பக்கம் எண் :


680 திருத்தொண்டர்புராணம் மூலமும் உரையும்

Periya Puranam

கருதிப் பன்மையிற் றம்மொடு என்றும், “பெறுமவற்றுள் யாமறிவதில்லை“
(குறள்) என்றபடி பெறற்கரியதும் இடுதற் கரியதுமாகிய தம்பொருள் என்ற
சிறப்புத்தோன்ற தனை என்றுங் கூறியபடி. சிறுவனும் என்றதனால் இளம்
புதல்வர் மனைவியாருடன் இருந்தனர் (541) என்று குறிப்பார் தம்மொடு
என்றார் எனக் கொள்வாருமுண்டு.

     கொடு - உடன் அழைத்துக் கொண்டு. முன்னர்த் தனம் முதலிய
பொருள்களை இட்டதுபோல இவர்களையும் ஒவ்வொருவராக இடாமல்
இவ்விருவரையும் தம்முடனே கொண்டு துலையேறியதென்னையோ? எனின்,
சிறுவரை முன்னர் இடுவது என்னிலோ? அவர் தாய்தந்தையரை விட்டு நிற்க
இயைபில்லை. அவரையும் மனைவியாரையும் ஒக்கவே முன்னர்
இடுவதென்னிலோ; என்றும் பிரியேன் என்ற மணக்காலத்து உறுதிச் சொல்
வழுவாமாதலின் அஃதும் இயைபில்லை. துலையில் முன்னர் தம்மையே
இடுவதென்னிலோ? “உங்கள் தனங்களி னாகிலுமிடுவீர்“ (538) என்று
மறையோர் பணித்தலின், “தம்பொருள் என்ப தம் மக்கள்“, “மங்கல மென்ப
மனைமாட்சி “ என்பவாதலின் மனைவி மக்களே தமது பொருளாகிய உயிர்ச்
சார்புகளாதலின் அப்பொருள்களை இடாது ஒழியவும் நியாயமில்லை; தாம்
மட்டில் முன்னர் ஏறத் துலை நேர் நிற்குமாயின் தாம் முதல்வரிடமும்
இவர்கள் உலகினிடமுமாக நிற்கவந்து, தாம் ஆயுளளவும் பிரியேன் என்ற
சொற்பிழைக்கும்; தாம் ஏறித் துலை நேர் நில்லாதாயின் தம்மை அவ்வாறு
மறையவருக்கு நிறுத்துக் கொடுத்து அவருடமையாயின பின்னர்த் துலைநேர்
காண இவ்வுயிர்ப் பொருள்களை அவருக்குத் தாம் ஒப்புக்கொடுக்க
உரிமையின்றாம்; இவை முதலிய நியாயங்கள் பற்றி மனைவியாரொடு
புதல்வன்
றனையும் தம்முடன் கொண்டு தட்டு ஏறினார் என்க. மேலும் தமது
செயலில் பாதி உரிமையும் பொறுப்பும் மனைவியார்க்கு உண்டு என்பது நீதி
நூல். இக்காரியத்தில் அதுபற்றி மனைவியார் “இடர் கூர்ந்தனர்“ என
523-முன்னர்க் கூறியதுங்காண்க. அவர் பொருள் தந்தம் “வினையான் வரும்“
என்றபடி புதல்வரும் தமது செயலினை நேர்காணும் பொறுப்புடையார்
என்பனவாதி நியதிகளுங் காண்க.

     தனித்துலை - அளக்கலாகாதனவாகிய இறைவன் கோவணத்தையும்
அடிமைத் திறத்தையும் அளந்து காட்டும் கருவியாயினமையின் தனி என்றார்.
தகவால் - தகவினாலே. தகவு - தகுதி. மேலே கூறிய நியாயவகை குறித்தது.

     இனைய செய்கையில் - இத் தன்மைத்தாகிய செயல். இனைய -
முன்னர் நிகழ்ந்த செய்தியாவும் குறித்தது. இனையதொன்று - 523 பார்க்க.
செய்கை - அந்த நிலையினை மாற்றுதற்கு இறுதியாகத் துணிந்த பரிகாரச்
செயலாகிய இது. இதற்குமேல் வேறு செயல் இல்லையாதலின் இவ்வாறு
முடித்துக் கூறினார். ஏறுவார் - வினையாலணையும் பெயர்; ஏறுவாராகிய
நாயனார். கூறுவார் - முற்றெச்சம். கூறுவாராகி. வரும் பாட்டில் என்று
எனும் வினையெச்சங் கொண்டது. எடுத்துக் கூறுவார் - என மாற்றுக.
எடுத்து - முடிந்த பொருளாக எடுத்து. உரத்த சத்தத்திலெடுத்து
என்பாருமுண்டு.

     தனையுடன் கொடு தலைத்துலை - என்பதும் பாடம். 42

     544. (வி-ரை.) “இழைத்த ......நிற்க“ - இது துலையின் ஏறுதற்குமுன்
நாயனார் கூறிய சூள். யாதாயினுமொரு பெருங் காரியத்தைச் செய்வோர்
முடிந்த பொருளாக இவ்வாறு தம் உண்மையினை எடுத்து உறுதிமொழி கூறிச்
செய்வது மரபு.

ஏய்ந்த வடிமை சிவனுக்கியா னென்னி, லின்றென் கண்பெற்று
வேந்த னெதிரே திருவாரூர் விரவுஞ் சமணர் கண்ணிழப்பா;
ராய்ந்த பொருளுஞ் சிவபதமே யாவ“ தென்றே, யஞ்செழுத்தை
வாய்ந்த தொண்ட ரெடுத்தோதி, மணிநீர் வாவி மூழ்கினார். -19.

என்ற தண்டியடிகணாயனார் புராணம் முதலியவை காண்க.