பக்கம் எண் :


802 திருத்தொண்டர்புராணம் மூலமும் உரையும்

 

     பின்னாகத் தாம் முன்பு - தலைவர்கள் பின்னின்று ஏவுவதும்
அதன்படி படைகள் முன்னின்று போர் புரிதலும் மரபு. இது முதற்போரின்
(போர்த்தொடக்கம்) இயல். போர் முற்றிய பின் தமது படைகள்
தளர்வடையுங்கால் தலைவர் முன்வந்து தாமே நேராகப் போரில் முனைந்து
படைஞரை ஊக்குதல் வழக்கு. இம்முறையைக் கந்தபுராண முதலிய மாபுராண
சரிதங்களிற் காண்க. இங்குத் தமது படைஞர் பலர் மடிந்தும் எஞ்சியோர்
போர் மெலிந்தும் நின்ற நிலையில் முன்னணியில் நின்று பொருத அவர்கள்
பின்னாகுமாறு தாம் அவர்கட்கு முன்பு வந்து தாமே போருக்கு எழுந்தார்
என்பதாம். பின்னாக - பின்னே வர என்பாருமுண்டு.

     தெம்முனையில் - தெவ் - பகை. தெவ்வர் - பகைவர். தெவ்முனை
என்றது தெம் முனை என்றாயிற்று. முனை - போர் மூளுதல். முன்பு -
முன்னணியில்.

     செயிர்த்து - எழுந்தார் - செயிர்ப்பின்றிப் போர் நிகழாதாகலின்
செயிர்த்து என்றார். இது இங்குப் போரின் பொருட்டு வந்ததே யன்றிக்
குணவசத்தான் வந்ததன் றென்பார் தெம்முனையிற் செயிர்த்து என்றார்.
குணவசத்தான் வந்த தொன்றாயின் அது இவரைத்தன்வயமாக்கி மன
நிறையினை யழிவு செய்திருக்கும். அவ்வாறு இவர் அதன் வயப்பட்டாரிலர்
என்பது பின்னர் இவர் மாற்றானெற்றியில் நீறு கண்டதுபோது தந்நிலையே
நின்று கொண்ட திருஉள்ளநிலையா லறியப்படும். 645 - 646 பாட்டுக்கள்
பார்க்க. இச்சரித உட்கிடையும் காண்க.

     எழுந்தார் - மனக்கிளர்ச்சி குறித்தது. பாய்ந்தார் என்றலுமாம். 25

633.
வெஞ்சினவாள் தீயுமிழ வீரக் கழல்கலிப்ப
நஞ்சணிகண் டர்க்கன்பர் தாமெதிர்ந்த ஞாட்பின்க
ணெஞ்சியெதிர் நின்ற விகன்முனையில் வேலுழவர்
தஞ்சிரமுந் தோளுரமுந் தாளுரமுந் தாந்துணித்தார். 26

     (இ-ள்.) வெளிப்படை மிக்க கோபமுடைய வாளினின்றும் தீப்பறக்கவும்,
காலில் வீரக்கழல் சத்திக்கவும், விடமணிந்த கண்டமுடையவராகிய
சிவபெருமானுக் கன்பராகிய ஏனாதிநாதர் தாம் மேலே கண்டவாறு
போர்க்களத்தில் முன் வந்து செயிர்த் தெழுந்தபோது முன்னர் வீடாது
எஞ்சியவர்களாய் அவரை எதிர்த்துப் போரில் நின்ற படைஞர்களது தலையும்
தோள் வலிமையும் தாள் வலிமையும் தாம் துணித்தனர்.

     (வி-ரை.) வெம் சின வாள் - இவரது செயிர்ப்பு இவர் ஏந்திய
வாளின் மேல் ஏற்றப்பட்டது. வாள் தீ உமிழ - வாளின் முனையிலிருந்து
ஒளியுண்டாக வாள் தீயுமிழ்தல் இவர் ஒருவரே தீப்பறக்கக் குருதி பொங்கப்
பெருஞ்சினத்தோடு வட்டணை திரிந்து வீசியபடியினால் வாளின் ஒளிமிக்குக்
காணப்பட்டது. போர்க்களமெங்கும் எதிர்த்த பலவகைவீரரையும் விரைந்து
செல்லும் சாரிகையில் வாள்வீசித் துணித்தலால் காலின் கழல் சத்தித்தன
என்க. "ஆண்டகை வீரர் தாமே யனைவர்க்கு மனைவராகிக், காண்டகு
விசையிற் பாய்ந்து கலந்து முன் துணித்து வீழ்த்தார்" (425) என்ற கருத்தை
இங்கு வைத்துக் காண்க. கைவாள் தீயை வீசியது; கால் அதற்கிசைய விரைய
வட்டணை சுற்றிற்று. ஆதலின், இவ்விரண்டுமே கூட்டிக் கூறினார்.

     எஞ்சி இகன்முனையில் எதிர்நின்ற என மாற்றுக. எஞ்சி -
மடியாமல் எஞ்சி. எதிர் நின்ற - போர்க்களத்தில் எதிர்த்து நின்ற. ஞாட்பு
- போர்க்களம்.

     வேலுழவர் - வேல் கொண்டு தொழில் செய்வோர், வேலினைப்
பகைப் புலத்தினிற் செலுத்திப் போர் விளைத்தலால் உழவு என
உருவகப்படுத்தினார்.

     தம்சிரமும் தோள்உரமும் தாள் உரமும் - மெய்களைப் பலகையால்
மறைத்துத் (623) தற்காப்புச் செய்து வீரர் பொருவாராதலின் சாரிகை
முறையிற் குறி