பக்கம் எண் :

பெரியபுராணம்235

(இ-ள்) அளவில்....அதனில் - அளவில்லாத பெறும்புகழினையுடைய அத்திருநகரத்தில்;
அணி.....எறிப்பனவாய் -அழகிய மணிகளால் விளக்கம் பெறும் இளவெயில் போன்ற
சுடர்களின் தொகுதி இராப்போதினை இல்லையாம்படி ஒளி வீசுவனவாக; கிளர்
ஒளிசேர்...நிரைகள் - கிளர்கின்ற ஒளி சேரும் நீண்ட ஆகாயத்தின் உள்ள பெரிய
கங்கையாற்றிலே கொடிகள் போன்று விளங்கும் ஒளிவளரும் மாளிகைவரிசைகள்;
மறுகெல்லாம் மருங்குடைய - வீதிகள் எல்லாம் பக்கங்களில் உடையன.
 
     (வி-ரை) மணிவிளக்கும் சுடர்ப்படலை - மணிகளினின்றும்
இயல்பின்எழுகின்ற ஒளிக்கதிர்களின் தொகுதி.
 
     இரவு ஒழிய எறிப்பனவாய் - இராப்போதென்பதே காணமுடியாதபடி ஒளி
செய்ய; எறித்தல் - ஒளி வீசுதல்; இரவு -இருட்போது; இளவெயில் - வெப்பமில்லாத
ஒளி.
 
     வானப்பேர்யாறு - ஆகாயகங்கை; கெழுவுதல் - விளங்குதல்.
 
     எறிப்பனவாய் - மாளிகை நிரைகள் யாற்றுக் கொடி கெழுவும் - மணிகளின்
ஒளித்தொகுதி மாளிகை வரிசைகளின் மேல் வீசுதலால் அவற்றின் நிழல்
வானக்கங்கையிற் காணுதல் வரிசைபெற நீண்ட கொடிகள் போன்ற காட்சி தந்தன
என்பதாம்; இவ்வாறன்றி எறிப்பன - கெழுவுவன என்பவற்றைத் தொடர்பின்றி
வெவ்வேறாகக் கொண்டு, மணிகளின் கதிர்ப்படலை இரவொழிய எறிப்பன; மாளிகை
வரிசைகளின் மேற்கட்டிய கொடிகள் வானக் கங்கையினிற் படிவன - தோய்வன -
என்றுரைத்தலுமாம். முன்பொருளில் கொடிபோலப் படலை கெழுவும் என்றும்,
பின்னைப் பொருளில் கொடிகெழுவும் என்றும் கொள்க. “மாளிகை நிரைவிண் சூழும்”
(553) என முன்னரும் இக்கருத்தைக் குறித்தமை காண்க.                   2
 
3944. நாகதலத் தும்பிலத்து நானிலத்து நலஞ்சிறந்த
போகமனைத் தினுக்குறுப்பாம் பொருவிறந்த வளத்தினவாய்
மாகநிறைந் திடமலிந்த வரம்பில்பல பொருள்பிறங்கும்
ஆகரமொத் துளவளவி லாவணவீ திகளெல்லாம்.                    3
 
     (இ-ள்) நாகதலத்தும்....வளத்தினவாய் - மேலுலகமாகிய விண்ணுலகினும் கீழ்
உலகமாகிய பாதலவுலகினும், நிலவுலகினும் நன்மையாற் சிறந்த போகங்கள்
எல்லாவற்றுக்கும் உறுப்பாகிய ஒப்பற்ற வளங்களையுடையனவாகி; மாகம்....ஆகரம்
ஒத்துள - ஆகாயமளாவக் குவிந்த எல்லையில்லாத பற்பல வகைப்பட்ட பொருள்
யாவும் கூடி விளங்கும் உறைவிடம்போல உள்ளன; அளவில்....எல்லாம் - அளவில்லாத
கடை வீதிகள் எல்லாம்.
 
     (வி-ரை) நாகதலம் - விண்ணுலகம்; “அமரர்புரி” (3953) என்பதும் கருதுக.
பிலம் - கீழ்உலகம்; பாதலம்; நானிலம் - மண்ணுலகம்; குறிஞ்சி, முல்லை, மருதம்,
நெய்தல் என நான்காகப் பகுக்கப்படுதலின் நானிலம் எனப்படும்.
 
     நலஞ்சிறந்த போகம் - நன்மை பயக்கும் போகங்கள்; நலஞ் சிறவாத
பொல்லாத போகங்களும் உள்ளனவாதலின் அவற்றை நீக்குதற்கு நலஞ்சிறந்த
என்றார். பிறிதினியைபு நீக்கிய விசேடணம்; போகங்கள் - அனுபவங்கள்; உறுப்பு -
அவற்றைப் பெறுதற்குத் கருவியாக உள்ளவை; நன்மையல்லாத போகங்களுக்குச்
சோழரது தலைநகரமாகிய இப்பதியில் இடமில்லை என்றபடி; தீயபோகங்களே