பக்கம் எண் :


குங்குலியக்கலயநாயனார்புராணம்1085

 

     சாலநீபசித்தாய் - நாயனார் தமது பசியையும் தாம் அறியாது
சிவத்தியான நிட்டையில் வீற்றிருந்தாராதலின், அவரது பசியை அவர்க்கு
அறிவுறுத்தவே "சாலநீ பசித்தாய்" என்றிறைவன் அருளியபடி. "உன்
பசியினைபும் உன் மனைவி மக்கள் முதலியோர் பசியினையும் நீ அறியாய்;
நாம் அறிவோம். நாம் அறிவிக்க நீ அறிவாய்" என்றது குறிப்பு. மனவசீகர
்நிபுணனால் வசீகரிக்கப்பட்ட ஒருவன் அந்நிபுணன் சொல்லியவாறெல்லாம்
அனுபவங் கூடியும், அவன் சொல்லாதவழி அனுபவங் கைகூடாமலும் உள்ள
நிலையை இங்கு வைத்துக் காண்க. "அறிவிக்க வன்றி யறியா உளங்கள்"
என்பது ஞானநூல். ஏனைய உயிர்கள் ஆணவ மயக்கிலாழ்ந்து கிடத்தலின்
இறைவனை அறியா. இங்கு நாயனார் சிவனடி பரவிய சிந்தையில் ஆழ்ந்து
கிடத்தலின் உலகை அறியாதிருந்தனர்; ஆதலின் அடியவர் அறியும்
ஆற்றால்
என்றார்.

     பாலின் இன் அடிசில் - பாலுடன் கலந்த இனிய அமுது. இன் உவம
உருபாகக் கொண்டு, தாயினது பாலினும் அதிக சுவையும் குணமும் கொண்ட
அடிசில் என்றுரைத்தலுமாம். "தாய்க்குப் பின் தாரம்", "மனைவி கணவனை
ஊட்டுவத்துக் காண்பதில் தாய் போல இருத்தல் வேண்டும் என்பன
உலகநூல் நீதிகளாதலின் இங்கு மனைவியார் இனி ஊட்டப்போகும் அடிசில்
தாயின் பாலினும் இனிமையுடையதாம் என்பது குறிப்பு. மற்றொரு
வகையாலும் இவ்வடிசில் இனிதேயாம்; என்னை?; எல்லாவுயிர்களுக்கும்
"பானினைந்தூட்டும் தாயினுஞ் சாலப் பரிந்து" அளிக்கும் தாய்தந்தையாகிய
நம்பரருளிய அடிசிலாதலின் இது "அன்னைமுலைத் தீம்பாலி னரிய
சுவைத்"தேயாம் என்க. நம்பரருளினால் (844) எம்பிரான் அருளாம் (846),
அருள்தர (848) என்று அருட்சத்தியைப் போற்றியது காண்க. இனி, பால்
பான்மை எனக் கொண்டு, உனது அன்பின் தன்மைக் கேற்ற பான்மையினால்
வந்த இனிய அடிசில் என்றுரைத்தலு மொன்று.

     பருவரல் ஒழிக - இப்போது உன் பசி முதலியதுன்பங்களை நீ
அறியாய்; நாம் அறிவிக்க அவற்றை அறிவாயாதலின் அத்துன்பம் தீர்க.
ஒழிக என்றதுணிபினால் இப்பிறவியில் மட்டுமன்றி இனி எஞ்ஞான்றும்
அத்துன்பம் உனக்கில்லாமல் தீர்வதாகிய முத்தி நிலையும் பெறுக என்பதும்
உடன்குறிக்கப்பட்டது.

     என்றார் - அசரீரி எனப்படும் தமது எங்கும் நிறைந்த ஒலியினால்
அவர் செவிப் புலப்படுமாறு கூறியருளினார். நேரே காட்சிதந்து
சொல்லியருளினார் என்பாருமுண்டு. அஃதுரையன் றென்க. 17

848.



கலயனா ரதனைக் கேளாக், கைதொழு திறைஞ்சிக், கங்கை
யலைபுனற் சென்னி யார்த மருண்மறுத் திருக்க வஞ்சித்,
தலைமிசைப் பணிமேற் கொண்டு சங்கரன் கோயி னின்று
மலைநிகர் மாடவீதி மருங்குதம் மனையைச் சார்ந்தார்.



18

     (இ-ள்.) வெளிப்படை. கலயனார், அவ்வாறு இறைவர் கூறிய
அருளிப்பாட்டினைக் கேட்டுக் கைகளாற்றொழுது வணங்கிக்,
கங்கையாற்றினைச் சூடிய சிரத்தினை யுடைய பெருமானது திருவருளினை
மறுத்து மனையிற் போகாது கோயிலில் தங்கியிருக்க அஞ்சியவராகி,
அப்பணியைச் சிரமேற் கொண்டு, சங்கரனாரது திருக்கோயிலி னின்றும்
போந்து, மலைபோன்ற மாடங்கள் நிறைந்த திருவீதியில் சேர்ந்து, அங்குத்
தமது திருமனையினைச் சார்ந்தனர்.

     (வி-ரை.) அதனை - அவ்வாறு இறைவன் அறிவித்த அதனை,
கேளா
- கேட்டு. செவிப்புலப்படக் கேட்டு.

     கைதொழுது இறைஞ்சி - திருவருள் வெளிப்பாட்டினைக்
கண்டபோது இறைஞ்சுதல் முறையாம்; அதுவே அடியார்களினியல்பாம்.
மனைவியார்