பக்கம் எண் :

7

NABIGAL
நெஞ்சில் நிறைந்த நபிமணி
மதிப்புரைகள் வழங்கிய மாமேதைகள்
 
உயர்திரு. K. காமராஜர் M. P.அவர்கள்
 

மக்கள் இறைஅருளைப் பெற்று மேன்மையான வாழ்வு பெற மார்க்கம் காட்டவே மதங்கள் தோன்றின. அத்துடன் மக்களுக்குச் சீரிய நெறிகளையும் சிறந்த வாழ்க்கை முறைகளையும் அவை போதிக்கின்றன. மக்கள் அறிவு வளர வளர மத உணர்ச்சியும் சேர்ந்து வளர்ந்து வந்திருக்கிறது. மதங்களின் நோக்கம் மக்களைப் பிரித்துவைப்பதல்ல. மக்களை ஒற்றுமைப் படுத்தவும், மன ஒருமைப்பாட்டை வளர்ப்பதுமே அவற்றின் நோக்கம்.

இந்தியா பழம் பெரும் பூமி. பன்னெடுங்காலமாக இங்கு பல சமயங்கள் இருந்துவருகின்றன. அவை வளர்ச்சியும் பெற்று வருகின்றன. பல்வேறு சமயநெறிகளும் கலாச்சாரங்களும் வாழ்க்கை முறைகளும் இப்புராதன மண்ணை மேலும் வளப்படுத்தி வருகின்றன.

நாடு சுதந்திரம் அடைந்த பிறகு பாரத அரசாங்கம், மதச்சார்பற்ற அரசாங்கமாக தன்னைப் பிரகடனப்படுத்திக் கொண்டிருக்கிறது. ஜனநாயக நெறியின் மிக உயர்ந்த நிலை இது. இங்கு எந்த மதத்துக்கும் தனிச்சலுகை கிடையாது. எல்லா மதத்தாருக்கும் சரிசமமான உரிமைகள் உண்டு.

குறிப்பிட்ட சமயத்தின் அடிப்படையான தத்துவங்களை எளிய முறையில் மக்கள் அனைவருக்கும் புரியும் வண்ணம் எடுத்துச் சொல்வது ஒரு நல்ல சேவையாகும். இஸ்லாம் மதத்தைப்பற்றி நன்கு அறிந்து கொள்ள “நெஞ்சில் நிறைந்த நபிமணி” என்ற இக்கவிதை நூல் பேருதவியாக அமையக்கூடியது. நபிகள் நாயக வாழ்க்கை வரலாறும் அவர்கள் அருளிய பொன்மொழிகளும், இஸ்லாமின் சிறப்பியல்புகளும் இந்த நூலில் இனிய எளிய கவிதைகள் மூலம் விளக்கப்பட்டுள்ளன.

“கொலை, கொள்ளை, விபசாரத்தைக் கொண்டிடோம்:
போர் போர் என்றே அலைந்திடும்
நிலையை மாற்றி அமைப்போம்”

என்பன போன்ற வரிகளிலிருந்து இஸ்லாத்தின் நெறியையும், அத்துடன் ஆசிரியரின் கவிதை நடைச் சிறப்பையும் அறிய முடிகின்றது. பூராவும் எளிய இனிய கவிதையாக அமைந்த இந்த நூல் மார்க்கநெறி விளக்கத்திலும் தமிழ் வளர்ச்சியிலும் ஒரு சாதனையைக் காட்டுவதாக உள்ளது.

முஸ்லிம்களும் தமிழ் அறிந்த மக்கள் அனைவரும் படித்துப் பயன் பெறக்கூடிய நூல் இது. இக்கவிதை நூலின் ஆசிரியர் மௌலவி பாஜில் ஜீ.எம்.எஸ். ஸிராஜ் பாக்கவி அவர்களின் இந்த முயற்சியைப் பாராட்டுகிறேன். அவர்கள் முயற்சி மேலும் வளர வாழ்த்துகிறேன்.

சென்னை-17
2-10-65

காமராஜ்