__________________________________________________
கையில் வளையல்
அணிந்த மகளிர் தம் துணைவர்களோடும் கூடி வந்து
வழிபடுவதும், பொன் மாளிகைகள் நிறைந்ததுமான
கூடல் ஆலவாயின்கண் விரும்பி உறைதற்குக் காரணம்
யாதோ? சொல்வாயாக.
கு-ரை: பாடகம் -
காலணிகளுள் ஒன்று. பாடக மெல்லடி என்று இணைத்தது
பாடகத்தின் வன்மையும் அதனைத் தாங்கல் ஆற்றாத
அடியின் மென்மையும் குறித்தவாறு. சூடகம் - வளை.
துணைவர் - கணவர். ஆடகமாடம் - பொன்மாளிகைகள்.
குருவருள்: பாண்டி
நாட்டின் மூன்று வாதங்களிலும் வெற்றி கொண்டு சைவ
சமயத்தை நிலைநிறுத்திய பிள்ளையார், பாண்டியன்
நெடுமாறன், மங்கையர்க்கரசியார், குலச்சிறையார்
ஆகிய மூவரும் பிரிவாற்றாது உடன்வர பாண்டி
நாட்டுத் தலங்களைத் தரிசித்துப் பதிகம் பாடிப்
பாண்டிநாட்டுக் கீழ் எல்லையில் உள்ளதும்
குலச்சிறையார் அவதரித்ததுமான மணமேற்குடி வந்து
வழிபட்டுச் சுற்றியுள்ள பல பதிகளையும் வணங்கிப்
போற்றினார். காவிரி நாடு மீண்டருளத் திருவுளம்
பற்றினார். தன்னோடு உடன் வந்த மன்னன் முதலிய
மூவரும் பிரிவாற்றாது உடன்வரும் குறிப்பு நோக்கிய
பிள்ளையார், "இங்கு நான் மொழிந்ததனுக்கு
இசைந்தீராகில் ஈசர் சிவநெறி போற்றி
இருப்பீர்" என்று அவர்கட்கு விடைகொடுத்துப்
பொன்னி நாடணைந்தார். பாண்டிநாட்டில்
அனல்வாதம் செய்தபோது கயிறு சாத்திப்
பார்த்தபோது "போகமார்த்த பூண்முலையாள்"
என்னும் திருநள்ளாற்றுப் பதிகம் கிடைத்தது.
அதனால் வெற்றியும் கிடைத்தமையைத் திருவுளம்
கொண்டு நள்ளாறு சென்று வழிபட எண்ணினார்.
வழியில் திருக்கொள்ள பூதூர் முதலிய தலங்களை
வழிபட்டுத் திருநள்ளாறு சேர்ந்து நம்பெருமானைப்
"பாடகமெல்லடிப் பாவையோடும்" என்னும்
பதிகத்தால் பெருமான் நடத்திய நாடகத்தை
"நாடகம் ஆடும் நள்ளாறுடைய நம்பெருமான் இது
என்கொல் சொல்லாய்?" என்று வினவினார்.
பிள்ளையார் நம்பெருமான் என்றே இப்பதிகப்
பாடல்தோறும் குறிப்பிட்டுள்ளார்.
தர்ப்பாரண்யேசுரர் என்று இன்று வழங்கும் பெயர்
குறிக்கப்பெறாமை சிந்திக்கத்தக்கது.