பக்கம் எண் :


1338 திருத்தொண்டர்புராணம் மூலமும் உரையும்

 

     குறைவிலா நிறைகுடி - குறைவிலாக்குடி - நிறைகுடி என்று
தனித்தனி கூட்டியுரைப்பது மொன்று. இந்நிறைவாவது செல்வம், மக்கள்
முதலிய உடல்பற்றிய உலகநிலைப் பொருள்களாலும், கல்வி ஞானம் முதலிய
உயிர்பற்றிய அறிவு நிலைப் பொருள்களாலும் குறைவில்லாதிருத்தலும்,
சிந்தையின் நிறைவாகிய செல்வம் பெற்றிருத்தலுமாம். இதனையே நலம்
எனறார். இதனால் இவ்வூர் சிறப்புப் பெற்றது என்று குறிக்கத் தலத்தின்
மேம்படும்
என்றார். தலம் - ஊர். சாதி யொருமை, நிலம் மேம்படும்
வளத்தினைக் காவிரி தன்னுட்கொண்டு இருத்தல்போலக், குடிகள் குலம்
மேம்படுதற்குரிய குணங்களைத் தம்முட் கொண்டு விளங்கும் என இங்கே
விசேடவுரை காண்பாருமுண்டு.

     தலையூர்- தலத்தின் மேம்பட்ட காரணத்தால் தலையூர் என்று
பெயராயிற் றென்பது குறிப்பு. இவ்வாறு ஊர்ப்பெயர்களைச் சிறப்பித்துக்
கூறுவது ஆசிரியரது மரபு. 866 - ல் உரைத்தவையும், தலவிசேடமும் பார்க்க.

     பொன்னி நீத்தம் தடம், வயல் புகலாற் குறைவில்லாததாயிற்று;
குறைவில்லையாகக் குடிகுழுமியன; குடிகுழுமத் தலம் நலத்தின் மேம்பட்டது;
மேம்படவே தலையூராயிற்று என்றிவ்வாறு தொடர்ந்துகொள்ள நிற்பது
காண்க.

     திருவுருத்திரம் திருவைந் தெழுத்தை உள்ளுறையாகக்கொண்டு
மறையின் பயனாய் விளங்குதலின் இப்புராணத்தை ஐஞ்சீர்க் கலித்துறையாற்
கூறும் சிறப்பும் காண்க.

     தடம்புனை - மேம்படுதகையது- என்பனவும் பாடங்கள். 1

1032.



வான ளிப்பன மறையவர் வேள்வியின் வளர்தீத்
தேன ளிப்பன நறுமலர் செறிசெழுஞ் சோலை;
ஆன ளிப்பன வஞ்சுகந் தாடுவார்க் கவ்வூர்
தான ளிப்பன தருமமு நீதியுஞ் சால்பும்.      2

     (இ-ள்.) வான்....தீ - மறையவர்களது வேள்வியின் வளரும் தீயானது
மழையை அளிப்பன; தேன்...சோலை - நறுமலர்கள் நிறைந்த சோலைகள்
தேனை அளிப்பன; ஆன்....ஆடுவார்க்கு - ஆனினங்கள் அளிப்பனவாகிய
ஐந்தினையும் மகிழ்ந்து ஆடுகின்ற சிவபெருமானுக்கு; அவ்வூர்...சால்பும் -
அவ்வூர் தருமமும் நீதியும் சால்பும் என்ற இவற்றை அளிப்பன.

     (வி-ரை.) தீயானவை வானினை அளிப்பன; சோலை தேனை
அளிப்பன; அவ்வூர் தருமமும் நீதியும் சால்பும் ஆடுவார்க்கு அளிப்பன
என்க.

     வான்அளிப்பன - வேள்வியின்வளர்தீ - வேள்வி செய்தல்
மழைக்குக் காரணமா மென்பது. வேள்வி - சிவவேள்விகள். வான் -
வானிடத்து நின்று பெய்யும் மழைக்கும் பெயராய் வழங்கும். ஆகுபெயர்.
"வான்சிறப்பு" என்பது காண்க. "அங்கவை பொழிந்த நீரும் ஆகுதிப்
புகைப்பா னாறும்" (834) என்ற விடத் துரைத்தவை பார்க்க. "மண்ணி்ற்
பெருவேள்வி வளர்தீப் புகைநாளும், விண்ணிற் புயல்காட்டும் வீழி
மிழலையே" (குறிஞ்சி - 5) என்ற ஆளுடையபிள்ளையார் தேவாரமும்
"வேள்வி நற்பயன் வீழ்புனலாவது" (திருஞா - புரா - 823) என்றதும்
காண்க. உலக நிலைபேற்றுக்குரிய மழையை வேள்வித்தீ தரும் என்றதொரு
சிறப்புண்மையும் காணவைத்த நயம்காண்க. வேள்வியின் சிறந்தபயன்
உலகம் காக்கும் மழைதருதலே என்பதாம்.

     சோலை தேன் அளிப்பன- மழையின் பயனாய் நீர்பெருக,
அச்சிறப்பினால் எங்கும் மலர்ச்சோலைகள் செழிக்க, அச்செழிப்பினால்
அவை நிறையப்பூக்க, அந்தப்