1399. வேந்தாகி விண்ணவர்க்கு மண்ணவர்க்கு
நெறிகாட்டும் விகிர்தனாகிப்
பூந்தாம நறுங்கொன்றை சடைக்கணிந்த
புண்ணியனார் நண்ணுங்கோயில்
காந்தார மிசையமைத்துக் காரிகையார்
பண்பாடக் கவினார்வீதித்
தேந்தாமென் றரங்கேறிச் சேயிழையார்
நடமாடுந் திருவையாறே. 6
1400. நின்றுலா நெடுவிசும்பு னெருக்கிவரு
புரமூன்று நீள்வாயம்பு
சென்றுலாம் படிதொட்ட சிலையாளி
மலையாளி சேருங்கோயில்
_________________________________________________
6. பொ-ரை: அனைத்துலகங்களுக்கும்
வேந்தனாய், விண்ணவர்களுக்கும், மண்ணவர்களுக்கும்
வழி காட்டும் வள்ளலாய், மணங்கமழும் கொன்றை
மாலையைச் சடையின்மிசை அணிந்தவனாய் புண்ணிய
வடிவினனாய் விளங்கும் சிவபிரான் எழுந்தருளிய
கோயிலையுடையது. மகளிர் காந்தாரப் பண்ணமைத்து
இசைபாட அழகிய வீதிகளில் அமைந்த அரங்கங்களில்
ஏறி அணிகலன்கள் பூண்ட இளம் பெண்கள் தேம், தாம்
என்ற ஒலிக் குறிப்போடு நடனம் ஆடும்
திருவையாறாகும்.
கு-ரை: அரசாகி, வழிகாட்டும்
வள்ளலாகிய பூங்கொன்றை சடைக்கணிந்த புண்ணியர்
கோயில் காந்தாரப்பண்ணமைத்து மகளிர் இசைபாட,
சேயிழையார் சிலர் அரங்கேறி நடமாடும் ஐயாறு
என்கின்றது. தாமம் - மாலை.
7. பொ-ரை: நீண்ட வானவெளியில்
நின்று உலவி, தேவர்கள் வாழ்விடங்களை
அழித்துவந்த முப்புரங்களையும், நீண்ட கூரிய அம்பு
சென்று உலவும்படி கணை தொடுத்த வில்லாளியும்,
கயிலைமலை ஆளியுமாகிய சிவபிரான் சேர்ந்துறையும்
கோயிலையுடையது, சிறுமலைகளில் குயில்கள் கூவவும்,
செழுமையான தேன் நிறைந்த மலர்களைத் தீண்டி மணம்
மிகுந்து வருவதாகிய தென்றல் காற்று அடிவருடவும்,
அவற்றால் செழுமையான கரும்புகள் கண் வளரும்
வளமுடைய திருவையாறாகும்.
|