பக்கம் எண் :

9

NABIGAL
நெஞ்சில் நிறைந்த நபிமணி
மதிப்புரைகள் வழங்கிய மாமேதைகள்
 
பேரறிஞர் சி. என். அண்ணாதுரை அவர்கள்

மௌலவி பாஜில் G. M. S. ஸிராஜ் பாகவி அவர்கள் இயற்றியுள்ள “நெஞ்சில் நிறைந்த நபிமணி” எனும் செந்தமிழ்க் கவிதை நூல், இனிமையும் ஏற்றமும் மிக்கதான முறையில் அமைந்திருப்பது கண்டு பெருமகிழ்வு எய்துகிறேன்.

சுவைமிகு கவிதைகள் மூலம், இருளை அகற்றிய இன்னொளிச் செல்வராம் அண்ணலாரின் செந்நெறியினை எவரும் உய்த்துணரச் செய்திடும் சீரிய பணியாற்றியுள்ளார் நூலாசிரியர்.

“மருளெனும் கடலில் வீழ்ந்தே
  மக்கள்தாம் தவித்த வேளை
அருள்மரக் கலமாய்”    

வந்த வள்ளல்,

“மனிதர்கள் புனித மெய்தும்
மாண்புறும் வழியைக் காட்ட”

என்னென்ன இம்சைகளுக்கு, ஏளனம் ஏச்சுப் பேச்சுகளுக்கெல்லாம் ஆளாக்கப்பட்டார் என்பதனைப் படிக்கும்போது இஸ்லாமியர் மட்டுமல்ல, இஸ்லாமியரால்லாதாருங்கூட உள்ளம் உருகி நிற்பர்.

  முல்லையம் காட்டில் வீசும்
      மோகனத் தென்ற லைப்போல்
நல்லியல் மணம் பரப்ப
    நாயகம் வந்தார் நெஞ்சே !

என்று நூலாசிரியர் கூறுவதுபோலக் கூறிட, நெஞ்சம் நெக்குருகக் கூறிட இன்று கோடி கோடி மக்கள் இக்குவலயத்தில் உள்ளனர். ஆனால் அன்று நபிகள் நாயகம் நன்னெறி அளித்தபோது, புயலெனக் கிளம்பிய எதிர்ப்பு சொல்லுந் தரத்ததன்று. இன்றும் அந்த எதிர்ப்பாளர்களின் இழிதகமைச் செயல்கள் குறித்து பாக்கவியின் கவிதைகள் மூலம் காணும் எவரும் மனம் பதறாமல் இருந்திட இயலாது. அத்துணை எதிர்ப்பையும் நபிகள் நாயகம் தமது புன்னகையால் வென்றார்.

 “முகம்மதின் கொட்டந் தன்னை
      முனைந்துநாம் அடக்கா விட்டால்
இகமதில் வாழ்ந்து மென்ன?
எழுக !”

என்று பகைக்கூட்டம் கிளம்பிற்று - எத்தகைய காட்டு மிராண்டிச் செயலையும் செய்து முடித்திடும் துணிவுடன்.

“கோபத்தை அடக்கு வோனே
    குவலயந் தன்னில் வீரன்”
   “கடுமையை அவர்கள் கொண்டால்
      கனிவதைக் கொள்வோம் நாமே”

என்று கூறினார். நபிகள் நாயகம் கொடுமைகண்டு அஞ்சினாரில்லை. மடமைகண்டு மனம் உடைந்து போனாரில்லை.

“மக்களின் இருளை நீக்கும்
மாபெரும் பணியில்”

தீவிரமாக ஈடுபட்டு வெற்றி பெற்றார்; மக்களுக்குப் புத்தொளி கிடைத்தது.

அச்சம் அவரை அசைத்த தில்லை என்பது போன்றே ஆசை அவரை மயக்கிடவில்லை.

“அரியணை ஆசை என்றால்
அரபுக்கே அரச ராவீர்”

என்று கூறினர் மயக்குமொழி பேசுவதில் வல்லவர்கள். நபிகள் நாயகம் கூறினார்,

“கதிரை என் வலக்க ரத்தில்
    வைத்துபின் இடக்க ரத்தில்
மதியதை வைத்த போதும்
      மனமாறேன் -” ........... என்று.

இத்துணை உறுதியும் கண்ட பிறகே, நபிகள் நாயகத்தின் செந்நெறியினை மேற்கொள்ள கோடி கோடி மக்கள் முன்வந்தனர்.

  “தந்தையே! ஒன்று சொல்வேன்
    தயையுடன் கேட்க வேண்டும்
நொந்துநான் மடிந்த போதும்
மாறிடேன்”

என்று, அன்று நபிகள் நாயகம் கூறியதை - கூறிய மட்டுமல்ல - அம்மொழிவழி நின்று மக்களை நல்வழிப் படுத்தியதை எண்ணும்போது மன எழுச்சி பெறாத மக்கள் இல்லை.

இன்று எதனையும் சிந்திக்க, விவாதிக்க, விளக்கம் கேட்க, மறுக்க, எவருக்கும் இயல்பு மிகுந்த அறிவுக் கதிர் பரவிப் பரவி இருட்டறைகளில் எல்லாம் ஒளிச்சிதறல்கள் பரவிக்கொண்டுள்ளன. இந்நாட்களிலேயே மிகச் சாதாரண சமூக சீர்திருத்தம் செய்ய முனையும்போது, சித்திர வதைப்பட நேரிடுகிறது நபிகள் நாயகம் புதுநெறி புகன்ற அந்நாட்களில் நாடு காடாகிக் கிடந்தது.

“ஓரிறை வழிபா டின்றி
       ஓர்நூறு தெய்வம் வைத்தே
  போரிட்டு மக்கள் வீழ்ந்த
புன்மையும்”

     “கொலைகளைச் செய்தல் மற்றும்
         குடித்திட்டுப் பெண்கள் தம்மை
     விலைப்பொரு ளாகக் கொண்ட
விந்தையும்”

    “பெண்ணெனப் பிறந்து விட்டால்
        புதைக்குழி என்று சொல்லும்
கண்மூடிச் செயலும்”

   “குடிக்காத மக்கள் எல்லாம்
     குடிமக்கள் ஆகார் என்ற
   கொடியதோர் நிலையும்”

இருந்த இருள்சூழ் இடத்தில் புத்தொளி பரப்பிய நபிகள் நாயகத்தின் காலம், கருத்து, மனப்பாங்கு, உள்ளொளிச் சிறப்பு, கொண்ட வெற்றி ஆகிய அனைத்தையும் மிகச் சீரிய முறையில் எடுத்துக்காட்டும் இந்நூல் மன இருள் போக்கும் ஒளிவிளக்காகும். இத்தகு நூலைப் படைத்த பாக்கவி அவர்களுக்கு என் பாராட்டுதலை அளித்து மகிழ்கிறேன்.

சென்னை-34
9-8-63
அன்பன்,
சி. என்.அண்ணாதுரை