பக்கம் எண் :


168 திருத்தொண்டர்புராணம் மூலமும் உரையும்

Periya Puranam
“எண்ணிலான் டெய்தும் வேதாப் படைத்தவ ளெழிலின் வெள்ளம்
நண்ணுநான் முகத்தாற் கண்டான்“

என்ற திருஞான - புரா - 1109 - வது பாட்டுங் காண்க.

     பூமிசை - மாவாழ் - அகலத்துமால் - செந்தாமரைப் பூவிலிருந்தும்
இலக்குமி வாழுதற் கிடமாகக்கொண்ட மார்பினையுடைய விட்டுணுமூர்த்தி. பூ
என்றது இடத்தை நோக்கிச் செந்தாமரையைக் குறித்தது. விட்டுணு தன்
தேவியாகிய இலக்குமியை மார்பில் வைத்திருக்கின்றார் என்பது மரபு.
இதனையே “பங்கயத் திருந்த பொன்னை ஆகத்தில் ஒருவன் வைத்தான்“
என்றார் கம்பர்.

     வானவர் எவரும் ஓவாது - என்று மாறிக் கூட்டுக. ஓவாது -
எப்போதும் நீங்காது. ஓவுதல் - நீங்குதல். நிறைந்து உறைந்து உள்ளது -
நிறைந்தும் உறைந்தும் இருத்தற் கிடமாயுள்ளது. உறைதல் - நீடித்துத்
தங்குதல்.

     உள்ளது தேவாசிரியன் எனும் - உள்ளது; ஆதலின் தேவாசிரியன்
எனப் பெறும்; தேவாசிரியன் - தேவர்கள் ஆசிரயித்து இருப்பதற்கு
இடமாயுள்ளது. அவர்களுக்கு ஆசிரியத் தன்மை பூண்டது. காவணம் -
மண்டபம்.

“நூறு கோடி பிரமர்கள் நொங்கினார்;
ஆறு கோடி நாராயணர் அங்ஙனே;
ஏறு கங்கை மணலெண்ணில் இந்திரர்;
ஈறி லாதவ னீச னொருவனே“

என்பனவாதி திருவாக்குக்களால் அறிகின்றபடி தேவபதங்களெல்லம் அழியுந்
தன்மையுடையன; துன்பங்களோடுங் கூடியன. ஆனால் அன்பர்களோ
எக்காலத்தும் அழியாத தன்மை பெற்று இன்பத்துடனே இருப்பவர்.
“இன்பமே எந்நாளுந் துன்பமில்லை“, “அன்பினால் இன்பமார்வார்.“
ஆதலின் இவர்களை அடுத்துப் பயன்பெற வேண்டியவர்கள் தேவர்களும்
யாவர்களுமாம். அன்றியும் இவர்களது ஏவல்வழி நிற்கவேண்டியவர்கள்.

“...................வாய்தல் பற்றித்
துன்றி நின்றார் தொல்லை வானவரீட்டம் பணியறிவான்
வந்து நின்றார் அயனுந் திருமாலும்....“
- அப்பர் சுவாமிகள தேவாரம்.

     இறைவனுடைய திருவாயிலின்முன் காலம் பார்த்துக் காத்திருப்பவர்கள்
தேவர்களாவர். அதுபோலவே இறைவனது தன்மையைப் பெற்ற அடியவர்கள்
கூடி நிறைந்துள்ள தேவாசிரியன் திருவாயிலிலும் அவர்கள்
காத்திருக்கவேண்டிய நியதியும் காண்க.

     சோழ நாட்டையும் அதன் பின்னர் அதனுடைய திருவாரூர்த்
திருநகரத்தையும் அதன் பின்னர் அந்நகரத்திலுள்ள பூங்கோயிலையும்
முறையே காட்டி நம்மைத் தரிசிக்கச் - செய்தார் ஆசிரியர். பின்னர்த்
தேவாசிரியனையும் காட்டி அதற்கு அப்பெயர் போந்த காரணத்தை
அறிவிக்கும் வகையாலே அந்த முறையிலே திருவாயிலில் காத்திருக்கும்
தேவர்களைக் காட்டி உள்ளே அழைத்துச் சென்று அங்கு எழுந்தருளி
யிருக்கும் அடியார்களுடைய தன்மையையும் ஆசிரியர் அறிவித்து அவர்களை
நாம் வணங்கும்படி செய்கின்ற முறையையும் காண்க. மேலும் இந்திரன்
முதலியோரது பதவிகளை எல்லாம் வெறுத்து ஒதுக்கியவர்கள் இங்கு உள்ளே.
கூடியிருக்கும் அடியார்கள் என்று அவர்களுடைய இயல்பினை முகவுரை
ஆக அறிவித்தபடியுமாம். ‘வீடும் வேண்டா விறலின் விளங்கினார்' என்று
பின்னர் முடித்துக் காட்டியதையுங் காண்க. 2

138. அரந்தை தீர்க்கு மடியவர் மேனிமே  
  னிரந்த நீற்றொளி யானிறை தூய்மையாற்