர்க்கும்
வாழ்வினை அளிக்க வந்த
    வள்ளலும் நபியே நெஞ்சே


அறவழி காட்ட வந்தே
    அரசியல் நெறியைக் கண்டு
குறைவிலா வாழ்வைத் தந்த
    கொற்றவர் அவரே நெஞ்சே


உலகத்து மக்க ளுக்கே
    ஓரருட் கொடையாய் வந்து
நிலமெலாம் புகழைக் கொண்ட
    நித்தியர் அவரே நெஞ்சே


மனிதரைக் காப்ப தற்கு
    மன்றாடி நிற்க வந்த
புனிதராம் நபியைப் போன்ற
    புண்ணியர் எவரே? நெஞ்சே

விருந்தளிப் பதிலே நல்ல
    விருப்பினைக் கொண்டொ ளிர்ந்த
அருந்தவ நபிக ளாரின்
    அன்பதும் பெரிதே நெஞ்சே


வாழ்வெலாம் தொண்டென் றோதி
    வாய்மையின் மாண்பு காட்டி
ஆழ்கடல் போன்ற துன்பை
    அவரன்றோ வென்றார் நெஞ்சே


வரலாற்றைப் பெருமை யாக்க
    வாழ்வினைத் தந்த அந்தப்
பெருமைசேர் நாய கத்தின்
    பெற்றியும் என்னே நெஞ்சே


சொல்வதைச் செயலில் காட்டி
    சொல்லரும் புகழைக் கொண்ட
நல்லுள மேதை பற்றி
    நவிலச்சொல் உண்டோ? நெஞ்சே

நெறிகளின் விளக்க மாக
    நேர்மையின் வழிய தாகக்
குறியுடை வாழ்வில் அந்தக்
    குணமணி நின்றார் நெஞ்சே


அரசியல், சமுதா யத்தில்
    அரும்பொரு ளாதா ரத்தில்
அரசென மணம் பரப்பும்
    அருமையும் பெரிதே நெஞ்சே


அறிவொளி காட்டு கின்ற
    அரும்பெரும் கொள்கை யாலே
பெரும்புகழ் பெற்ற அண்ணல்
    பெருமையும் என்னே நெஞ்சே


அரியஇச் செயல்க ளெல்லாம்
    அரியஇம் மொழிகள் எல்லாம்
உரியவை மனிதர்க் கென்றே
    உவந்தளித் தாரே நெஞ்சே

ஆக்கிர மிப்பின் ஆட்சி
    அவனியில் கூடா தென்றே
ஊக்கமாய் மக்க ளாட்சி
    உதித்திடச் செய்தார் நெஞ்சே


ஒற்றுமை எனும்க யிற்றால்
    உலகினை இணைத்த செல்வர்
வெற்றியைப் போன்றோர் வெற்றி
    விளந்ததும் உண்டோ? நெஞ்சே


எண்ணிய எண்ண மெல்லாம்
    இறைவனால் வெற்றி என்றே
வண்ணமாய் வாழ்ந்த அந்த
    வள்ளலை நினவாய் நெஞ்சே


தம்முடைக் கொள்கை கொண்ட
    தக்கதோர் சமுதா யத்தைத்
தம்முடைக் காலத் திற்குள்
    தந்ததும் அவரே நெஞ்சே

தான்காண நினைத்த வற்றைக்
    தமதுவாழ் நாளில் கண்ட
மேன்மையை அவர்பா லின்றி
    மேலெங்கு கண்டோம் நெஞ்சே


எவர்செய்தார் இப் புரட்சி?
    எவர்சொன்னார் இதனை ? என்றே
உவப்புடன் மக்கள் பேச
    உயர்ந்தவர் அவரே நெஞ்சே


பொன்றிடும் உலகத் தோர்க்குப்
    பொன்றாத நெறிகள் தந்து
குன்றாத புகழைக் கொண்ட
    கோமானும் அவரே நெஞ்சே


ஏகனின் அருளில் மூழ்கி
    எழில்மறை தனைக்கொ ணர்ந்து
தாகத்தைத் தணித்த எந்தை
    தண்ணருள் ஆடாய் நெஞ்சே

நூல்களின் தாயென் றோதும்
    நுண்மறை பெற்றுத் தந்த
சால்புடை நாய கத்தின்
    சமரசம் என்னே நெஞ்சே


