பக்கம் எண் :


50 திருத்தொண்டர்புராணம் மூலமும் உரையும்

Periya Puranam

     வேதமூலம - என்பது பிரணவம், குடிலை, ஓங்காரம் முதலிய
பெயர்களாற் பேசப்பெறுவது. சுத்த மாயையின் காரியமாகிய நாதமே இதன்
உருவம். இதை இயக்குபவன் இறைவன். நாதம் முதற்காரணமும், இறைவன்
நிமித்த காரணமும், வேதம் காரியமுமாம். “ஓமென்னும் பதமதனில் வேதமாதி
உற்பவிக்கும் ஆலவித்தி னுதிக்கு மாபோல்” - சிவதருமோத்தரம். “குடிலை
என்னும் தடவயனாப்பண், அருள் வித்திட்டுக் கருணைநீர் பாய்ச்சி, வேத மென்னும் பாதவம் வளர்த்தனை ...” - குமரகுருபர சுவாமிகள். இது ஓம்
என்ற சமட்டிநிலை - கூடியநிலை; அகார உகார மகாரமாகிய வியட்டி நிலை
- பிரிந்த நிலை என்ற இருநிலைகளையுடையது. அகாரம் வாய் அங்காத்தல் -
இதழ்கள் திறத்தலாலே பிறப்பது; உகாரம் திறந்த இதழ்கள் குவித்தலால்
பிறப்பது; மகாரம் - அந்த இதழ்கள் மூடுவதாற் பிறப்பது - என்பர் இலக்கண
நூலோர். எனவே, முன் மூடியிருந்த இதழ்கள் திறந்து குவிந்து பின்
மூடுவதால் வரும் பிரணவம் என்க. இதுவே பிரளயத்தில் இறைவனிடத்து
ஒடுங்கியிருந்த உலகம் மீளவும் சிருட்டியில் தோன்றி - நின்று - பின்னரும்
ஒடுங்குதலுமாம்.

     அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உண்டு; அண்டமாகியது உலகம்;
பிண்டமாகியது உயிர்கள்; அண்டத்தின் உடம்பு பூமி; பிண்டத்தின் உடம்பு
உயிர்கள் தங்கும் உடற்கூடு; பூமியின் இதயம் திருவாரூர்; உயிர்களின் இதயம்போல் பூமிக்குத் திருவாரூர் இதயகமலம், உயிர்களின் இதயத்தில்
விளங்குவதுபோல் இறைவன் திருவாரூர்ப் பூங்கோயிலிலே புற்றிடம்
கொண்டும் தியாகேசனாகவும் வெளிப்படுவன் என்க. உயிர்களுக்கு
இதயகமலம்போல் பூமியாகிய மங்கைக்கு இதயகமலமாக விளங்குவது
திருவாரூர் என்பது.

     கமலம் - பூவுலகம் ஒரு மங்கை எனவே கொண்டு பூதேவி
என்றழைப்பர். திருவாரூருக்கும் அங்கிருக்கும் குளத்துக்கும் கமலாலயம்
என்றபெயரும் உண்டு. இதன் கோயிலுக்குப் பூங்கோயில் என்று பெயர்.

தாங்கோல வெள்ளெலும்பு பூண்டுதம் மேறேறிப்
பாங்கான வூர்க்கெல்லாஞ் செல்லும் பரமனார்
தேங்காவி நாறுந் திருவாரூர்த் தொன்னகரில்
பூங்கோயி லுண்மகிழ்ந்து போகா திருந்தாரே.

     எனவரும் அப்பர் சுவாமிகள் தேவராத்தில் பூங்கோயிலெனக் குறித்தது
அறிக.

     “பூவெனப்படுவது பொறிவாழ் பூவே” என்றபடி பூங்கோயில் = (இதயம்);
கமலம் + ஆலயம் = கமலமாகி அமைந்த ஆலயம் என்பதாம்.

     பிரமதேவரிடத்திலே நீண்ட ஆயுள் பெற்ற குதிரை முகமுடைய
அயக்கிரீவன் என்ற அசுரனைக் கொன்றபின் சார்ங்கமென்னும் தமது
வில்லின் ஒரு நுனியிலே சார்ந்து உறங்கிய விட்டுணுமூர்த்தி அவ்வில்லின்
நாண் அற்றபடியால் அது கிளம்பவே தலையிழந்தார் எனவும், அதற்காக
இங்குத் தவஞ் செய்து இலக்குமி மங்கலம் பெற்றாள் எனவும் தேவீபாகவதம்
கூறுமென்பர்.

     மேதினி - பூமி. மது என்னும் அசுரன் விட்டுணுமூர்த்தியினால்
சங்கரிக்கப் பட்டு அவனுடைய தசைகள்சேர்ந்து உண்டாகிய காரணம் பற்றி
மேதினி என்ற பேர் கொண்டதென்பர்.

     மேதினிக்காதன் மங்கை - மேதினியாகிய காதலிக்கப்படும் மங்கை.
சிதம்பரம் ஆகாயத்தலம். திருவாரூர் பிருதிவித்தலம். ஆகாயம் முதலாகவும்
பிருதிவி இறுதியாகவும் விளங்குதலால் முன் பாட்டிலே சிதம்பரத்தையும்
இப்பாட்டிலே திருவாரூரையும் குறித்தார் என்பது. இது தோற்றத்தின் முறை.