பக்கம் எண் :

 115. திருஇராமனதீச்சரம்1085


1237. அந்தமின் ஞானசம் பந்தன்சொன்ன
செந்திசை பாடல்செய் மாற்பேற்றைச்
சந்தமின் றமிழ்கள்கொண் டேத்தவல்லார்
எந்தைதன் கழலடி யெய்துவரே. 11

திருச்சிற்றம்பலம்

_________________________________________________

11. பொ-ரை: ஞானசம்பந்தன் செவ்விய இசையால் பாடிப் போற்றிய மாற்பேற்றைத் தரிசித்துச் சந்த இசையோடு கூடிய அழிவற்ற இனிய இத்திருப்பதிகப் பாடல்களைக் கொண்டு ஏத்தி வழிபட வல்லவர் எந்தையாகிய சிவபிரானின் கழலணிந்த திருவடிகளை எய்துவர்.

கு-ரை: அந்தம் இல் - அழிவற்ற. சந்தம் இன் தமிழ் - இசையோடு கூடிய இனிய தமிழ். இப்பதிகம் பாடினவர்க்குப் பயன் திருவடிப்பேறு எனச் சொல்லப்படுகின்றது. செந்து இசை பாடல் - செவ்விய இசையையுடைய பாடல். து - சாரியை.

திருக்களிற்றுப்படியார்

ஓடம் சிவிகை யுலவாக் கிழியடைக்கப்
பாடல் பனைதாளம் பாலைநெய்தல் - ஏடெதிர்வெப்(பு)
என்புக்கு உயிர்கொடுத்தல் ஈங்கிவைதாம் ஓங்குபுகழ்த்
தென்புகலி வேந்தன் செயல்.

- உய்யவந்ததேவ நாயனார்.

திருஞானசம்பந்தர் புராணம்

ஞானத்தின் திருவுருவை நான்மறையின் தனித்துணையை
வானத்தின் மிசையன்றி மண்ணில்வளர் மதிக்கொழுந்தைத்
தேனக்க மலர்க்கொன்றைச் செஞ்சடையார் சீர்தொடுக்குங்
கானத்தின் எழுபிறப்பைக் கண்களிப்பக் கண்டார்கள்.

- சேக்கிழார்.