பக்கம் எண் :

1022திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


1130. தாதலர் தாமரைமே லயனுந் திருமாலுந் தேடி
ஓதியுங் காண்பரிய வுமைகோ னுறையுமிடம்
மாதவி வான்வகுள மலர்ந்தெங்கும் விரைதோய வாய்ந்த
போதலர் சோலைகள்சூழ் புகலிப் பதிதானே. 9

1131. வெந்துவர் மேனியினார் விரிகோவண நீத்தார் சொல்லும்
அந்தர ஞானமெல்லா மவையோர் பொருளென்னேல்
வந்தெதி ரும்புரமூன் றெரித்தா னுறைகோயில் வாய்ந்த
புந்தியி னார்பயிலும் புகலிப் பதிதானே. 10

__________________________________________________

9. பொ-ரை: மகரந்தம் விரிந்த தாமரை மலர் மேல் உறையும் பிரமனும் திருமாலும் தேடியும் புகழ்ந்தும் காண்டற்கு அரியவனாய் நின்ற உமை மணவாளனாம் சிவன் உறையுமிடம், மாதவி, வானளாவ உயர்ந்த மகிழமரம் ஆகியன மலர்ந்து எங்கும் மணம் பரப்புமாறு பொருந்திய மலர் விரிந்த சோலைகள் சூழ்ந்த புகலிப் பதியாகும்.

கு-ரை: அயனும் மாலும் தேடியும், ஓதியும் காணுதற்கரிய உமாபதி உறையும் இடம் புகலி என்கின்றது.

தாது - மகரந்தம். மாதவி - குருக்கத்தி. வகுளம் - மகிழ்.

10. பொ-ரை: கொடிய மருதத் துவராடை உடுத்த மேனியினராகிய புத்தர்களும் விரிந்த கோவணம் உடுப்பதையும் துறந்த திகம்பர சமணரும் சொல்லும் அழிவுதரும் ஞானங்களாகிய அவற்றை ஒரு பொருளாகக் கொள்ளாதீர். தம்மை வந்தெதிர்த்த திரிபுரங்களை எரித்தவனாகிய சிவபிரான் உறையும் கோயில், பொருந்திய அறிவு உடையவர் வாழும் புகலிப் பதியாகும். அதனைச் சென்று தொழுமின்.

கு-ரை: புத்தரும் சமணரும் கூறும் ஞானத்தை ஒரு பொருளாகக்கொள்ளேல்; திரிபுரம் எரித்தான் உறையும் கோயில் புகலியாம் என்கின்றது.

வெம் துவர் - கொடிய துவராடை. கோவணம் நீத்தார் - கோவணத்தையும் துறந்தவர்கள். அந்தர ஞானம் - இடையீடு உற்ற ஞானம்.