பக்கம் எண் :

 115. திருஇராமனதீச்சரம்1087


1240. தழைமயி லேறவன் றாதையோதான்
மழைபொழி சடையவன் மன்னுகாதில்
குழையது விலங்கிய கோலமார்பின்
இழையவ னிராமன தீச்சரமே. 3

1241. சத்தியு ளாதியோர் தையல்பங்கன்
முத்திய தாகிய மூர்த்தியோதான்
அத்திய கையினி லழகுசூலம்
வைத்தவ னிராமன தீச்சரமே. 4

__________________________________________________

கு-ரை: தாழ்சடையன், விநாயகப்பெருமான் தாதை, பாடலன், அழகன் நகர் இது என்கின்றது. சந்தம் - அழகு. தந்தமதத்தவன் - தந்தத்தையும் மதத்தையும் உடைய விநாயகப்பெருமான். அந்தம் இல் - எல்லையில்லாத.

3. பொ-ரை: தழைத்த பீலியோடு கூடிய மயில்மீது ஏறிவரும் முருகனது தந்தையும். உலகிற்கு நீர்வளந்தரும் கங்கை பாயும் சடையினை உடையவனும், காதில் நிலைபெற்று விளங்கும் குழையை அணிந்தவனும், அழகிய மார்பில் குறுக்காக முப்புரிநூல் அணிந்தவனுமாகிய சிவபிரானது தலம் இராமனதீச்சரம்.

கு-ரை: முருகன் தாதை, மார்பில் பூணூலன் நகர் இதுவே என்கின்றது. தழை மயில் - பீலியோடு கூடிய மயில். ஏறவன் - ஏறுதலையுடையவன். மழை - நீர்த்துளி. குழை - காதணி. கோலம் - அழகு. இழை - பூணூல்; ஆபரணமும் ஆம்.

4. பொ-ரை: சத்திகளில் முதல்வியாக விளங்கும் உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டவனும், உயிர்கட்கு முத்திப்பேறாக விளங்கும் கடவுளும், தீயேந்திய கையில் அழகிய சூலத்தைத் தாங்கியவனுமாகிய சிவபிரானது தலம் இராமனதீச்சரம்.

கு-ரை: ஆதி சத்தியின் தலைவன், முத்திதரு முதல்வன் நகர் இது என்கின்றது.

அத்தியகையினில் அழகு சூலம் வைத்தவன் - சங்கார கிருத்தியஞ்செய்யும் தீயேந்திய திருக்கரத்தில் அழகுக்காகச் சூலத்தை ஏந்தியவன். இதன் நயம் ஓர்க.