பக்கம் எண் :


1070 திருத்தொண்டர்புராணம் மூலமும் உரையும்

 

     (வி-ரை.) மேல் மூன்று பாட்டுக்களிற் கூறிய நீரால் வளம்பெற்ற
நிலமும் அந்நிலத்துக்குரிய மறையோரும் என்றவற்றையே அனுவதித்து
வேறொருவரையாற் பின்னுங் கூறி முடிக்கின்றார். ஆற்றைக்கண்டு
அதன்வழியே போந்தான் ஒருவன் அதனால் வளம்பட்ட நாட்டினைக்
காண்பான். பிறகு அந்நாட்டின் உள்ளே செல்ல அதன் சிறப்புடைய
நகரங்காண்பான் (831). அவ்வாறு செல்லும்போது நகர்ப்புறத்துள்ள வயலும்
சோலையும் அங்குப் புறநகரில் உள்ள வேள்விச் சாலையும் கண்டுசெல்வான்
(832). அவ்வாறு காட்சிப்பட்ட பொருள்களினின்றும் போந்த ஒலிகள் பின்பு
அவனுக்குப் புலப்படும் (833). அப்பொருள்களினின்று வரும் மணங்கள்
அதன்பின்னரே அறியப்படும் (834) என்றிம்முறையிற் கூறிய அழகு காண்க.
ஒளியலைகள் மிக்கவேகத்தினும், ஒலி அலைகள் அதனிற் பன்மடங்கு
குறைந்த வேகத்தினும், நாற்ற அணுக்கள் அதனினும் பன்மடங்கு குறைந்த
வேகத்தினும் செல்வன என்பதும், இதுவேயன்றி, ஒளியுணர்வு
ஏனையுணர்வுகளினும் மிக விரைவிற் புலனாகின்றதன் காரணம் பிற
இந்திரியங்களைப் போலல்லாது கண்ணிந்திரியம் தன்னிலையினின்று
முன்சென்று பொருள்களிற்றாக்கி விடயிக்கின்றதனாலும் ஆவதாம் என்பதும்
சாத்திரம். 67 - ல் உரைத்தவையும் பிறவும் பார்க்க.

     துங்கநீள் ... வாவி - இதனால் மேதிகளினியல்பு குறித்த
தன்மையணிச் சிறப்புக் காண்க. மேதிகள் நீர்நிலைகளுட் படிந்து உழக்கி
நெடுநேரம் தோய்ந்துகிடக்குமியல்பும், அவை எப்போதும் மிகக் பால்சுரந்து
சொரியுமியல்பும், அவற்றின் வண்ணமும், உருவும் ஒருங்குகாட்டினார்.
நீர்வளமும் ஊர்வளமும் குறித்தவாறுமாம். சொரிந்த - சொரிதற்கிடமாகிய.
நீள்மருப்பின் துங்க மேதி - என மாற்றுக. பால் சொரிதல் - இது
இயல்பானே மிக்கபால் சுரத்தலாலாவது. மேதிகள் கொழுத்துச்
செழித்தலாலும், அன்பு கூர்வதனாலும் தாமாகப் பால்சொரியும். "கறவா
மேபால் பொழிந்தன வால்" என்ற சண்டீசநாயனார் புராண வரலாறும்,
"வருமேனிச் செங்கண்வரால் மடிமுட்டப் பால்சொரியுங், கருமேதி
தனைக்கொண்டு கரைபுரள்வ திரைவாவி" என்ற திருநாவுக்கரசு நாயனார்
புராணமு(8)ம் பிறவும் காண்க. பாய்ந்து - பாய்தலால்.

     வாசக்கமலமும் - முன்னர் இயல்பின் வாசமுடைய கமலமும்
தனதியற்கை மணத்தின்மேல் தீம்பால் வாசங்கமழும். உம்மை உயர்வு சிறப்பு.

     துங்கமேதி - பரிய வண்ணமுடைய எருமைகள். இக்கருத்தே பற்றி
"உருமேக மெனமண்டி" (திருநா - புரா - 8) எனப் பின்னர்க் கூறுவார்.

     தீம்பால் நாறும் - பாலின்நல்லமணமும் சுவையும் கூறியபடி. இவை
நமது உணர்ச்சிக்குப் புலனாகாதவாறு இந்நாளின் பால் மாறியது கலிகாலக்
கொடுமைகளுள் ஒன்று என்க.

     மங்குல்தோய் மாடச்சாலை - சாலை - வேள்விச்சாலைகள் (832).
இவற்றில் நியதியாய் நிகழும் தீயின்தொழிலால் இவை தீப்பற்றாதவாறு
இவற்றை மிக உயரமுடைய மாடங்களாக அமைத்தல் வழக்கு.

     மருங்கு இறை ஒதுங்கும் மஞ்சு - மேகந்தவழும் அளவு
உயர்ந்துள்ளன. ஆதலின் அவை செல்கையில் சிறிது ஒதுங்குவன என்பது.
மஞ்சு - சாதி ஒருமை. Passing clouds என்பர் நவீனர்.

     மஞ்சும் அங்கு அவை பொழிந்த நீரும் - ஒதுங்கும்போது
அந்தச்சாலை மாடங்களைத் தாக்கிய மேகங்கள் நீர்பொழிந்து செல்வன.
இக்காட்சி உயர்ந்த மலைகளினும் மழைக்காலங்களில் மழை விட்டுவிட்டுப்
பெய்யும் ஏனையிடங்களினும் காணலாம்.

     அங்கு என்றதனால் பிற இடங்களில் மஞ்சும் நீரும் ஆகுதிப்புகை
நாறுகின்ற நிலை யில்லையாம் என்பது.

     ஆகுதிப் புகைப்பால் நாறும் - வேள்விப்புகையின் பகுதி மணக்கும்
என்க. புகைப்பால் - புகைப்பினாலே, நாறும் - தோன்றும் - உண்டாகும்
என்று கொண்டு