தார்மலர்
- திருப்பள்ளித்தாமம். தாருக்கு ஆகும் மலர். கொய்யா
வருபவன் - கொய்துகொண்டு வருபவருடைய. ஆறாம்வேற்றுமை
உருபுதொக்கது. கொய்யா - கொய்து. செய்யா
எனும் வாய்பாட்டு
வினையெச்சம். தண்டின் மலர் - தண்டின் மேலிருந்த மலர் நிறைந்த
பூக்கூடையை. பறித்த - பறித்துச் சிந்தியதனால்.
ஊர்மலை - யானை.
பாகர் உடல் துணியாக்குமவன் - எண் உம்மைகள் தொக்கன. பரசினால்
யானையையும் பாகரையும் உடல் துணித்தவர். மதில்சூழ் கருவூர்
- மதிலாற்
சூழப்பட்ட கருவூர் சோழர்களது இராசதானிகளில் ஒன்றாதலின் மதிலைச்
சிறப்பித்தார். மதில் அரணாம். அரச அங்கங்களில் ஒன்று. "மாமதில் மஞ்சு
சூழும்" (553) என விரிநூல் இதனை விரித்தது காண்க. எறிபத்தனே
ஊர்மலையையும் அதன் பாகர்களையும் உடல் துணியாக்குமவன் என
முடிக்க. ஏகாரம் தேற்றம். துணித்ததற்குக் காரணம் மலர் பறித்தலே என்பார்
பறித்த ஊர்மலை என்று குறித்தார். மலர்
- மலர்க்கூட்டை - இலக்கணை.
ஊரும், தொண்டின்
றிறமும், சரித வரலாறும் வகைநூல் பேசிற்று.
இவற்றை விரிநூல் விரித்தபடி புராணத்துட் காண்க.
விரி
:- 551. (இ-ள்.) வெளிப்படை. செழித்த நீர் சூழ்ந்த
நிலவுலகத்திலே, இளமையாகிய எருத்தினையுடைய சிவபெருமானது
அன்பர்கட்கு இடையூறுற்ற விடத்து விரைந்து வந்து அவ்விடையூற்றினை
நீக்குதற்கேற்ற செய்கையை உதவும் தன்மையுடையாராகி எல்லையில்லாத
புகழிலே மிகுந்த எறிபத்த நாயனாரது பெருமை எம்முடைய சொல்லில்
அடங்கும் தரமுடையதன்று. ஆயினும் ஆசையினாலே சொல்லத்
தொடங்குகின்றேன்.
(வி-ரை.)
ஒவ்வோர் புராணத் திறுதியிலும் அவ்வந் நாயனாரது
சரிதத்தை உபசங்கார முறையிலே முடித்துக்காட்டி, மேல்வரும் சரிதத்துக்குத்
தோற்றுவாய் செய்வது ஆசிரியர் மரபு; அமர்நீதியார் புராணத்தோடு
அச்சருக்கம் முடிவு பெற்றதாகலின் மேல்வரும் சரிதத்துக்கு ஆங்குத்
தோற்றுவாய் செய்ய இயைபில்லை. எனவே, இனிக் கூறப்புகுந்த சரிதத்திற்கு
இங்குத் தொடக்கத்திற்றோற்றுவாய் செய்தது இப்பாட்டு. இப்புராணத்தை
இங்குச் சுருக்கி உற்றிடத்துதவும் என்று காட்டிய அழகு குறிக்க.
நீர்
ஞாலம்- தண்ணீராற் சூழப்பெற்ற உலகம்.
மழவிடை
- என்றும் இளமையோடிருப்பது. தருமசொரூபமாகிய
விடையாதலின் அது மூப்பதில்லை என்க. "மழவிடையார்க்கு வழிவழியாளாய்"
- திருப்பல்லாண்டு.
உற்றிடத்து
ஒல்லை வந்து உற்ற செய்கை உதவும் - என மாற்றுக.
உற்றிடம் - இடையூறு உற்ற அந்த இடத்தே;
அப்போது. இடம் - காலமும்
இடமும் குறித்தது. இடையூறு என்ற எழுவாய் தொக்கி நின்றது. அன்பர்க்கு
வரும் இடையூற்றை வெளிப்படச் சொல்லா நியதியுடையாராதலின் ஆசிரியர்
அதனைத்தொக வைத்துக் கூறினார். உறுவதனைப் பின்னரும், அது
வருமுன்னே அதனைத் தீர்க்க உற்ற உதவியை முன்னரும்
வைத்த மரபுங்
காண்க. இக்கருத்துப் பற்றியே "அன்பர்க்கு அடாதன அடுத்தபோது"
என்றதுங் காண்க. ஒல்லை - அன்பர்களது இடையூறுகளைத்
தவித்தலில்
நாயனார்க்கிருந்த தீவிரம் குறித்தது. "உற்ற வர்க்குத வும்பெரு மானை யூர்வ
தொன்றுடை யானும்பர் கோனை" எனவரும் நம்பிகள் தேவாரமுங் கருதுக.
உற்ற
செய்கை - செய்கையை - தீர்த்தற்குப் பொருந்திய செயலை.
இரண்டாம் வேற்றுமை உருபு தொக்கது. செய்கையை உதவும்
என்று
கூட்டுக. உற்ற செய்கை - பொருந்திய தொண்டினுக்கு உதவும் என
உரைப்பாருமுண்டு.
நீரார் - நீர்மையை
யுடையார்.
எல்லையில்
புகழ் - அளவுபடாத புகழ். புகழின்மிக்க
என்றது
அத்தகைய புகழ் பலவற்றாலும் மிக்கவராதலை. சொல்லலாம்
படித்தன்று
என்றதற்குக் காரணங் கூறியவாறு. ஓர் அடியார்க்காக அஞ்சா நெஞ்சுடன்
யானையை
|