பக்கம் எண் :

1086திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


115. திருஇராமனதீச்சரம்

பதிக வரலாறு:

திருப்பனையூரை வணங்கிவருகின்ற சிரபுரச்செல்வர் திருஇராமனதீச்சரத்தை அடைந்து "சங்கொளிர்" என்னும் இப்பதிகத்தையருளிச் செய்தார்.

பண் : வியாழக்குறிஞ்சி

பதிக எண்: 115

திருச்சிற்றம்பலம்

1238. சங்கொளிர் முன்கையர் தம்மிடையே
அங்கிடு பலிகொளு மவன்கோபப்
பொங்கர வாடலோன் புவனியோங்க
எங்கும னிராமன தீச்சரமே. 1

1239. சந்தநன் மலரணி தாழ்சடையன்
தந்தம தத்தவன் றாதையோதான்
அந்தமில் பாடலோ னழகனல்ல
எந்தவ னிராமன தீச்சரமே. 2

__________________________________________________

1. பொ-ரை: சங்கு வளையல்கள் அணிந்த முன்கைகளை உடைய முனி பன்னியர் வாழும் வீதிகளிடையே சென்று அங்கு அவர்கள் இடும் பலியை மகிழ்வோடு கொள்பவனும், சினம் பொங்கும் அரவைப் பிடித்து ஆட்டுபவனும், உலக மக்கள் உயர்வுபெற எங்கும் நிறைந்திருப்பவனுமாகிய சிவபிரானது தலம் இராமனதீச்சரம்.

கு-ரை: முனிபன்னியர் இடும்பலியை ஏற்பவனும், அரவு அணிந்தவனும், உலகமெலாம் உயர எங்கும் மன்னியிருப்பவனும் ஆகிய சிவனிடம் இராமனதீச்சரம் என்கின்றது. சங்கு - வளையல். அங்கு - அசை. புவனி - பூமி.

2. பொ-ரை: அழகிய நல்ல மலர்களை அணிந்து தாழ்ந்து தொங்கும் சடையினை உடையவனும், தந்தத்தையும் மதத்தையும் உடைய விநாயகப் பெருமானின் தந்தையும், முடிவற்ற இசைப்பாடல்களைப் பாடுபவனும், அழகனும், எங்கள் தவப்பேறாய் விளங்கும் நல்லவனுமாய சிவபிரானது தலம், இராமனதீச்சரம்.