பக்கம் எண் :


174 திருத்தொண்டர்புராணம் மூலமும் உரையும்

Periya Puranam
விதிர்த்து“ - திருவாசகம். விரிப்புறு சிந்தையார் - அன்பின் நிறைவினால்
உடலிலே தழைத்த அசைவை உறச் செய்யும் சிந்தையுடையார் என்க.
“திருமேனி கன்னில் அசைவும்“ என்று பின்னர்க் கூறுதலுங் காண்க.
இவ்விளைவுகளின் தன்மையை,

“..........ஐயனார்க் காளாகி யன்புமிக்கு அகங்குழைந்து
மெய்யரும்பி அடிகள்பாதங் கையினாற் றொழும் அடியார்.......“

என்ற திருத்தாண்டகத்தால் அறிக.

     கைத் திருத்தொண்டு
- உழவாராப்பணிவிடை செய்தல்,
திருவலகிடுதல், திருமெழுக்கிடுதல், திருவிளக்கிடுதல், திருநந்தவனம்
வைத்தல், திருமாலை கட்டுதல் முதலான கைத் திருத்தொண்டு செய்தல்.
இவை சரியையின்பாற் படும். இதனை “நிலைபெறுமா றெண்ணுதியேல்“ எனும்
திருத்தாண்டகத்தில் அருளினார் அப்பர் சுவாமிகள்.

     கடப்பாடு
- கையினாலும் மெய்யினாலும் செய்யும் கடமைப்பாடு.
“கைகாள் கூப்பித் தொழீர்“, “தலையே நீ வணங்காய்“ முதலிய
திருவாக்குக்களிற் கண்டபடி அந்தந்த அவயங்களின் கடமையை
நிறைவேற்றல்.

     திருநாவுக்கரசு சுவாமிகள் முதலிய பெரியார் பலரும்
கைத்திருத்தொண்டு செய்தல் கை முதலிய புறக் கரணங்களைச் சிவத்திலே
தொழிற்படுத்தலாகிய கடமையை நோக்கியே யல்லது இப்பெரியார்கள் சரியை
மட்டில் நிற்பவர்கள் என்று கொள்ளற்க என்னும் கருத்தை வைத்துக்
கடப்பாட்டினார் என்றார். சீவன் முத்தர்களுக்குச் சிவாலய சேவை விதித்த
சிவஞானபோதம் 12-ம் சூத்திரத்தின் கருத்தை நோக்குக. அன்றியும் கடப்பாடு
என்றதனால் இவர்கள் கைத்தொண்டு செய்தல் ஒரு பலனையும் விரும்பியன்று
என்பதும் பெற்றாம். “என்கடன் பணி செய்து கிடப்பதே“- தேவாரம். “நன்றே
செய்வாய் பிழைசெய்வாய் நானோ இதற்கு நாயகமே“ - திருவாசகம்.
இங்ஙனம் தொண்டு செய்வோர் ஒரு பலனையும் விரும்பிச் செய்யாவிடினும்,
“செய்வினையும் செய்வானும் அதன்பயனுங் கொடுப்பானும், மெய்வகையால்
நான்காகும் விதித்தபொருள்......“ என்று சாக்கிய நாயனார் புராணத்தில்
அறிகின்றபடி இவர் செய்யும் கைத்தொண்டுக்கு உரிய பலன் இறைவனால்
தரப்பெறுவதாம். இதனையே “என்கடன் பனி செய்து கிடப்பதே“ என்ற
அப்பர் சுவாமிகள், முன்னர் “தன்கடன் அடியேனையுந் தாங்குதல்“
என்றருளினர். அவன் தாங்குதலால் பணி செய்வோம் என்றும்,
பணிசெய்தலால் தாங்குவன் என்றும் இருவகையும் ஆம். கைத்தொண்டின்
பயனைப் “பெரும்புலர் காலை மூழ்கி“ எனவும், “விளக்கினார்பெற்ற இன்பம்“
எனவும் வரும் அப்பர் சுவாமிகள் தேவாரங்களாலும் பிறவாற்றானும் அறிக.
“கைவினை செய்தெம் பிரான்கழல் போற்றுதும் நாமடியோம்“ எனத்
திருஞான சம்பந்த சுவாமிகள் பாராட்டியதும் காண்க. இத்தொண்டின்
சிறப்பினாலே திருவீழிமிழலையில் அப்பர் சுவாமிகள் வாசியில்லாக் காசு
பெற்றனர் என்பதையும் இங்கு நினைப்போமாக.

“......கைத்தொண்டாகும் அடிமையினால்
வாசி யில்லாக் காசுபடி பெற்று வந்தார் வாசீகர்...“
                         - திருநா - புரா - 260

     எண்ணிலார் - இப்பாட்டுக் குளகமாய் “எண்ணிலார்“ என்னும் எழுவாய்
“புனிதர்கள்“ என்னும் பெயர்ப்பயனிலை கொண்டு முடிந்தது. 5

     141. (வி-ரை.) மாசிலாத மணிதிகழ் மேனி - மாசிலாத மேனி
என்றுகூட்டுக. மாசிலாத மணி என்று மணியுடன் கூட்டியுரைப்பதுமாம்.
தன்னைப் பூண்டவர்களது மாசுகளை இல்லையாகச் செய்யும் என்க. அடியவர்
திருமேனியில் விளங்கிய போது மணியானது தனது இயல்பாகிய தூய
விளக்கத்தின் மேலாயது - என்பார் - மணிதிகழ் மேனி என்றார் - மணி
திகழ்தற்கு இடமாகிய மேனி. மணி -