1242. தாழ்ந்தகு ழற்சடை முடியதன்மேல்
தோய்ந்த விளம்பிறை துலங்குசென்னிப்
பாய்ந்தகங் கையொடு படவரவம்
ஏய்ந்தவ னிராமன தீச்சரமே. 5
1243. சரிகுழ லிலங்கிய தையல்காணும்
பெரியவன் காளிதன் பெரியகூத்தை
அரியவ னாடலோ னங்கையேந்தும்
எரியவ னிராமன தீச்சரமே. 6
1244. மாறிலா மாதொரு பங்கன்மேனி
நீறது வாடலோ னீள்சடைமேல்
ஆறது சூடுவா னழகன்விடை
ஏறவ னிராமன தீச்சரமே. 7
__________________________________________________
5. பொ-ரை: தலையில், தாழ்ந்த
கூந்தலால் இயன்ற சடை முடியின்மேல், அழகு தோய்ந்த
இளம்பிறை, பாய்ந்துவரும் கங்கை, படம் பொருந்திய
அரவம் ஆகியவற்றைச் சூடிய சிவபிரானது தலம்
இராமனதீச்சரம்.
கு-ரை: பிறையணிந்த சென்னியோடு
கங்கை பாம்பு அணிந்தவன் நகர் இது என்கின்றது.
ஏய்ந்தவன் - பொருந்தியவன்.
6. பொ-ரை: பிடரியின்மேல்
விளங்கும் சுருண்ட கூந்தலினளாகிய உமையம்மை
அருகிலிருந்து காணும் பெரியவனும், காளியின் பெரிய
கூத்தோடு போட்டியிட்டு அவளால் அறிதற்கு
அரியவனாய், நடனமாடுபவனும், அழகிய கையில் எரி
ஏந்தி விளங்குபவனுமாகிய சிவபிரானது தலம்
இராமனதீச்சரம்.
கு-ரை: பராசக்தி காணும் பெரியவன்,
காளியின் கூத்திற்கு அரியவன், ஆனந்தக் கூத்தன்
நகர் இது என்கின்றது. சரிகுழல் - பிடரிமீது சரிந்த
கூந்தல். இத்தலத்து இறைவிநாமம் சரியார் குழலி.
7. பொ-ரை: தனக்கு ஒப்பாரில்லாத
அழகிய உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டவனும்,
திருமேனியில் திருநீற்றை அணிந்தவனும், நீண்ட
சடைமுடியின்மேல் கங்கையைச் சூடியவனும் அழகனும்,
விடையின்மேல் ஏறி வருபவனுமாகிய சிவபிரானது தலம்
இராமனதீச்சரம்.
|