அழிவினில் இருந்த இந்த
    அவனியை மீட்க வந்த
எழிலுடை நபியின் வாழ்க்கை
    எவர்க்கும்ஓர் தீபம் நெஞ்சே

பாவங்கள் அனைத்தும் நீங்கிப்
    பாரெலாம் ஒருமை கொள்ள
ஏவலர் நபியின் வாழ்வை
    எல்லோர்க்கும் சொல்வாய் நெஞ்சே


காலது கடுக்கும் வண்ணம்
    கையேந்தித் தொழுது நின்ற
மேலவர் அவரைப் பற்றி
    மேதினிக் குரைப்பாய் நெஞ்சே

ஆருக்கும் அடிமை இன்றி
    அவனியில் வாழு தற்குச்
சீர்மிகு நபியை நம்பிச்
    செல்லுவாய் எனது நெஞ்சே


ஏழையைப் போல் பிறந்தார்
    ஏழையைப் போல் வளர்ந்தார்
ஏழையர் தமக்கு ழைத்தே
    எளிமையாய் வாழ்ந்தார் நெஞ்சே


வெள்ளாடை அணிந்த தோடு
    வெள்ளையாம் உள்ளங் கொண்டே
உள்ளாடும் உயிராய் அண்ணல்
    உறைகின்றார் உணராய் நெஞ்சே


நடுத்தர உயரங் கொண்ட
    நல்லொளி வனப்பில் அண்ணல்
தொடுக்கொணா அழகி னோடு
    துலங்கிட லானார் நெஞ்சே

வெண்மையில் சிவப்ப தும்தான்
    விரவிய நிறத்தைக் கொண்டே
அண்ணல்தாம் பொலிந்து நின்ற
    அழகதும் என்னே நெஞ்சே


புலர்ந்திடும் வேளை தன்னில்
    புன்னகை யதனைச் சிந்த
மலர்ந்திடும் மலரைப் போன்ற
    மாண்முகம் கொண்டார் நெஞ்சே


தெளிவோடும் திருத்த மோடும்
    தேன்நபி அவர்கள் பேசும்
ஒளிமுக அழகை இங்கண்
    உரைத்திடல் எளிதோ? நெஞ்சே


மன்னிக்கும் மாண்பைக் கொண்டே
    மாநிலப் புகழ்ம ணந்த
அண்ணலைச் சொல்லச் சொல்ல
    ஆனந்தம் பெருகும் நெஞ்சே

பார்த்தவர் நின்று நோக்கும்
    பரவசம் தன்னை ஏந்தி
ஈர்த்திடும் முகத்தைக் கொண்ட
    இன்மணி அவரே நெஞ்சே


இறைவனின் தூதன் என்றே
    எனையழைத் திட்டால் போதும்
முறையின்றி உயர்த்த வேண்டாம்
    என்றவர் மொழிந்தார் நெஞ்சே


போற்றுதல் தனைவெ றுத்துப்
    பொற்புறு நன்றி சொன்னால்
ஏற்றுக்கொள் ளும்அண் ணல்தம்
    ஏற்றமும் என்னே நெஞ்சே


புவிநிறைந் தவரும் போற்றும்
    புதுநெறி தந்தோ ரும்நம்
கவிநிறைந் தவரும் அந்தக்
    காருண்ய நபியே நெஞ்சே

அனைத்திற்கும் துணையாய் நிற்கும்
    அண்ணலை நாளும் போற்றி
இனித்திடும் வாழ்வு பெற்றே
    இன்புறு வாயென் நெஞ்சே


அன்பதற் கன்பே என்றே
    அகிலத்தை அணைத்து நின்றே
இன்பத்தைத் தந்த அண்ணல்
    இதயத்தைப் பாராய் நெஞ்சே


தொண்டுக்கே வாழ்க்கை என்று
    துலங்கிய மன்னர் கொள்கை
கண்டென உலகத் தோர்க்கே
    இனிப்பதைக் காண்பாய் நெஞ்சே


உள்ளத்து நேர்மை தன்னை
    உயர்வான கொள்கை தன்னை
வெள்ளத்தைப் போன்று பாய்ச்சி
    வென்றதும் அவரே நெஞ்சே

