பக்கம் எண் :


குங்குலியக்கலயநாயனார்புராணம்1071

 

வேள்வியின் பயனாக மஞ்சும் நீரும் - மழையும் - உண்டாகும் என்றுரைக்க
நின்றதும் காண்க. "வேள்வி நற்பயன் வீழ்புன லாவது", (823) "உலக மின்புறச்
சந்தவேள்விகள் முதல் சங்க ரர்க்குமுன், வந்தவர்ச் சனைவழி பாடு
மன்னவாம்" (822) என்ற ஆளுடையபிள்ளையார் புராணமும் பிறவும் காண்க.

     மாடச்சோலை - என்பதும் பாடம். 4

835.



மருவிய திருவின் மிக்க வளம்பதி யதனில் வாழ்வார்
அருமறை முந்நூன் மார்பி னந்தணர் கலய ரென்பார்
பெருநதி யணியும் வேணிப் பிரான்கழல் பேணி நாளும்
உருகிய வன்பு கூர்ந்த சிந்தையா ரொழுக்க மிக்கார்.



5

     (இ-ள்.) வெளிப்படை. பொருந்திய திருவினாலே மிகுந்த
வளத்தையுடைய அந்தப் பதியில் வாழ்வாராகிய அரிய மறைவிதிப்படி பூணூல்
அணிந்த மார்பினையுடைய அந்தணராவார் கலயர் என்று சொல்லப்படுபவர்;
கங்கையினை அணியும் சடையினை யுடைய சிவபெருமானது திருவடிகளைப்
போற்றித் தினமும் உருகிய அன்புமிக்க மனத்தையுடையவரும்
சைவவொழுக்க மிகுந்தவருமாவர்.

     (வி-ரை.)மருவிய - மேற்பாட்டிற் கூறியபடி வேள்விப் புகைப்பால்
நாறும் மழை நீரின் பெருக்கினாற் பொருந்திய. இறைவன் ஆணையினால்
குபேரன் தன் பெருநிதியம் கொணர்ந்து சேர்த்ததனால் வந்து மருவிய.
திருவருட்சாதனமாகிய திருவும், அதனால் ஏனை எந்தச் செல்வத்துக்கு
மில்லாததாகிய மிக்க வளமும் என்று இச்சரித நிகழ்ச்சியின் குறிப்பும் காண்க.
வளம் - இவ்வுலக வளமும் அவ்வுலக வளமும்.

     வாழ்வார் - வாழ்வாராகிய கலயர் என்பார் - சிந்தையாரும்
ஒழுக்கமிக்காருமாவர் என முடிக்க.

     மறைமுந்நூல் - மறைகளில் விதித்தபடி மறைமந்திரங்களோதி
அணியப்படுவதும், மறை ஒதும் நியதியுடைமை ஏற்று அதற்கடையாளமாவதும்
ஆகிய முந்நூல் என்க. முந்நூல் - மூன்றாகச் சேர்க்கப்பட்ட
இழைகளையுடைய நூல். பிரமசாரிக்கு மூன்று இழையும், இல்வாழ்வானுக்கு
இருமூன்றாக ஆறிழையும், அவருள் மக்களுடையானுக்கு மும்மூன்றாக
ஒன்பதிழையும் கொண்ட நூல் அணிதல் விதி; ஆதலின் முந்நூல் எனப்படும்.
இங்கு முந்நூல் - மும்மூன்றிழை குறித்தது. ஒன்பது போலவர்
மார்பினினூலிழை என்று, அப்பர் சுவாமிகள் தனித்திருக் குறுந்தொகையில்
இறைவனது பூணூலைப்பற்றி அருளுதலும், "ஒன்பதுகொண்ட மூன்றுபுரி
நுண்ஞான்" என்ற திருமுருகாற்றுப்படையும் காண்க. இவ்வாறன்றி அருமறை
அந்தணர் என்று கூட்டி யுரைப்பினுமமையும்.

     அந்தணர் - மறைமுந்நூன் மார்பினர் என்றலே அமையும், அந்தணர்
என்றது மிகையாமெனின் அற்றன்று; அரசரும் வணிகரும் நூலணிய மறைவிதி
யுளதாதலின் அவரினின்று பிரிக்க அந்தணர் என்றார். ஆயின் அந்தணர்
என்றலேயமையும் மறைமுந்நூல் என்றல் மிகையாமெனின். அற்றன்று.
அந்தணர்களுள் ஆச்சிரமபேதம் பற்றியும் பிறவற்றாலும் முந்நூல் அணிதல்
இல்லாத அறவோரும் உளராதலின் இவர் அவ்வாறன்றி மறைவிதிப்படி
இவ்வாழ்க்கையினின்று அந்தணர் என்று காட்ட மறைமுந்நூல் மார்பின்
என்றலும் வேண்டுவதாயிற்று.

     கலயர் - இது திருக்கடவூர் இறைவனது பெயர். கலயம் - கலசம் -
கடம், தேவர்கள் கொணர்ந்த அமிர்தகலசமே சிவலிங்கத் திருமேனியாக
உருக்கொண்டூன்றிய தலம் என்ற தலசரிதம் காண்க. அக்காரணம்பற்றி இங்கு
இறைவர் கலயர் என வழங்கப்பெறுவர். அந்தந்தத் தலத்து எழுந்தருளிய
கடவுளரின் பெயரை அவ்வவரை