பக்கம் எண் :

1080திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


1226. அன்றிய வமணர்கள் சாக்கியர்கள்
குன்றிய வறவுரை கூறாவண்ணம்
வென்றவன் புலனைந்தும் விளங்கவெங்கும்
சென்றவ னுறைவிடந் திருவல்லமே. 10

1227. கற்றவர் திருவல்லங் கண்டுசென்று
நற்றமிழ் ஞானசம் பந்தன்சொன்ன
குற்றமில் செந்தமிழ் கூறவல்லார்
பற்றுவ ரீசன்பொற் பாதங்களே. 11

திருச்சிற்றம்பலம்

__________________________________________________

கு-ரை: பெரியவன், சிறியவர்கள் தியானித்தற்கு அரியவன், வேதமும் அங்கமும் ஆனான், அயனும் மாலுங்காண ஒண்ணாத தெரியவன்நகர் இது என்கின்றது. தெரியவன் - தெரியநிற்பவன். முனைப்படங்கிய முத்தான்மாக்களுக்கு விளங்கி நிற்பவன் என்பதாம்.

10. பொ-ரை: கொள்கைகளால் மாறுபட்ட சமணர்களும் புத்தர்களும் அறம் குன்றிய உரைகளைக் கூறாவாறு, ஐம்புலன்களையும் வென்றவனும், எங்கும் விளங்கித் தோன்றுபவனும் ஆகிய சிவபிரான் உறைவிடம் திருவல்லமாகும்.

கு-ரை: சமணரும், புத்தரும் அறமிலா உரை பேசாவண்ணம் ஐம்புலன்களையும் வென்றவன் நகர் வல்லம் என்கின்றது. அன்றிய - மாறுபட்ட. அறம் குன்றிய உரை என மாறுக.

11. பொ-ரை: கற்றவர்கள் வாழும் திருவல்லத்தைத் தரிசித்துச் சென்று நற்றமிழ்வல்ல ஞானசம்பந்தன் பாடிய குற்றமற்ற இச்செந்தமிழ்ப் பதிகத்தைக் கூற வல்லவர்கள் சிவபிரானுடைய அழகிய திருவடிகளை அடைவர்.

கு-ரை: ஞானசம்பந்தப் பெருமான் திருவல்லத்தைக் கண்டு சொன்ன குற்றம் இல் செந்தமிழ்ப் பாடலாகிய இவற்றைக் கூறவல்லவர் ஈசன் பாதங்களைப் பற்றுவர் என்கின்றது. கண்டு சென்று சொன்ன என்பதால் இப்பதிகம் திருவல்லத்தை வழிபட்டுப்போன பின்பு சிவனந்தாநுபவம் சிந்தையில் நிறைய ஆக்கப்பெற்றதாகும் என்பது அறியப்பெறும்.