1200. மறையவ னுலகவன் மாயமவன்
பிறையவன் புனலவ னனலுமவன்
இறையவ னெனவுல கேத்துங்கண்டம்
கறையவன் வளநகர் கடைமுடியே. 5
1201. படவர வேரல்குற் பல்வளைக்கை
மடவர லாளையொர் பாகம்வைத்துக்
குடதிசை மதியது சூடுசென்னிக்
கடவுள்தன் வளநகர் கடைமுடியே. 6
__________________________________________________
5. பொ-ரை: வேதங்களை அருளியவனும்,
அனைத்துலகங்களும் ஆகியவனும், மாயை வடிவினனும்,
சடைமுடியில் பிறை கங்கை ஆகியவற்றை அணிந்தவனும்,
கையில் அனல் ஏந்தியவனும் உலக மக்கள் இறைவன்
எனப் போற்றும் நீல கண்டனுமான சிவபிரானது வளநகர்
கடைமுடியாகும்.
கு-ரை: ‘எல்லாமாயிருப்பவன் இறையவன்‘
என உலகேத்துங் கண்டங்கரியவன் இடம் கடைமுடி என்கின்றது.
மறையவன் - ஒலி வடிவானவன். உலகவன் -
பொருட்பிரபஞ்சவடிவானவன். மாயம் அவன் - இவையிரண்டிற்கும்
அடியாகிய சுத்தமும் அசுத்தமும் ஆன மாயையும் அவன்.
இறையவன் - எல்லா உயிர்களிலும் உள்ளும் புறமுந் தங்குதலையுடையவன்.
கறை - விடம்.
6. பொ-ரை: அரவின் படம் போன்ற அழகிய
அல்குலையும் பலவகையினவான வளையல்களை அணிந்த கைகளையும்
உடைய உமை யம்மையை ஒரு பாகமாக வைத்து, மேற்குத் திசையில்
தோன்றும் பிறை மதியைச் சூடிய சடைமுடியினனாய்
விளங்கும் கடவுளின் வளநகர் கடைமுடியாகும்.
கு-ரை: உமாதேவியை யொருபாகம் வைத்து,
பிறையைச் சூடும் முடியையுடைய கடவுள்நகர் இது என்கின்றது.
பட அரவு ஏர் - அரவின் படத்தையொத்த.
மடவரலாள் - உமாதேவி. குட திசைமதி - இளம்பிறை.
பிறை மேற்கின்கண்ணே தோன்றுமாதலின் இங்ஙனம்
கூறினார்.
|