பக்கம் எண் :


1614 திருத்தொண்டர்புராணம் மூலமும் உரையும்

 

     அவரது தந்தையாகிய எச்சதத்தன்உலகமறியப் பிழைபுரிந்தும்,
இறைவருடைய திருவருளினாலே சேய்ஞலூர்ப் பிள்ளையாருடைய
திருக்கையில் வந்த அழகிய மழுவினாற் றண்டிக்கப்பட்டமையால்
குற்றம் நீங்கினவனாகிச் சுற்றத்தாருடன் முதல்வனாருடைய
சிவலோகத்தையடைந்தனன். மறைச் சிறுவனார் அந்த உடம்புடனே சிவனார்
திருமகனாராக ஆயினார். இந்த நிலைமையினை அறிந்தவர் யாவர்?
சிவனாருக்கு அன்புசெய்து தம்மை ஆளாக ஒப்புவித்த அடியார்கள்
செய்தன எவையோ அவையே தவமாகுமன்றோ?

     தலவிசேடம் :- 1. சேய்ஞலூர் - சூரசங்காரத்தின் பொருட்டுக்
கயிலைத் திருமலையினின்றும் தேவசேனைகளுடன் எழுந்தருளிவரும்
முருகப்பெருமான், வழியில், தாரகாசுரனைச் சங்கரித்துக் கிரவுஞ்ச
மலையையும் பிளந்து போந்து, மண்ணியாற்றின் தென்கரையில் ஊர்
உளதாக்கிச் சிவபூசை செய்துகாட்டியருளிய தலம். இது புராண முதற்
பாட்டில் உரைக்கப்பட்டது. இங்குச் சண்டீச நாயனார் திருவருள்பெற்ற
வரலாறு புராணத்தினுட் காண்க. இவ்வரலாறுகள் இரண்டினையும்
ஆளுடையபிள்ளையார் இத் தலத்தேவாரப் பதிகத்தினுள் "சேயடைந்த
சேய்ஞலூர்" (11) - "பீரடைந்த பால தாட்ட" (7) என்ற திருப்பாசுரங்களில்
வைத்துப் பாடியருளினர். ஆளுடையபிள்ளையார் இத்தலத்தை
அடைந்தருளியபோது சண்டேசநாயனார் அவதரித்த திருத்தலமாதலின்
முத்துச் சிவிகையினின்றும் இறங்கி நடந்துபோய் வழிபட்டருளினர். சுவாமி -
சத்திகிரீசுவரர். அம்மையார்- சகிதேவியார். தீர்த்தம் - மண்ணியாறு.
பதிகம் 1. திரு ஆப்பாடிக்குத் தெற்கே 1/2 நாழியளவில் அடையத்தக்கது.

     2. திருஆப்பாடி - இத்தலம் சண்டீசநாயனார் ஆனிரைகளை
மேய்த்து மண்ணியாற்றின் கரையில் மணற்றிடரில் ஆத்தியின்கீழ் மணலாற்
சிவலிங்கமாக்கித் தாபித்து மணற்கோயிலமைத்துப் பசுவின் பாலினாற்
றிருமஞ்சனமாட்டிச் சிவபூசை செய்து பதம்பெற்ற இடம்.

     சுவாமி - பாலுகந்தநாதர். அம்மையார்- பெரிய நாயகி. தீர்த்தம்
- மண்ணியாறு. மரம் - ஆத்தி. பதிகம் 1.

     ஆடுதுறை (S. I. R.) நிலையத்திலிருந்து வடக்கே நற்சாலை வழி, ஏழு
நாழிகையளவில் உள்ள திருப்பனந்தாளை அடைந்து, அங்கு நின்றும் மேற்கே
மட்சாலைவழி 1 1/2 நாழிகை அளவில் அடையத்தக்கது.


      கற்பனை :- 1. தெய்வங்களால் உளதாக்கப்பட்டு நிகழ்தல் ஒரு
நகரத்துக்குச் சிறப்புத் தருவதாம். முருகப்பெருமானால் உளதாக்கப்பட்டது
சேய்ஞலூரின் பெருஞ் சிறப்பினைக் காட்டுவதாம்.

     2. நல்லொழுக்கம்மிக்க மறையவர்கள்குடி நிரம்பி நிகழ்வது ஒரு
பதியின் சிறப்பினைக் காட்டுவது.

     3. மறையவர் பதிகளின் புறத்தே மறைச்சிறுவர் வேதம் பயிலும்
மடங்களும் வேள்விச்சாலைகளும் அமைக்கப்பட்டு விளங்குவது நல்ல நகர
அமைப்பின் இயல்பு.

     4. பசுக்களும் நல்ல மாணவர்களும் நன்மகளிர்களும் பயிலும்
பான்மையுடைமையினால் தெருக்கள் விளக்கம் பெறுவன.

     5. தொன்மை அரசமரபினர் பழங்கால முதல் முடிசூட்டிக் கொள்ளும்
இடமாக இருத்தல் ஒருபதியின் சிறப்பினைக் காட்டுவதாம்.

     6. பண்ணுக்குப் பயன் நல்ல இசை; பாலுக்குப்பயன் இனிய சுவை;
கண்ணுக்குப் பயன் பெருகு ஒளி; கருத்துப் பெற்ற பயன்
திருவைந்தெழுத்தை கணித்தல்;