அகிலத்து மக்கட் கெல்லாம்
    அழகிய உவமை யாளர்
முகம்மது நபியே என்று
    முழக்கிடு வாய்!என் நெஞ்சே


காவியப் புதைய லோ! நற்
    கற்பனை அமுத மோ! நம்
மேவிய நபியின் வாழ்வு
    மேதினிக் குவமை நெஞ்சே


வருணனைக் கடங்கா
    வள்ளலார்


அவருக்கோர் உவமை சொல்ல
    அவனியில் பொருளைக் காணேன்
உவமைக்கே உவமை சொல்ல
    உதித்துவந் தாரோ! நெஞ்சே


வாய்மைக்கு வாழ்வ ளிக்க
    வந்தவர் தானோ ! நெஞ்சே
தூய்மைக்கும் ஒளியைச் சேர்த்துத்
    துலங்கவந் தாரோ! நெஞ்சே

உலகத்தைக் குடும்ப மாக்க
    உதித்துவந் தாரோ ! நெஞ்சே
கலகத்தைப் போக்கு தற்குக்
    கனிந்துவந் தாரோ ! நெஞ்சே


எண்ணரும் பொலிவாய் நிற்கும்
    எழிலுடை உடுக்க ளைப்போல்
மண்ணில்நம் மக்கள் என்ற
    மகிமையும் அவர்க்கே நெஞ்சே


அழகலை வீசித் தாவும்
    அருவிபோல் பொதுமை யாகி
ஏழிலுடன் ஏற்கும் நல்ல
    ஏற்றத்தைத் தந்தார் நெஞ்சே


மலையதும் மலைக்கும் வண்ணம்
    மனத்திடை உறுதி கொண்டு
நிலைமலை யாகி நின்ற
    நேசரும் அவரே நெஞ்சே

வையத்துப் பெருவி ளக்காய்
    வாய்மைக்கோர் ஒளிவி ளக்காய்
மெய்யொளி காட்ட வந்த
    மேதையும் அவரே நெஞ்சே


பொன்னுக்கும் ஒளியைத் தந்தார்
    புகழுக்கும் புகழைச் சேர்த்தார்
நன்னய முதல்வர் கொண்ட
    நல்லொளி பெரிதே நெஞ்சே


கண்ணுக்கு மணியைப் போன்றும்
    கானுக்கு மலரைப் போன்றும்
மண்ணுக்கு மகிமை தந்த
    மாதவர் நபியே நெஞ்சே


முல்லையம் காட்டில் வீசும்
    மோகனத் தென்ற லைப்போல்
நல்லியல் மணம் பரப்ப
    நாயகம் வந்தார் நெஞ்சே

வாய்மையின் வடிவம் என்றால்
    வையகம் துதிக்கும் அன்றோ?
தாய்மையின் உருவாய் வந்த
    தலைவரும் அவரே நெஞ்சே


எழிலதன் வடிவ மென்றே
    ஏந்தலைச் சொன்னோ மென்றால்
விழிகள்தாம் ஒன்று கூடி
    வீழ்ந்ததில் குளிக்கும் நெஞ்சே


தங்கத்தை அனையார் என்று
    தலைவரைச் சொன்னோ மென்றால்
அங்கதும் மெய்யா மென்றே
    அவனியே சொல்லும் நெஞ்சே


மணமலர் அனையார் என்று
    மன்னரைச் சொன்னோ மென்றால்
குணமிகு மலரும் கூட
    கூசியே நிற்கும் நெஞ்சே

ஆழ்கடல் முத்தாம் என்றே
    அன்னவர் தம்மைச் சொன்னால்
கீழ்ஒளி எனதாம் என்று
    கிளத்துமே முத்தும் நெஞ்சே


அறபினில் கண்டெ டுத்த
    அரும்பெரும் மணிதான் என்றால்
உறவெனச் சொல்லு மன்றோ
    உயரொளி மணியும் நெஞ்சே


வானத்து மேகம் என்று
    வள்ளலைச் சொன்னால் - மேகம்
நான்கொடை அறியேன் என்று
    நவின்றுமே நாணும் நெஞ்சே


தேய்விலாத் திங்க ளென்று
    திருநபி அவரைச் சொன்னால்
தேய்வுறும் திங்க ளும்தான்
    திவ்யமாய்ப் போற்றும் நெஞ்சே

