பக்கம் எண் :

282திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


வானியன்றபிறை வைத்தவெம்மாதி

மகிழும்வலிதாயந்

தேனியன்றநறு மாமலர்கொண்டுநின்

றேத்தத்தெளிவாமே. 6

29. கண்ணிறைந்தவிழி யின்னழலால்வரு

காமன்னுயிர்வீட்டிப்

பெண்ணிறைந்தவொரு பான்மகிழ்வெய்திய

பெம்மானுறைகோயில்

மண்ணிறைந்தபுகழ் கொண்டடியார்கள்

வணங்கும்வலிதாயத்

துண்ணிறைந்தபெரு மான்கழலேத்தநம்

முண்மைக்கதியாமே. 7

__________________________________________________

சடையின்மேல் வானகத்துப் பிறைக்கு அடைக்கலம் அளித்துச் சூடிய எம் முதல்வனும் ஆகிய பெருமான், மகிழ்ந்துறையும் திருவலி தாயத்தைத் தேன் நிறைந்த நறுமலர் கொண்டு நின்று ஏத்தச் சிவஞானம் விளையும்.

கு-ரை: இது வலிதாயம் தொழ ஞானம் உண்டாம் என்கின்றது. ஊனியன்ற தலை - ஊன்கழிந்த தலை. பலி - பிச்சை. கான் - காடு. வானியன்ற - வானில் இலங்குகின்ற. ஆதி - முதற்பொருள்; யாவற்றிற்கும் முதலாயுள்ளவன். தெளிவு - ஞானம்.

7. பொ-ரை: வலிதாய நாதன் கழலை ஏத்தினால் வீட்டின்பத்தை அடையலாம் என வினை முடிபு காண்க. நெற்றி விழியின் அழலால், தேவர் ஏவலால் வந்த காமனது உயிரை அழித்துத் தனது திருமேனியின் பெண்ணிறைந்த இடப் பாகத்தால் மகிழ்வெய்திய பெருமான் உறை கோயிலாய் நிலவுல கெங்கும் நிறைந்த புகழைக்கொண்ட, அடியவர்கள் வணங்கும் திருவலிதாயத்துள் நிறைந்து நிற்கும் பெருமான் திருவடிகளை வணங்கினால் வீடு பேறு அடையலாம்.

கு-ரை: இது ஆன்மாக்கள் என்றும் அடையத்தகும் கதியாகிய வீட்டின்பத்தை வலிதாயநாதன் கழல் ஏத்த அடையலாம் என்கின்றது. கண்நிறைந்த விழி - கண்ணாகிய உறுப்பு முழுவதும் வியாபித்திருக்கின்ற விழி. அன்றியும் கண் நிறைந்த அழல் எனவும் கூட்டலாம்.