பக்கம் எண் :

பொய்யடிமை இல்லாத புலவர் சருக்கம்230

பெற்றது திருத்தொண்டர் புராணமாதலின் ஒருவகையால் அது சார்புநூல் எனப்படும்.
எனவே இவை மூன்றும் சிவனருள் முழுதும் கைதர ஏற்றபடி வெளிப்பட்டவை என்பது
வெளிப்படை. இவ்வாறாகலின் முன்கூறிய முதல் - வழி - சார்பு நூல்களின் இலக்கணப்
பாகுபாடுகளும், பின்னோன் வேண்டும் விகற்பம் - ஆசிரிய மதவிகற்பம் - இருவர்
நூற்குமொரு சிறைதொடங்கித் திரிபு வேறுடையது - என்று தம்முள் வரும்
மாறுபாடுகளும் இவைகட் கேலாதன என்பது வெள்ளிடை மலை; அவ்வாறு மாறுபடின்
பதிப்பொருள் தானே ஒன்றைப் பற்றித் தம்முள் மாறுபட்ட பல வாக்கியங்களை
வெளிப்படுக்கும் என்ன வரும்; வந்து பதியிலக்கணத்துடன் மாறுபடுமாதலின்.
 
     இனி, இம்மூன்றும் தம்முள் மாறுபடாமை முன்னர் உரை கூறியவிடத்து
காட்டப்பட்டதும் கடைபிடிக்க.
 
     இனி, இவ்விலக்கண அளவைச் சூத்திரங்களின் படியே வைத்துப் பார்க்கினும்,
முதல் - வழி - சார்புநூல்களின் பிரமாணவலிமையும் வலியின்மையும் கருதின், வழிநூல்
சார்பு நூலினும் வலியுடைத்தாதலின் வழிநூலாகிய நம்பியாண்டார் வாக்கு வலிமை
பெற்று, அதன்முன்னர் அதனின்மாறுபட்டு உடன்படாதாகிக் காணப்படும் சார்பு
நூலாகிய சேக்கிழார் வாக்கு வலியிலாததாய் ஒதுக்கப்படவேண்டி வரும் இழுக்குப்பட
வைப்பது இந்த ஆராய்ச்சியாளர் கூற்றாமென்பது காண்க. அம்மட்டோ? “நங்க
ணாதனா நம்பியாண்டார் நம்பி, புந்தியாரப் புகன்ற வகையினால் வந்தவாறு வழாம
லியம்புவாம்” என்று கூறிய சேக்கிழார் திருவாக்கும் பொய்போயிற் றென்ன
வேண்டிவரும் இழுக்குமுண்டாகும். அம்மட்டோ? வழிநூலாசிரியராகிய நம்பியாண்டார்
திருவாக்குடன் மாறுபட்ட சார்புநூலுடையாராகிய சேக்கிழார், அவ்வாறு தாம்கொண்ட
மாறுபாட்டினை உலகறியக் கூறாது, பொய்யடிமையில்லாத புலவர்கள் சங்கப்புலவருள்
சிவனையே பாடுவோ ரல்லாவிடிற், பின்னையாவர்? என்பதை விரித்துரைக்காது
மறைத்துப்பொதுப்படக்கூறிப்போந்து உலகை வஞ்சித்தார் என்னவும் வேண்டி வந்து
பேரிழுக்காய் முடியும்? அம்மட்டோ? முதனூற் கருத்தை உணராது, நம்பியாண்டார்
நம்பிகள்., இப்புலவர் சங்கப்புலவருட் சிவனையே பாடுவோர் என்று பிறழக் கூறினார்
என்றும் அதனைத் திரிவுகாட்டி ஒருவாமை வைத்தமையால் அதற்கு எதிர்நூல்
செய்தார் எனவும் வந்து இன்னும் பேரிழுக்காய் முடியும்; எதிர்நூலாவது -“எதிர்நூல்
என்பதொன்றுண்டு” அது யாதோ? வெனின் முதனூலின் முடிந்த பொருளை
ஓராசிரியன் யாதானும் ஒரு காரணத்தாற் பிறழ வைத்தால் அதனைக் கருவியாற் றிரிவு
காட்டி ஒருவாமை வைத்தற்கு ஒள்ளியான் ஒரு புலவனால் உரைக்கப்படுவது; என்னை?
“தன்கோ ணிறீஇப் பிறன்கோண் மறுப்ப, தெதிர்நூலென்ப ரொருசா ரோரே”
என்றாராதலின்; (இறையனாரகப் பொருளுரை.)

 

     இனி, இப்புராணத்தினுள் வழிநூலார் உரைத்த சங்கம்பற்றியேனும்,
உதாரணங்காட்டிய புலவரைப் பற்றியேனும் ஒன்றும் சேக்கிழார் பெருமான் கூறிற்றிலர்
என்பதொரு கேள்வி பிறக்கின்றது. தில்லைவாழந்தணர், பத்தராய்ப் பணிவார்
முதலாகிய தொகை யடியார் புராணங்களெல்லாவற்றினும் ஆசிரியர் சரிதவரலாறு
பற்றியன்றிப், பண்பு பற்றியே உரைத்துப் போகும் மரபு கொண்டவர் என்பது கருதப்
படவேண்டும். தொகையடியார்கள் பண்பு பற்றியே உணரப்படுவர் என்ற நிலையும்
காண்க.
 
     இனி, இந்த ஆராய்ச்சியாளர்தாம் இங்குக் கூறிய “பொய்யடிமை யில்லாத புலவர்”
என்பதற்கொள்ளும் பொருள்தான் யாதோ? எனின், அது மாணிக்க