ஒளியுடைக் கதிரைப் போன்றே
    உதித்தவர் நபிகள் என்றால்
அளிமிகு கதிரும் கூட
    ஆம்!எனச் சொல்லும் நெஞ்சே


வசந்தத்தின் தென்றல் போன்று
    வாய்மொழி இன்பம் தந்து
கசந்தநம் வாழ்வில் கொள்கை
    கலந்திடச் செய்தார் நெஞ்சே


இருட்டுக்குள் ஒளியைப் போல
    இதயத்து விளக்க தாகி
அருட்டிறன் காட்டி வைத்த
    அண்ணலார் நபியே நெஞ்சே


இளங்கதிர் வருகை கண்டே
    இருளெலாம் விரைவ தைப்போல்
ஒளிநபி நினைவைக் கொண்டால்
    உளத்திருள் ஓடும் நெஞ்சே


புலர்ந்திடும் பொழுது வந்து
    புதுமைகள் தருவ தைப்போல்
மலர்முக நாய கம்தான்
    மாண்பினைத் தந்தார் நெஞ்சே

வையகம் இருளில் ஆழ்ந்து
    வருந்தியே நின்ற காலை
வெய்யவன் ஒளிபோல் வந்த
    விரிகதிர் அவரே நெஞ்சே


குன்றினைத் தழுவி நிற்கும்
    கோலஞ்சேர் முகிலைப் போல
நின்றிடும் கொள்கை யோடு
    நின்றவர் அவரே நெஞ்சே


விழும்எழில் அருவி போல
    வியன்மொழி பொழிந்த காலை
எழுந்தோடி வந்த மக்கள்
    எண்ணிக்கை சிறிதோ ? நெஞ்சே


கடல்பரப் புள்ளங் கொண்டு
    கருணையால் உலகை வென்று
திடமிகு பணிகள் செய்த
    தீரரும் அவரே நெஞ்சே


நதியினைப் போன்று செல்லும்
    நன்னெறி முறைவ குத்த
கதிரொளி மணியைப் போன்ற
    கண்ணியர் எவரே? நெஞ்சே

புதையிரும் பதனை ஈர்க்கும்
    பொற்புறு காந்தம் போல
இதயத்தைக் கவரும் காந்தம்
    இணையிலா நபியே நெஞ்சே


இருள்கடிந் துள்ளத் தின்கண்
    எழுந்திடும் கதிரைப் போல
அருள்நலம் காட்ட வந்த
    அண்ணலும் அவரே நெஞ்சே


வளர்வுறு திங்க ளைப்போல்
    வையத்தில் கொள்கை யாலே
வளர்ந்தநம் அண்ணல் கொண்ட
    மாண்புகள் பெரிதே நெஞ்சே


மதிக்கெழும் கடலைப் போல
    மக்களின் கடலெ ழுந்த
துதித்திடும் வண்ணம் செய்த
    தோன்றலும் அவரே நெஞ்சே


வானத்து மழையைப் போன்று
    வந்வெம் பகைத ணித்துத்
தேன்மொழி பலவும் தந்த
    திருநபி அவரே நெஞ்சே

பயிருக்கு மழையைப் போன்று
    பாரிலுள் மக்க ளுக்கோர்
உயரிய அருளைத் தந்த
    உத்தமர் அவரே நெஞ்சே


பாலையைப் பசுமை ஆக்கப்
    பாயும்நல் ஆற்றைப் போன்றே
ஞாலத்தைக் காக்க வந்த
    நபிமணி அவரே நெஞ்சே


ஆழ்கடல் முத்தைப் போல
    அறபினில் கண்டெ டுத்த
வாழ்வொளி முத்தாம் அண்ணல்
    வாய்மையும் என்னே நெஞ்சே


தூய்மைக்கு விளக்க மாகித்
    துலங்கிடும் கமலம் போல
வாய்மைசேர் உள்ளங் கொண்ட
    வள்ளலைப் புகழ்வாய் நெஞ்சே

முள்ளுக்குள் ரோஜா வென்ன
    முரடர்கள் இடையே அன்பால்
அள்ளிடும் புகழை வீசி
    அழைத்தவர் அவரே நெஞ்சே


மெல்லிசை கேட்ப தைப்போல்
    மேன்மைசேர் மறையை ஓதி
நல்லிசை கொண்ட அண்ணல்
    நற்குரல் என்னே நெஞ்சே


