பக்கம் எண் :

(வார்கொண்ட வனமுலையாள் சருக்கம் - II)202

 
திடாஅ வாயமோ டுண்ணும் பொழுதில்
திருந்திழைப் பிணைத்தோட் டேமொழி மாதே!
விருந்தி னடியேற் கருளுதி யோ?வென,
முலைமுக நோக்கி முறுவலித் திறைஞ்சலின்
15
நறைகம ழெண்ணெய்ச் சிறுநுண் டுள்ளி
பொங்குபுன லுற்றது போலவென்
அங்க மெல்லாந் தானா யினளே.                        28
     (இ-ள்) உலாநீர்....ஆரூர் - உலாவும் தன்மைகொண்ட நீரினையுடைய
கங்கையாற்றினை ஒருசடையின் நுனியிலே தங்கும்படி ஒளித்துப், புலாலிற் குருதி
ஒழுகும் போர் யானையினை உரித்த பூதநாதர் - ஆதிமூர்த்தி - முத்திக்கிறைவியாய்
இளமையுடைய மலைமகளாகிய உமையம்மையாருக்குத் தமது திருமேனியில் ஒரு பாகம்
கொடுத்துத் தமது அன்பினாலே அணைத்தவரது திருவாருன்கண்; நண்பகல் - பகல்
உச்சிவேளையிலே; வலம்புரி....அமுதம் - வலம்புரிச் சங்குகளாகிய அடுப்பிலே
பெருமுத்துக்களாகிய அரிசியைச் சலஞ்சலத்தில் நிறையப் பெய்து ஏற்றி, நன்மை
விளங்கும் பவளமாகிய செந்தீயினைமூட்டி, அழகு பொருந்த இப்பியாகிய அழகிய
துடுப்பினாலே ஒப்பத் துழாவி அடாமலே அடப்பண்ணிய அமுதத்தினை;
வாய்மடுத்து...பொழுதில் - வாயில்வைத்து இடாமலே இட்டுத் தோழியர்களுடனே
உண்கின்றபோதில்; விருந்தின்....என - விருந்தினனாக வைத்து அடியேற்கும் அன்புடன்
கொடுப்பாயோ? என்று நான் கேட்க; முலைமுக நோக்கி.....இறைஞ்சலின் - தனது
முலையின் முகத்தினைநோக்கி முகம் குனிந்து புன்முறுவலுடன் வணங்கினள் ஆதலின்;
நறை.....போல - மணம் கமழும் எண்ணெயின் ஒருசிறு நுண் துளியானது பொங்கும்
நீரினுள் வீழ்ந்ததுபோல; என்...ஆயினளே - எனது உடல் முழுதும் அவள் மயமாகவே
நிறைவு பெறலாயினள்.
 
     (வி-ரை) திணை - குறிஞ்சியிற் பாலை மயங்கியது. துறை - செவ்வியிலளாகிய தலைவியைக்கண்ட காட்சியிற் தலைவன் கூற்று.
 
     1-2. உலாநீர் - உலாவும் தன்மையுடைய நீர்; ஓடுகின்ற நீர்; வற்றாதநீர்
என்றலுமாம். “நீரற வறியா” (புறம்); ஒரு சடை - ஒரு சடையின் நுனியில் தங்கும்;
புலால்நீர் - புலால் பிளக்க அதினின்றும் வரும் குருதி - இரத்தம்; பொருகளிறு -
பொருதற்குப் போந்த யானை; இருடிகள் யாகத்தினின்றும் ஏவிவிட்ட யானை.
 
     4-5. திரு - முத்தித்திரு; நண்பகல் - உச்சிப்போது; நண்பகல் பாலைக்குரிய
பொழுதாகலானும், தலைவி சிறுசோறடும் பேதைப் பருவத்தளாதலானும் இஃது
பாலைத்திணையாயிற்று. அதனுட் காட்சி நிகழ்தலின் குறிஞ்சி மயங்கியதாம்.
 
     6-11. வலம்புரி....அமுதம் - சிறுமியர் சிறுசோறு சமைக்கும் நிலை கூறியபடி;
வலம்புரி - வலம்புரி என்ற சங்குவகை; சலஞ்சலம் - சலஞ்சலம் என்ற சங்குவகை;
வலம்புரி அடுப்பு - முத்து அரிசி - பவளச் செந்தீ - இப்பியந் - துடுப்பு -
இவை உருவகம்
; மாமுத்து - பெரியமுத்து. அடாஅது அட்ட அமுதம் - தீயினால்
அடப்பண்ணாது பாவனையாற் சமைத்த அமுது; வாய்மடுத்து இடாஅ - வாயினிற்
பெய்யாமற் பெய்து. பெய்ததுபோலச் செயல்காட்டி. இது விளையாட்டுவகை; ஆயம் -
ஒத்த தோழியர் கூட்டம். அடாஅது - இடாஅ - செய்யுள் அளபெடைகள்;
விளையாட்டின் உட்குறிப்பும் கொண்டன.