பக்கம் எண் :


1402 திருத்தொண்டர்புராணம் மூலமும் உரையும்

 

     வளம்பதி பயின்றது - வளமையுடைய நகரங்கள் நிலவுதல்
நாட்டிற்குச் சிறப்புத் தருவதாம்.

     தொன்மை மேன்மை - ஆவதும் அழிவதும் ஆகிய புதிய வளங்கள்
மேன்மை தருவன அல்ல என்பது. பழங்கால முதல் மேன்மை குறையாது
வருதல் உண்மைச் சிறப்பால்மட்டு மாகுவதொன்று என்க.

     தகைமைசால் - என்பதும் பாடம். 2

1080. நற்றி றம்புரி பழையனூர்ச் சிறுத்தொண்டர் நவைவந்
துற்ற போதுதம் முயிரையும் வணிகனுக் கொருகாற்
சொற்ற மெய்ம்மையுந் தூக்கியச் சொல்லையே காக்கப்
பெற்ற மேன்மையி னிகழ்ந்தது பெருந்தொண்டை நாடு.
3

     (இ-ள்.) வெளிப்படை. நல்ல திறத்தினையே விரும்பிய பழையனூர்
வேளாளர்கள் தம்மேற் குற்றம் வந்தபோது தங்களுடைய உயிரையும்,
வணிகனொருவனுக்கு ஒருதரம் தாங்கள் சொல்லிய உண்மைச் சொல்லையும்
தூக்கி, உயிரினும் சிறந்த அந்தச் சொல்லையே காக்கப்பெற்ற மேன்மையில்
நிகழ்ந்தது பெரிய தொண்டை நாடாகும்.

     (வி-ரை.) நல் திறம் புரி - நன்மையினையே விரும்பிய. இங்குக்
குறித்த பழஞ் சரிதத்தினுள் வேளாளர்கள் வணிகனும் அவன் மனைவியும்
மனமொத்து வாழ்தல் வேண்டுமென்ற நன்மையினையே விரும்பிய செய்தி
குறித்தது. இவ்வாறன்றி எப்போதும் நன்மையினையே விரும்புகின்ற
என்றலுமாம்.

     பழையனூர்ச் சிறுத்தொண்டர் - "வணங்குஞ் சிறுத்தொண்டர்
வைக லேத்தும் வாழ்த்துங்கேட், டணங்கும் பழையனூர்" (பழையனூர்த்
திருவாலங்காடு - தக்கரா - 7) என்ற ஆளுடைய பிள்ளையார் தேவாரங்
காண்க. பழையனூரில் இருந்த வேளாளர் எழுபதின்மர். இவர்கள் இறைவனது
சத்தியம் என்ற உருவத்திற்குத் தம்மை அடியார்களாக ஆக்கி ஒருங்கே தம்
உயிரையும் கொடுத்தார்களாதலின் இவர்களைச் சிறுத்தொண்டர் எனவும்
கூறினார். "மிகச்சிறிய ராயடைந்தார், ஆதலினாற் சிறுத்தொண்ட ராய்நிகழ்ந்தா
ரவனியின்மேல்" (சிறுத் - புரா - 15) என்றது காண்க.

     நவை வந்துற்ற போது - தாம் எண்ணியபடி தமது செயல்
நன்மையாக முடியாது தீமையாக முடிந்தபோது. நவை - இங்கு இவர்களது
வாக்குக் குட்பட்டு வணிகன் நடந்தமையால் அவன் உயிரிழக்க நேர்ந்ததாகிய
குற்றம்.

     வந்துற்ற - தம்மையறியாமல் வந்து சேர்ந்தது என்பது குறிப்பு.

     தம் உயிரையும் - சொற்ற மெய்ம்மையும் தூக்கி - தமது
உயிரினையும், தாம் சொல்லிய சொல்லின் வாய்மையினையும் சீர் தூக்கிப்
பார்த்து இரண்டில் எது சிறந்தது? (அல்லது) எது காக்கத்தகுந்தது? என்று
தேர்ந்து.

     அச்சொல்லையே காக்கப்பெற்ற மேன்மை - வணிகனுடைய
உயிர்க்குக் கெடுதி நேருமாயின் தங்கள் எழுபது பேருடைய உயிர்களையும்
அதற்கு ஈடாகத் தருவதாகச் சொல்லிய சொல்லினையே தமது உயிரைவிடச்
சிறந்த பொருளாகக் கொண்டு, அதனைச் சோர்வுபடாமற் காத்துத்,
தீக்குழியில் இறங்கி உயிர் கொடுத்த சிறப்பு.

     இங்குக் குறித்த சரிதச் சுருக்கமாவது - ஒருகாலத்துப் பரத்தை
வலைப்பட்ட ஒரு வணிகன் தன்னைத் திருத்த முயன்ற தன் மனைவியைத்
தனிவழிப்படும்போது கொன்றுவிட, அப்பழி நீலி என்னும் பேயாகி அவனை
அலைத்து வந்தது. அதினின்றும் மீளும்பொருட்டு, அவன், ஒரு பெரியார்
தந்த மந்திரவாளினை ஏந்திக்
கொண்டே திரிந்து வந்தனன்.