தொண்டுக்குப் பெருமை தந்த
    தூயரும் அவரே நெஞ்சே
கண்டிற்கும் இனிமை தந்த
    காருண்யர் அவரே நெஞ்சே


புன்னகை பொழியும் செவ்வி
    புவியதை இழுக்கும் வண்ணம்
நன்னயத் திறன்வ ளர்த்த
    நாயகம் அவரே நெஞ்சே

குணங்களின் இருக்கை யாக
    குவித்தநல் இசையைக் கொண்டு
மணமிகு மலராய் நின்ற
    மாதவர் அவரே நெஞ்சே


வாய்மையும் அவரால் இங்கு
    வாழ்வதைப் பெற்ற தென்றால்
வாய்மைக்கா ? வள்ள லுக்கா ?
    வெற்றியைச் சொல்வாய் நெஞ்சே


உண்மையும் உலகந் தன்னில்
    உத்தம நபியால் நல்ல
வண்மையைப் பெற்ற தென்றால்
    வையகம் போற்றும் நெஞ்சே


புகழ்மங்கை அவரைக் கொண்டு
    புகழதைப் பெற்றாள் என்றால்
இகத்தினில் அவரைப் பற்றி
    இயம்புதல் எளிதோ? நெஞ்சே

வீரமும் அவரால் இங்கு
    வீரத்தைப் பெற்ற தென்றால்
பாரினில் அவருக் கீடு
    பகர்ந்திடு வாயோ ? நெஞ்சே


கனிச்சுவை இனிய தென்போர்
    கருணைசேர் நாய கம்பால்
தனிச்சுவை தன்னைக் கண்டு
    தாம்மகிழ்ந் திடுவார் நெஞ்சே


இருமைக்கும் துணையாய் ஆன
    இன்னருட் செல்வர் கொண்ட
பெருமைக்கும் எல்லை தன்னை
    பேசுதல் எளிதோ? நெஞ்சே


பொருநையின் மணலை எண்ணப்
    புகுந்ததை ஓக்கு மன்றோ ?
வருணனைக் கடங்கா வள்ளல்
    வனப்பிசைப் பதுதான் நெஞ்சே

நெஞ்சத்தில் நிறைந்த வர்க்கு
    நேயத்தால் வாழ்ப வர்க்குக்
கொஞ்சமோ புகழ்தான் இங்கு ?
    கூறுக ! என்றன் நெஞ்சே


விண்தேய்த்த புகழார்க் கிங்கு
    விளம்புவ தென்னே நெஞ்சே
கண்போன்ற தலைவ ருக்குக்
    காட்டுவ தென்னே நெஞ்சே


வானமும் போது மாமோ
    வள்ளலின் புகழைத் தீட்ட?
தேன்நபி புகழைச் சொல்லத்
    திக்கெலாம் மகிழும் நெஞ்சே


திக்கெட்டும் புதழ்ப டைத்த
    திருநபி மாண்ப னைத்தும்
சொற்கட்டில் அடங்கு மென்று
    சொல்லிடு வாயோ? நெஞ்சே

கருணையின் கடலாய் வந்து
    காசினி யோரைக் காத்த
வருணனைக் கடங்கா வள்ளல்
    வாழ்வதும் என்னே! நெஞ்சே


ஆற்றல்சேர் நாய கத்தின்
    அரும்பெரும் புகழுக் கெல்லை
போற்றுவார் நாவின் எல்லை
    புகன்றிடு வாயென் நெஞ்சே


இறையவன் தூதர் செவ்வி
    இயம்பிடல் எளிதோ ? நெஞ்சே
திறல்கெழு வேந்தர் வேந்தர்
    திண்மையைப் புகழ்வாய் நெஞ்சே


அண்ணலின் வாழ்வாம் தீபம்
    அகத்தினில் சுடரும் போது
வண்மைசேர் வெற்றி வாழ்வில்
    வாய்க்காதோ? சொல்வாய் நெஞ்சே

வாழ்விலும் தாழ்வி லும்அவ்
    வள்ளலைப் போற்றப் போற்ற
ஆழ்கடல் போன்ற துன்பம்
    அணுவாகி விடுமே நெஞ்சே


அலகிலாப் புகழைக் கொண்ட
    அருள்நபி புகழ்நா மம்தான்
உலகெலாம் ஒலிக்கும் அந்த
    உயர்வினைக் கேளாய் நெஞ்சே


வாணிபம் செய்யும் போதும்
    வாய்மையைப் போற்றும் போதும்
பேணியே போற்றும் நாமம்
    பெருநபி நாமம் அன்றோ!


