பக்கம் எண் :

354திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


112. ஆயாதன சமயம்பல

வறியாதவன் நெறியின்

தாயானவ னுயிர்கட்குமுன்

தலையானவன் மறைமுத்

தீயானவன் சிவனெம்மிறை

செல்வத்திரு வாரூர்

மேயானவ னுறையும்மிடம்

வீழிம்மிழ லையே. 5

__________________________________________________

பொருந்தப் பாடுங்கால் உண்டாகின்ற உள்ளத்து உணர்வாகிய சுவை. உறுதாளத்தொலி - அங்ஙனம் சுவையை அனுபவிக்கும்போது உண்டாகின்ற சச்சபுடம், சாசபுடம் முதலான தாளஒத்துக்கள் பலவும். சுடர் மூன்றும் - சூரியன், சந்திரன், அக்கினி என்ற ஒளிப் பொருள் மூன்றும், இப்பகுதி இறைவனுடைய அட்டமூர்த்தி வடிவம் கூறுகிறது. உயிர் - இயமானனாகிய ஆன்மா.

5. பொ-ரை: சுருதி, யுக்தி, அநுபவங்களால் ஆராய்ச்சி செய்யாத பல சமயங்களால் அறியப் பெறாதவன். அறநெறிகளின் தாயாய் விளங்குவோன். எல்லா உயிர்கட்கும் அநாதியாகவே தலைவன். வேத வேள்விகளில் முத்தீ வடிவினன். சிவன் எனும் திருப் பெயருடையவன். எங்கட்குத் தலைவன். செல்வம் நிறைந்த திருவாரூரில் எழுந்தருளியிருப்பவன். அத்தகையோன் உறையுமிடம் திருவீழிமிழலை.

கு-ரை: ஆயாதன சமயம் பல அறியாதவன் - இறையுண்மையையும் இறையிலக்கணத்தையும், அளவையானும், அநுபவத்தானும் உள்ளவாறு ஆராயாதனவாகிய சித்தாந்த சைவம் ஒழிந்த ஏனைச் சமயங்களால் சிறப்பியல்பை அறியப் பெறாதவன். நெறி - இறைவனை அறிதற்கு ஏற்ற பல்வேறு சமயநிலைகள். உயிர்கட்கு முன் தலையானவன் - ஆன்மாக்கட்கு அநாதியே தலைமையாக அமைந்தவன். மறை முத்தீயானவன் - வேத வேள்விக் கேற்ற சிவாக்கினியாகிய முத்தீயானவன். ஆயாதன என்பது முதல் தீயானவன் என்பது வரை இறையிலக்கணம் கூறியது. சிவன் எனச் சிறப்பியல்பு கூறியது. எம்மிறை எனத் தம்மோடு உளதாகிய அநாதித் தொடர்பு கூறியது. செல்வத் திருவாரூர் மேயான் என்றது திருவாரூரின் தொன்மை நோக்கிக் கூறியது.