பக்கம் எண் :

1230திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


134. திருப்பறியலூர்வீரட்டம்

பதிக வரலாறு:

திருச்செம்பொன்பள்ளி திருவிளநகர் முதலிய தலங்களை வணங்கிக்கொண்டு, பிள்ளையார் பரமர்தம் திருப்பறியலூரைப் பரவி, இப்பதிகத்தை அருளிச்செய்தார்கள்.

பண்: மேகராகக்குறிஞ்சி

பதிக எண்: 134

திருச்சிற்றம்பலம்

1437. கருத்தன் கடவுள் கனலேந் தியாடும்
நிருத்தன் சடைமே னிரம்பா மதியன்
திருத்த முடையார் திருப்பறி யலூரில்
விருத்த னெனத்தகும் வீரட்டத் தானே. 1

1438. மருந்த னமுதன் மயானத்துண் மைந்தன்
பெருந்தண் புனற்சென்னி வைத்த பெருமான்
திருந்து மறையோர் திருப்பறி யலூரில்
விரிந்த மலர்ச்சோலை வீரட்டத் தானே. 2

_________________________________________________

1. பொ-ரை: திருந்திய மனமுடையவர்கள் வாழும் திருப்பறியலூரில் தொன்மையானவனாய் விளங்கும் வீரட்டானத்து இறைவன் அனைத்துலகங்களுக்கும் தலைவனும், கடவுளுமாக இருப்பவன். கையில் கனலேந்தி நடனம் புரிபவன். சடைமுடி மீது இளம்பிறை அணிந்தவன்.

கு-ரை: இப்பதிகம் முழுவதும் எல்லாவுயிர்கட்கும் கருத்தனாய், கடவுளாய், விருத்தனாய் இருப்பவன் திருப்பறியலூர் வீரட்டத் தான் என இறைவனியல்பு அறிவிக்கின்றது. திருத்தம் உடையார் - பிழையொடு பொருந்தாதே திருந்திய மனமுடைய அடியார் விருத்தன் - தொன்மையானவன்.

2. பொ-ரை: ஒழுக்கத்திற் சிறந்த அந்தணர்கள் வாழும் விரிந்த மலர்ச் சோலைகளையுடைய திருப்பறியலூரில் விளங்கும் வீரட்டானத்து இறைவன், பிணிதீர்க்கும் மருந்தாவான். உயிர் காக்கும்