1311. மறையவ னுலகவன்
மதியவன் மதிபுல்கு
துறையவ னெனவல
வடியவர் துயரிலர்
கறையவன் மிடறது
கனல்செய்த கமழ்சடை
இறையவ னுறைதரு
மிடமிடை மருதே. 8
1312. மருதிடை நடவிய
மணிவணர் பிரமரும்
இருதுடை யகலமொ
டிகலின ரினதெனக்
கருதிட லரியதொ
ருருவொடு பெரியதொர்
எருதுடை யடிகள்தம்
இடமிடை மருதே. 9
__________________________________________________
8. பொ-ரை: வேதங்களை அருளியவனும்
அனைத்துலகங்களாய் விளங்குபவனும், திங்களாகத்
திகழ்பவனும், அறிவொடுபட்ட கலைத் துறைகளாக
விளங்குபவனும் சிவபிரானேயாவன் என்று
போற்றவல்ல அடியவர் துயரிலராவர். மிடற்றிற்
கறையுடையவனும் கனல்போல் விளங்கும் சடையினனும்
எல்லோர்க்கும் தலைவனும் ஆய அப்பெருமான் உறையும்
இடம் இடைமருதாகும்.
கு-ரை: வேதியன், உலகெலாமாயவன்
என்றெல்லாம் சொல்ல வல்ல அடியவர்கள் துயரிலர்
என்கின்றது. செந்தீக் கொழுந்துபோலச்
சுடர்விடும் சடையவன் என்க. மிடறது கறையவன் என
மாறிக் கூட்டுக.
9. பொ-ரை: மருதமரங்களின் இடையே
கட்டிய உரலோடு தவழ்ந்த நீலமணிபோன்ற நிறத்தை
உடைய திருமாலும், பிரமனும் மிக்க பெருமையுடையவர்
யார் எனத் தம்முள் மாறுபட்டவராய் நிற்க
அவர்கள் இன்னதெனக் கருதற்கரிய பெரிய ஒளி
உருவோடு தோன்றிய பெரிய விடையூர்தியனாகிய
சிவபிரானது இடம் இடைமருதாகும்.
|