சோர்ந்திடும் போதும் வாழ்வில்
    சுகமதை அடையும் போதும்
ஒர்ந்தவர் நாமம் சொல்ல
    உள்ளொளி பெருகும் நெஞ்சே

நிலத்தினில் தொழுத போதும்
    நீரின்மேல் தொழுத போதும்
நலத்துடன் வாழ்த்தும் நாமம்
    நாயகத் ததுவே நெஞ்சே


ஆழியுள் வாழும் வாழ்வை
    அடந்திட்ட போதும் கூட
வாழி !நீ ! ரென்று வாழ்த்த
    வாய்த்தவர் அவரே நெஞ்சே


விண்ணிலே பறக்கும் போதும்
    வெற்றிகொள் அண்ணல் நாமம்
பண்ணிலே ஒலிக்கும் மாண்பைப்
    பகர்வதும் எளிதோ? நெஞ்சே

அண்டத்துள் நுழையும் போதும்
    அடித்தளம் விழையும் போதும்
தொண்டினால் உயர்ந்த வள்ளல்
    துதிப்பெயர் ஒலிக்கும் நெஞ்சே

துயில்கொளும் போதும் அண்ணல்
    தூதினை எண்ணிப் போற்றி
உயிர்விடும் போதும் அண்ணல்
    உயர்வெண்ணிச் செல்வாய் நெஞ்சே


உடலுளம் ஊனி லெல்லாம்
    உயிரணுக் குவையி லெல்லாம்
இடங்கொண்ட தன்றோ அண்ணல்
    இடங்கொண்ட அன்பும் ! நெஞ்சே


ஒருகனம் நபிநா மத்தை
    உள்ளமும் மறக்கு மாமோ?
சிறப்புறு அந்நா மத்தை
    செப்பிடு வாய்!என் நெஞ்சே


ஆண்மைக்கும் அவரே நெஞ்சே
    அன்பிற்கும் அவரே நெஞ்சே
கேண்மைக்கும் அவரே நெஞ்சே
    கேட்டிடு வாயென் நெஞ்சே

வாழ்விற்கும் அவரே நெஞ்சே
    வழித்துணை அவரே நெஞ்சே
வாழ்த்தியே மகிழ்ந்தா யென்றால்
    வளமெலாம் பெறுவாய் நெஞ்சே


அழகிற்கும் அவரே நெஞ்சே
    அறிவுக்கும் அவரே நெஞ்சே
கழறிட முடியா தென்னும்
    காட்சியும் அவரே நெஞ்சே


பண்பிற்கும் அவரே நெஞ்சே
    பரிவுக்கும் அவரே நெஞ்சே
துன்பிற்கும் என்றென் றைக்கும்
    துணையவர் நாமம் நெஞ்சே


முதலுக்கும் அவரே நெஞ்சே
    முடிவுக்கும் அவரே நெஞ்சே
உதயமுக் கதிரைப் போல
    உள்ளத்தில் நிற்பார் நெஞ்சே

யாதும்நம் நாடே என்றும்
    யாவைக்கும் கருணை என்றும்
ஓதும்நந் நபியைப் போற்றின்
    உலகமும் கூடும் நெஞ்சே


நெஞ்சினில் நிறைந்தி ருக்கும்
    நபிமணி வாழ்க! என்றே
செஞ்சொலால் பாடப் பாட -
    சுவனமும் சேரும் நெஞ்சே

இந்த இறுதிப் பாடலை
    மூன்று முறை இசைக்க வேண்டும்


ஸல்லல்லாஹ் அலா முஹம்மத்
    ஸல்லல்லாஹ் அலஹ் வஸல்லம்
ஸல்லல்லாஹ் அலா முஹம்மத்
    ஸல்லல்லாஹ் அலஹ் வஸல்லம்
ஸல்லல்லாஹ் அலா முஹம்மத்
    யாரப்பி ஸல்லி வஸல்லிம்