பக்கம் எண் :

 113. திருவல்லம்1077


1220. பார்த்தவன் காமனைப் பண்பழியப்
போர்த்தவன் போதகத் தின்னுரிவை
ஆர்த்தவன் நான்முகன் றலையையன்று
சேர்த்தவ னுறைவிடந் திருவல்லமே. 3

1221. கொய்தவம் மலரடி கூடுவார்தம்
மைதவழ் திருமகள் வணங்கவைத்துப்
பெய்தவன் பெருமழை யுலகமுய்யச்
செய்தவ னுறைவிடந் திருவல்லமே. 4

__________________________________________________

ஆன அமரர், மானசீலரான முனிவர் முதலானோர்க்குச் சேயவனும் ஆன சிவபிரானது உறைவிடம் திருவல்லமாகும்.

கு-ரை: உலகுக்குத் தாயானவன், ஒப்பில்லாத் தூயவன், தேவர்கட்கும் முனிவர்கட்கும் சேயவன் திருத்தலம் திருவல்லம் என்கின்றது. அமரர் முனிவர் இருவரும் போகிகளாயும், மனனசீலர்களாயும் இருத்தலின் அவர்களுக்குச் சேயவனானான் என்று அருளினர். இவர்களுக்குச் சேயவன் எனவே ஞானிகட்கு மிக அண்ணியன் என்பதாம்.

3. பொ-ரை: மன்மதனின் அழகு கெடுமாறு நெற்றி விழியால் பார்த்து அவனை எரித்தவனும், யானையின் தோலை உரித்துப் போர்த்தவனும், தன்முனைப்போடு ஆரவாரித்த பிரமனின் ஐந்து தலைகளில் ஒன்றைக் கொய்து அத்தலையினது ஓட்டைக் கையில் உண்கலன் ஆகச் சேர்த்துள்ளவனும் ஆகிய சிவபிரானது உறைவிடம் திருவல்லமாகும்.

கு-ரை: காமனை யெரித்தவன். யானையையுரித்தவன். பிரமனைச் சிரங்கொய்தவன் இடம் இது என்கின்றது.

பண்பு - அழகு. போதகம் - யானைக்கன்று. உரிவை - தோல். ஆர்த்தவன் - ஆரவாரம் செய்த பிரமன்.

4. பொ-ரை: அன்பர்களால் கொய்து அணியப்பெற்ற அழகிய மலர் பொருந்திய திருவடிகளைச் சேர்பவர்களைப் பலரிடத்தும் மாறி மாறிச் செல்லும் இயல்பினளாகிய திருமகளை வணங்குமாறு செய்விப்பவனும், பெருமழை பெய்வித்து உலகை உய்யுமாறு செய்பவனுமாய சிவபிரானது உறைவிடம் திருவல்லமாகும்.