பக்கம் எண் :


1094 திருத்தொண்டர்புராணம் மூலமும் உரையும்

 

அரசனைக் காணுதல் விரும்பார் என்பது. சிவவழிபாட்டில் அரசன்
கொண்ட விருப்பமே இவர் விருப்பத்தை அவன்பாற் செலுத்தியது என்க.

     மின்நெறித்து அனைய வேணி - மின்னல்தான் உருப்பட்டு நெறிவும்
செறிவும் கொண்டுவந்தாற் போன்ற சடை.

     விகிர்தன் - மாயையைப் பலப்பல பேதப்படுத்தி உயிர்கட்குப்
பற்பலவிதமாகிய தனு கரண புவனம் போகங்களாக ஆக்கியும் போக்கியும்
அளித்தும் செயல்செய்ய வல்லவன்.

     வேணி விகிர்தன் - சடையப்பர் என்ற இத்தலச் சுவாமி பெயர்க்
குறிப்பு.

     வந்தார் - திருக்கடவூரினின்று புறப்பட்டுத் திருப்பனந்தாளுக்கு வர
வழிப்பட்டனர் என்றபொருளிற் வந்தது.

     அருளினாலே; பண்பில்நீடி - உதவும் நாளில் - அரசன் கலையுற்று
அழுங்கிச் செல்ல, கலயனார் - கேட்டு - நெறி தலைநின்றானென்று -
விரும்பி - விகிர்தனை வணங்க வந்தார் என இம்மூன்று பாட்டுக்களும்
தொடர்ந்து உரைத்துக் கொள்க.

855.



மழுவுடைச் செய்ய கையர் கோயில்கண் மருங்கு சென்று
தொழுதுபோந் தன்பி னோடுந் தொன்மறை நெறிவ ழாமை
முழுதுல கினையும் போற்ற மூன்றெரி புரப்போர் வாழுஞ்
செழுமலர்ச் சோலை வேலித் திருப்பனந் தாளிற் சேர்ந்தார்.



25

     (இ-ள்.) வெளிப்படை. மழுவேந்திய சிவந்த கையினையுடைய
சிவபெருமான் எழுந்தருளிய அம்மருங்குள்ள திருக்கோயில்களுக்கும் சென்று,
தொழுது, மேற்போந்து, எல்லா வுலகங்களையும் காக்கும் பொருட்டு வேதவிதி
வழுவாமல் ஆகவனீயம் முதலிய முத்தீக்களையும் வளர்த்துக் காத்துவருகின்ற
மறையோர் வாழ்கின்ற செழிப்புடைய பூஞ்சோலைகள் சூழ்ந்த
திருப்பனந்தாளிற் சேர்ந்தனர்.

     (வி-ரை.) மழுவுடைச் செய்ய கையர் - மானும் மழுவும்
சிவபெருமான் கையில் ஏந்திய திருவடையாளங்கள். "பரசு ஹஸ்தாய நம"
என்பது சிவாட்டோத்தரம்.

     கோவில்கள் மருங்குசென்று தொழுது போந்து -
திருக்கடவூரிலிருந்து திருப்பனந்தாளுக்கு வரும் நாயனார் வழியில்
இடையில் உள்ள சிவத்தலங்களைச் சென்று வணங்கிப் போந்தனர். அவை
திருவாக்கூர்த் தான்றோன்றிமாடம், திருச்செம்பொன் பள்ளி, செம்பொனார்
கோயில், திருமயிலாடுதுறை (மாயூரம்), திருத்துருத்தி (குற்றாலம்),
திருவாவடுதுறை, குரங்காடுதுறை (ஆடுதுறை), திருமங்கலக்குடி
முதலியனவாம். இவ்வழி ஏறக்குறை 35 நாழிகை யளவு உள்ளது. ஒரு
தலத்தினின்றும் மற்றொரு தலங்குறித்து யாத்திரை செய்வோர் நேரே
அங்குச் சென்று விடாது, இடையில் தலங்களிருப்பின் அவற்றையும்சென்று
தரிசித்துக் கொண்டு செல்லவேண்டுமென்பது முறை. இதனை நம்போலியர்
கண்டு ஒழுகி உய்தற்பொருட்டு ஆசிரியர் அங்கங்கும் எடுத்துக் காட்டிச்
செல்வர். "கறையணிந்தார் பாதளீச் சுரமும் பாடி, முன்னணைந்த பதிபிறவும்
பணிந்து போற்றி" (896), "அங்கருள் பெற்றுப் போந்து முன்ன மணைந்தபதி
களுமிறைஞ்சி(901) என்ற திருஞானசம்பந்த நாயனார் புராணத்தாலும்,
பிறவாற்றாலும் இடைப்பட்டதலங்கள் முன்பு தரிசித்தவையாயினும்
அவ்வழியே வறிது செல்லாது மீண்டும் அவற்றைத் தொழுது செல்லும் முறை
காட்டப்பட்டமை காண்க. இவ்வாறு ஒழுகாது இந்நாளில் நம்மனோர் செய்யும்
தலயாத்திரைகள் முறையற்றன என்பது.

     தொன்மறை நெறி ...... புரப்போர் - மறையோர் மறைவிதிப்படி
முத்தீபோற்றுவது உலகமுய்யும் பொருட்டே யாமன்றித் தந்நலங்கருதி
யன்றென்பது. "கற்றாங்கெரியோம்பிக் கலியை வாராமே, செற்றார்" (குறிஞ்சி -
கோயில் - 1) என்றது ஆளுடையயிள்ளையார் தேவாரம். "வருமுறை
யெரிமூன் றோம்பி மன்னுயிரருளான்