பக்கம் எண் :

362திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


121. விளையாததொர் பரிசில்வரு

பசுபாசவே தனையொண்

தளையாயின தவிரவ்வருள்

தலைவன்னது சார்பாம்

களையார்தரு கதிராயிரம்

உடையவ்வவ னோடு

முளைமாமதி தவழும்முயர்

முதுகுன்றடை வோமே. 3

__________________________________________________

3. பொ-ரை: உயிர்களுடன் அநாதியாகவே வருகின்ற வேதனைகளைத் தரும் பாசங்களாகிய ஒள்ளிய தளைகள் நீங்குமாறு அருள்புரிதற்கு எழுந்தருளிய சிவபிரானது இடம், ஒளி பொருந்திய கிரணங்கள் ஆயிரத்தைக் கொண்ட கதிரவனும் முளைத்தெழுந்து வளரும் சந்திரனும் தவழும் வானளாவிய மலையாகிய திருமுதுகுன்றமாகும். அதனை அடைவோம்.

கு-ரை: விளையாதது ஒருபரிசில்வரும் பசுபாச வேதனை ஒண்தளை - மீண்டும் அங்குரியாதவாறு அவிந்ததாகிய ஒரு தன்மையில் வரும் பாசங்களாகின்ற துன்பத்தைத் தருகின்ற ஒள்ளிய கட்டு. பசுபாசம் - ஆன்மாக்களை அனாதியே பந்தித்து நிற்கும் ஆணவமலக்கட்டு எனப்பாசத்திற்கு அடையாளமாய் நின்றது. வேதனை - துன்பம் எனப் பொருள் கொண்டு அதன் காரணமாகிய தீவினை என்பாரும் உளர். அப்போது பாசவேதனை உம்மைத்தொகை. பாசமும் வேதனையும் என்பது பொருள். வேதனைக்கு விளையாமையாவது பிராரத்தத்தை நுகருங்கால் மேல்வினைக்கு வித்தாகாவண்ணம் முனைப்பின்றி நுகர்தல். சார்பு - இடம். களை - தேஜஸ். ஆயிரம் பன்மை குறித்து நின்றது. கதிர் ஆயிரம் உடையவன் - சூரியன். சகத்திர கிரணன் என்னும் பெயருண்மையையும் அறிக. செங்கதிரோடு முளைமாமதி தவழும் முதுகுன்று என்றமையால் பிள்ளையார் கண்ட காலம் வளர்பிறைக் காலத்து மூன்றாம் நாளாகலாம் என்று ஊகிக்கலாம்.

குருவருள்: இறை, உயிர், தளை என்ற முப்பொருள்களும் என்றும் உள்ள உண்மைப் பொருள்கள். ஒரு காலத்தே தோன்றியன அன்று. இக்கருத்தையே "விளையாததொர் பரிசில்வரு பசுபாச வேதனை ஒண்தளை" என்றார். இவை நீங்க அருள்பவனே இறையாகிய தலைவன் என்று குறிப்பிட்டுள்ளார். இதில் பசு - உயிர். பாசம் - ஆணவம். வேதனை - நல்வினை தீவினையாகிய இருவினைகள்.