|
"ஆறொன் றியசம யங்களி
னவ்வவர்க் கப்பொருள்கள், வேறொன் றிலதான"
(மேற்படி 4) என்ற திருவிருத்தங்களில் கூறியபடி சிவபெருமான் அவ்வச்
சமயத்தார்க்கும் அங்கங்கு நின்று அவரவர்க்கேற்றபடி அருள்புரிகின்றார்.
சிவன் வகுத்த நீதியாகிய செங்கோன்மைவல்ல அரசனும் அவ்வாறே
அவ்வவர் சமயக்கோட்பாட்டில் அவரவர்களை மிகை பகை யின்றி
நிறுத்துவித்தல் அரச நீதியாகும். அதிற்பிறழ்ந்து இவ்வாறு சமயக்கோட்டம்
விளைத்து வலிமை செய்தல் கொடுங்கோன்மை
என்பதாம். இந்நீதியினை
உலகம் உணர்ந்து அதன்படி ஒழுகி உய்யும்பொருட்டு அரச நீதியிற்சிறந்த
அமைச்சர் பெருமானாகிய ஆசிரியர் இவ்வாறு விளக்கிக்காட்டினார்.
தெள்ளும்
புனல் - கங்கை. தன்னுட்படிந்தார்களுடைய
பாவங்களைப்போக்கி ஆணவமாகிய மயக்கத்தைத் தெளிவித்து நன்மை
செய்தலால் தெள்ளும் என்றார்.
அன்பரும்
சிந்தை நொந்து - அன்பரும் - ஒரு
குறைவுமில்லாதவர்களும், வீரமும் பெருமையுமுடையவர்களும்,
அச்சமும் கவலையுமில்லாதவர்களும் ஆகிய திருத்தொண்டர் கூட்டத்தினுட்
சேர்ந்த அன்பனாரும் என்க. உம்மை உயர்வு சிறப்பு. "அச்சம் மிலர்
கேடும்மிலர் பாவம்மில ரடியார், நிச்சம்முறு நோயும்மிலர்" (நட்டபாடை -
திருநின்றியூர் - 2) என்று ஆளுடையபிள்ளையாரும், "வானந்துளங்கிலென் ... ஒருவனுக் காட்பட்ட
வுத்தமர்க்கே" (தனித்திருவிருத்தம் - 8) என்று
ஆளுடைய அரசுகளும் அருளியவைகாண்க. "வீரம்" (144), "பெருமை" (6)
என்ற விடத்துரைத்தவையும் பார்க்க. எதுவரினும் சிந்தை நோதல் இல்லாத
அன்பரும் நொந்தார் என்றது இறைவனுக்குத்
தாம் செய்த திருப்பணி
முட்ட நேர்ந்தது பற்றியேயன்றிப் பிறிதில்லை என்பது குறிக்க வேணியர்க்
கன்பரும் என்றார். அன்பராதலின் திருவடியன்பு பற்றி நொந்தார் என்க.
"பேசாத நாளெல்லாம் பிறவா நாளே" என்ற கருத்தும் இது.
சிந்தை
நொந்து - "பத்தினி பத்தர்கள் தத்துவ ஞானிகள் சித்தம்
கலங்கிட", "ஈசனடியா ரிதயங் கலங்கிட" என்பனவாதி திருமந்திரங்களால்
அன்பர்களது சிந்தை நோவச்செய்யின் அதனால் வருங்கேடுகளைத்
திருமூலர் ஆணையிட்டு அறிவித்திருத்தல் காண்க. இங்கு இவ்வாறு
நொந்தமையால் வரும் இச்சரிதமேல் விளைவுகளையும் சிந்திக்க. 17
985.
(வி-ரை.) புன்மை செயல்
வல் அமண் குண்டர் -
புன்மைச் செயல் - இழி செயல்கள். கெட்ட செய்கைகள். வல் அமண்
என்றது புன் செய்கை செய்வதில் அமணர் வல்லவர்கள் என்றபடி.
குண்டர்- கீழ்மக்கள். திருநாவுக்கரசு
சுவாமிகள்பால் சமணர்கள் செய்த
தீயமிறைகளும், (அவை - அரசனிடத்து வஞ்சனை தெரிந்து சித்திரித்துச்
சொல்லியதும், அரசுகளை, அரசன் ஆணையின் உதவிகொண்டு, கொடுவரச்
செய்து நீற்றறையில் இடுவித்தும், விடங்கலந்த பாற்சோறு நுகர்வித்தும்,
யானையினால் இடரச்செய்வித்தும், கல்லினோடு பூட்டிக் கடலில் இடுவித்தும்
செய்ததும் முதலியவை) ஆளுடைய பிள்ளையாரும் சிவன் அடியார்களும்
மதுரையிற் புக்கது கண்டு பொறார்களாய் அவர்கள் உறைந்த திருமடத்தில்
இரவில் தீ மூட்டியதும், தண்டியடிகளை இழித்துரைத்து வலிமை செய்து
சிந்தை நோவச் செய்ததும், நமிநந்தி நாயனார்பால் இழிசொற் பேசி அவர்
மனம் நோவச் செய்ததும் முதலாகிய புன்மைச் செயல்களை
இங்கு
நினைவு கூர்க. எவ்வுயிர்க்கும் எவ்விதத்தும் நோதல்செய்யாத
கருணையாளராகிய அப்பர் சுவாமிகளும் தமது தூய அருட்சிந்தையும்
நொந்து, அதுபற்றியே இவர்களைத் தமது திருவாக்கினால் "அமண்
குண்டர்" "குண்டாக்கர்" என்று கூறுதலும் காண்க. போது
போக்கும் -
நன்னெறியிற் செலுத்தித் தானும் உய்ந்து, தன் கீழ்ப்பட்ட நாட்டையும்
உய்யச் செய்வதிற் கழிக்கவேண்டிய தனதுகாலத்தை வீணே கழித்துப்
போக்கினான் என்பது. போக்குதல் - வீணாக்குதல்,
மாய்த்தல்
என்றலுமாம். "பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கம்",
"கண்ணைத் துயின்றவமே
|