11.
இச்சரிதத்திற் கண்ட குடிமக்கட் போர்மன்னர்களின் வீரம்,
ஆண்மை, வலிமை, போர்த்திறன், குறியீடு, குறிக்கோள் (627-629) முதலியன
வியக்கற்பாலன.
12.
ஏனாதிநாயனாரின் வாட்போர்த்திறமும் நேர்மையும்
அப்போர்த்தொழில் இயலுக்கு இலக்கியமாவன. இத்தகைமையுடைய வீரர்களே
அத்தொழிலில் வீரக்கலைப் பயிற்சி தரும் ஆசிரியராதற்கு உரியர்.
இவ்விலக்கணம் இது போலவே எல்லாத் தொழிற் கலைக்கு முரியது. அவ்வத்
தொழிலிலும் அவ்வவ் வாசிரியர்கள் ஒப்புயர்வற்ற தேர்ச்சியும் நேர்மையு
முடையராதல் வேண்டும்.
13.
போரில் உடைந்து புறகிட்டார் மானமிக மீதூர இரவிற் கண்படாது அலமருவர்.
14.
மானம்பட வரின் உயிர் வாழாது தம்முயிர் நீப்பர் நல்லோர்.
"கவரிமா அன்னார் உயிர்நீப்பர் மானம்வரின்," "மானம்படவரின் வாழாமை
முன்னினிது" என்பன நீதி முதுமொழிகள். ஆயின் "அழுக்கா றெனவொரு
பாவி திருச்செற்றுத், தீயுழி யுய்த்துவிடும்" என்றபடி இங்குப்போரிற் புறகிட்ட
அதிசூரன் அழுக்காற்றினாற் கொள்ளப்பட்டானாதலின் தான் உயிர் நீக்காது
வஞ்சனையால் வெல்ல எண்ணினான். இது தீயோர் செயலேயாம்.
15.
இங்கு நாயனாரின் திருநீற்றுவழிபாட்டின் திறந்தெரிந்து அதிசூரன்
தானும் நீறுபுறம் பூசி வஞ்சிக்க முற்பட்டான். மெய்ப் பொருணாயனாரை
முத்தநாதன் வஞ்சித்தான். உலகியலில் இவ்வாறு வஞ்சிப்பார் பலருளர்.
ஆயின் அது கொண்டு அடிமைத்திறத்திற்கிழுக்கின்று. இதுபற்றித்
திருவேடத்தை இகழ்தல் அறியாமையாம்.
16.
திருநீறிட்டார் எவரேனும் அவர்தமது பிறதிறங்களை ஒன்றும்
ஆராயாது திருவேடத்தால் அறியப்படும் அடிமைத்திறமே பேணிக் கவராது
தொழுவது தீவிரதர அன்பாம். இதுவே திருவேட வழிப்பாட்டின் உயர்ந்த
நிலை. இங்கு நாயனார் பகைவனது நெற்றியிற் புதியதாய்த் திருவெண்ணீறு
கண்டார். அவனது பகைமை, அழுக்காறு, தாயப்போர், வஞ்சனை, முன்னைத்
தோல்வி முதலிய எல்லாம் தெரிந்தும், "நீறிட்ட ஒன்றினாலே சிவன்
சீரடியாராயினார். இவர் என் உயிர் கொள்ளக்குறித்தாரேனும் இவ்வடியார்
குறிவழி நிற்றல்கடன்" என்றமைந்து நின்றதனோடு, "இந்த அடியார்க்குப்
பழிவாராது நிற்றலும் கடன்" என்று அவன் தன் கருத்து முற்றுவிக்கும் வரை
பாவனைக்காக வாளும் பலகையும் தாங்கி நின்றார். வெற்றிக்கேயமைந்த
தமது தோள்வலியும் வாள்வலியும் காணாது போர்க்களத்தில், வலியிழந்த
மாற்றானிடத்துத் திருநீறு ஒன்றினையே கண்டு திருநீற்று வழிபாட்டின்
பொருட்டுத் தமது உயிரைக் காணிக்கையாக ஈந்த நேர்மையை உன்னுக.
இவர் நேர்மைக்கும் ஆண்மைக்கும் இலக்கியமாயினர் என்பதன்றி
அன்புக்கும் இலக்கியமாயினர்.
17.
மெய்யுணர்வு நேர்பட்ட போதில் ஆர்வமுதற் குற்றங்கள் எல்லாம்
இருந்த இடம் தெரியாது அகன்றுபோம்.
18.
எஞ்ஞான்றும் அன்பே வெல்லும். வஞ்சனை தோற்கும்.
இச்சரிதத்தில் அதிசூரன் வஞ்சித்துத் தான் நினைத்தபடி முடித்தான் என்று
உலகர் எண்ணுவர். ஆயின் அவன் வென்றானல்லன் என முன்னர்
விளக்கப்பட்டது. பண்டுதிருநீறு பாங்கிற் பயிலாத கடையோனும் இவரது
அன்பின் றிறங்கண்டு அதற்குள்ளாகி நீறிட்டான். நாயனாரது நன்மைத்
துறையொழுக்கம் நள்ளானாகிய அதிசூரனும் போற்றும்படி அவனை
அடிப்படுத்தியது. முன்னாட் போரில் ஆண்மையும் வீரமும் வென்றன.
பின்னாட்போரில் அன்பும் திருநீறும் வென்றன. 481 பார்க்க.
19.
அன்புநிலைக்கு ஏதமாக உலகில் வெளித்தோற்றத்திற்
காணப்படுபவையெல்லாம் உண்மையில் இறைவனருளால் உலகபாசமறுத்து
உயர்நிலை தர
|