பக்கம் எண் :


1072 திருத்தொண்டர்புராணம் மூலமும் உரையும்

 

வழிபட்டு ஒழுகுவோர்க்கு இட்டுவழங்கும் வழக்கம்பற்றி இந்நாயனாருக்கு
கலயர்
எனப் பேரிட்டு வழங்கப்பட்டனர்.

     பெரு நதி - கங்கை. உருவாலும் அளவாலும் பெரிதாதலோடு
சிறப்பாலும் பெரிதென்பார் பெருநதி என்றார். அஃதாவது சிவபெருமான்
சிரத்திற் றாங்கப்பெற்ற பெருமை வேறு எந்நதிக்குமில்லாமல் இதற்கே
சிறப்பாயுரியதாதல். கங்கைதோய்ந்த நீள்சடையார் - (831) என்றவிடத்
துரைத்தவை பார்க்க.

     நாளும்பேணி உருகிய என்க. உருகுதலுக்குக் காரணம் அன்பும்
பேணுதலுமாம். அன்பு கூர்ந்த உருகிய சிந்தை எனக்கூட்டுக. அன்பினாற்
பேணுதல் சாதனமும் - சிந்தை உருகுதல் அதனாற்பெறும் பயனுமாம்.

     ஒழுக்கம் மிக்கார் - ஒழுக்கத்தால் மிகுந்தவர். ஒழுக்கம் என்பது
இங்கு வேதங்களிற் கூறப்பட்ட தர்மம்சர - சத்யம்வத என்பனவாதி
உலகநெறி நிற்கும் ஒழுக்கமன்றிச்ச சிவாகமங்களில் விதித்த சரியையாதி
சன்மார்க்கம் குறித்தது. வேதநெறி சைவநெறி என்ற இரண்டனுள் வேத
ஒழுக்கம் முன்னர் "மறைமுந்நூல் மார்பி னந்தணர்" என்றதனாற்
கூறப்பட்டது காண்க. "வேதநெறி தழைத்தோங்க மிகுசைவத் துறைவிளங்க"
என்றதும் காண்க. இவ்வாறன்றிச் சிந்தையார் - என்றதை ஆறாம்
வேற்றுமைத் தொகையாகக் கொண்டு, சிந்தையார்களது சைவ ஒழுக்கம்
என்றுரைப்பினுமமையும். இவ்வாறுவந்த சைவ ஒழுக்கத்தை
மேல்வரும்பாட்டாலும், அதனின் மிக்கு நின்ற தன்மையை அதற்கு
மேல்வரும் பாட்டாலும் விரித்துக் கூறுவார்.

     இப்பாட்டால் நாயனாரது நகரச்சிறப்பும், மரபும், பேரும் சைவ
ஒழுக்கத்திறமும் கூறப்பட்டன.

     மார்பர் - என்பதும் பாடம். 5

836.



பாலனா மறையோன் பற்றப் பயங்கெடுத் தருளு மாற்றான்
மாலுநான் முகனுங் காணா வடிவுகொண் டெதிரே வந்து
காலனா ருயிர்செற் றார்க்குக் கமழ்ந்தகுங் குலியத் தூபஞ்
சாலவே நிறைந்து விம்ம விடும்பணி தலைநின் றுள்ளார்.



6

     (இ-ள்.) வெளிப்படை. (அவர்), பாலனாகிய மறையவராம்
மார்க்கண்டேய முனிவர் பற்றிக்கொண்டதனால் அவரது பயமுழுதுங் கெடுத்து
அருள் செய்தவாற்றினால் விட்டுணுவும் பிரமதேவனும் காணாத
வடிவினைக்கொண்டு வெளிப்பட்டு வந்து காலனை உதைத்துருட்டி உயிர்
போக்கிய அமிர்தகடேசராகிய சிவபெருமானுக்கு மணம்மிக்க
குங்குலியத்தூபத்தை மிகவும் நிறைந்து வீசும்படியாக இடுகின்ற திருப்பணியிற்
சிறந்து நின்றவராயினார்.

     (வி-ரை.) பாலனாம் மறையோன் - மார்க்கண்டேயமுனிவர். பாலன்
- பதினாறு வயதுடைமையிற் பாலன் என்றார். சிவபெருமான் அருளிய
வரத்தினால் இவர் என்றும் அந்தப் பதினாறுவயதே உடையராகின்றாராதலின்
அச்சிறப்புக்குறிக்கப் பாலன் ஆம் என்றார்.

     பற்ற - பற்றிக்கொண்ட காரணத்தினால். காரணப் பொருளில்வந்த
வினையெச்சம். மழைபெய்யக் குளநிறைந்தது என்பதுபோலக் காண்க.

     பயம் - எல்லாவற்றுக்கும் மேலான மரண பயம். இங்கு அவர்
பற்றுதற்குக் காரணமாய் வந்த காலபயம் குறித்தது.

     பயங்கெடுத்தல் - காலவேதனையைப் போக்குதல். அருளுதல் -
சிவப்பேறாகிய மீளாநெறியில் வைத்தல். பாசநீக்கமும் (உண்மையில் இது
காலபாச நீக்கமாம்.) சிவப்பேறுமாகிய இருபயனுங் குறித்தார். "வழிபாடு
செய்யும் பாலன் மிசைச்சென்று பாசம் விசிறி மறிந்தசிந்தைக் காலன்" என்ற
அப்பர்சுவாமிகள்