பக்கம் எண் :


1114 திருத்தொண்டர்புராணம் மூலமும் உரையும்

 

 12. மானக்கஞ்சாற நாயனார் புராணம்

                          தொகை

"மலைமலிந்த தோள்வள்ளல் மானக்கஞ்சாறன்
............... அடியார்க்கு மடியேன்"


                      - திருத்தொண்டத்தொகை.

                           வகை

"கலச முலைக்கன்னி காதற் புதல்வி கமழ்குழலை
 நலசெய் தவத்தவன் பஞ்ச வடிக்கிவை நல்கெனலும்
 அவரமெனக்கரு தாதவள் கூந்த லரிந்தளித்தான்
 மலைசெய் மதிற்கஞ்சை மானக்கஞ் சாற னெனும்வள்ளலே"

- திருத்தொண்டர் திருவந்தாதி.

விரி

866. மேலாறு செஞ்சடைமேல் வைத்தவர்தாம் விரும்பியது
நூலாறு நன்குணர்வோர் தாம்பாடு நோன்மையது
கோலாறு தேன்பொழியக் கொழுங்கனியின் சாறொழுகுங்
காலாறு வயற்கரும்பின் கமழ்சாறூர் கஞ்சாறூர்.         1

     புராணம் :- பெருமையுடைய கஞ்சாறூரில் வாழ்ந்த பெரியோருடைய
சரித வரலாறும் பண்பும் கூறும் பகுதி. இனி, நிறுத்த முறையானே
இலைமலிந்த சருக்கத்தில் ஐந்தாவதாகிய மானக்கஞ்சாற நாயனார் புராணங்
கூறத் தொடங்குகின்றார்.

     தொகை :- மலையின் தன்மைபோன்ற தன்மை மிகுந்த
தோள்களையுடைய வள்ளலாகிய மானக்கஞ்சாற நாயனாருடைய
அடியார்க்கும் அடியேன் ஆவேன்.

     மலை - இங்கு ஆகுபெயராய் மலையின் தன்மைகளைக் குறித்து
நின்றது. அவை உயர்ச்சி, வலிமை, பெருமை, நிலையிற்றிரியாமை,
"வறப்பினும் வளந்தரும் வண்மை" முதலியன. மலிதல் - மிகப் பொருந்துதல்.
தோள்களின் பெருமை முதலியவற்றால் இவ்வாறு உவமையணி பொருந்தக்
கூறினார். இவர் "அரசர் சேனாபதியாஞ் செப்பவருங் குடிவிளங்க" (872) என
விரிநூல் கூறுதலின் சேனாபதித் தன்மைக்கேற்ப உயர்ந்த வலிய பெரிய
தோள்களை யுடையவர் என்று இக்கருத்தை விரிநூல் விரித்துக்கூறியது
காண்க. ஆண்டுரைப்பவையும் பார்க்க. வள்ளல் - வரையாது கொடுப்போன்.
இது இவரது சரித நிகழ்ச்சி குறித்தது. இதனை "அலச மெனக்கரு தாதவள்
கூந்த லரிந்தளித்தான்" என்றும், "வள்ளலே" என்றும் வகை நூல் பேசிற்று.
"வண்புகழ்" (865), "பொருள் செய்தாமெனப்பெற்றே னெனக்கூந்த லடியிலரிந்து
... மலர்க்கரத்தி னிடைநீட்ட" (895), "ஒரு மகள் கூந்த றன்னை வதுவைநா
ளொருவர்க் கீந்த பெருமையார்" (902) என விரிநூல் விரித்துக் காட்டிற்று.
மானம் - பெருமை. பெருமையார் (902)