கண்டார் அப்பரடிகள். அதன் பிறகுதான்
அப்பர், ‘பாட
அடியார் பரவக்கண்டேன்’ என்று பாடுகிறார்.
முத்தமிழ் விரகராம்
ஞானசம்பந்தர்
மூல இலக்கியங்களாகப் பலவற்றை இயற்றியதோடு
அவையெல்லாம் இசை நுணுக்கம் வாய்ந்த பாடல்களாகப்
பாடியுள்ள சிறப்பு, அவதாரத்திற்கு 16 காரணங்கள்
குறிப்பிடும் சேக்கிழார் வாக்கு, குடை, திருச்சின்னம்,
சிவிகை, முத்துவிதானம் போன்ற ஆசாரியருக்குரிய
அங்கங்கள் எல்லாம் ஞானசம்பந்தருக்கே கொடுத்துள்ளமை
முதலியவற்றால் முதன்மை ஆசாரியத்துவம் ஞானசம்பந்தருக்கே
வழங்கியுள்ளமை புலனாகிறது. மேலும் இவர் முத்திப்பேறெய்திய
ஆச்சாள்புரம் ஆச்சாரியபுரம் என்று வழங்கியமையாலும்
இக்கருத்தை நன்கு தெளியலாம்.
பண் அடைவு:
பண்முறைப் பதிப்பு, தலமுறைப் பதிப்பு
என்னும் இருவகைப் பதிப்புக்களே நடைமுறையில் வெளிவந்துள்ளன.
அடுத்து வரலாற்று முறைப் பதிப்பும் விரைவில் வெளிவர
வேண்டியது அவசியமாகும்.
முதல் திருமுறையில்
நட்டப்பாடைப் பண்ணில்
22 பதிகங்களும், தக்கராகப் பண்ணில் 24 பதிகங்களும்,
பழந்தக்கராகப் பண்ணில் 8 பதிகங்களும், தக்கேசிப்
பண்ணில் 12 பதிகங்களும், குறிஞ்சிப் பண்ணில்
24 பதிகங்களும், வியாழக் குறிஞ்சிப் பண்ணில்
25 பதிகங்களும், மேகராகக் குறிஞ்சிப் பண்ணில்
8 பதிகங்களும் ஆக 136 பதிகங்களும், 88 தலங்களும்
உள்ளன. இவற்றுள் "மாதர் மடப்பிடியும்"
என்ற பதிகம் யாழ்முரி என்றிருந்த போதிலும்,
அதுவும் மேகராகக் குறிஞ்சிப் பண்ணேயாகும்.
யாழை முரிக்கத் துணை நின்றதால் யாழ்முரி என்று பெயர்
பெற்றதே அன்றி அது தனிப் பண்ணல்ல என்பதும் அறிக.
அந்தாளிக் குறிஞ்சிப் பண்ணில் ஆச்சாள்புரத்திலே,
திருமண நிறைவின்போது, பாடிய, "கல்லூர்ப்
பெருமணம்" என்று தொடங்கும் பதிகமும், திருக்குருகாவூர்
வெள்ளடையில் பாடியருளிய "சுண்ணவெண் ணீறணி"
என்று தொடங்கும் பதிகமும் ஆக இரண்டு பதிகங்களே உள்ளன.
பண் முறைப்படி பார்த்தால், குறிஞ்சி,
வியாழக் குறிஞ்சி, மேகராகக் குறிஞ்சிக்கு
அடுத்ததாக அந்தாளிக் குறிஞ்சிப் பண் இடம் பெற்றிருக்க
வேண்டும். ஞானசம்பந்தர் வாழ்வின் நிறைவில்
பாடியதால் அப்பண்ணை மட்டும் மூன்றாம் திருமுறையின்
நிறைவில் சேர்த்துள்ளனர். பண்முறைப் பதிப்பு
என்ற முறையில்
|