172. நீதியறி யாதாரமண்
கையரொடு மண்டைப்
போதியவ ரோதும்முரை
கொள்ளார்புள மங்கை
ஆதியவர் கோயில்திரு
வாலந்துறை தொழுமின்
சாதிம்மிகு வானோர்தொழு
தன்மைபெற லாமே. 10
173. பொந்தின்னிடைத் தேனூறிய
பொழில்சூழ்புள மங்கை
அந்தண்புனல் வருகாவிரி
யாலந்துறை யானைக்
கந்தம்மலி கமழ்காழியுட்
கலைஞானசம் பந்தன்
சந்தம்மலி பாடல்சொலி
யாடத்தவ மாமே. 11
திருச்சிற்றம்பலம்
__________________________________________________
10. பொ-ரை: நீதி அறியாத அமணராகிய
கீழ் மக்களும் பிச்சைப் பாத்திரத்தைக் கையில்
ஏந்திப் போதிமரத்தடியில் உறையும் புத்த மதத்தினரும்
கூறும் உரைகளை மெய்ம்மை எனக் கொள்ளாது எல்லாப்
பொருள்கட்கும் ஆதியானவனாகிய ஆலந்துறைப் புள்ளமங்கைக்
கோயிலில் உறையும் இறைவனைத் தொழுமின்; பல்வேறு
பிரிவினராகிய தேவர்கள் தொழும் தன்மை பெறலாம்.
கு-ரை: அமண்கையர் - அமணர்களாகிய
கீழ்மக்கள். மண்டைப் போதியவர் - மண்டையை
(பிச்சைக் கலத்தை)க் கையிலுடைய புத்தர். சாதி
மிகுவானவர் - முப்பத்துமூன்று கோடியாகச் சாதியினையுடைய
தேவர்கள்.
11. பொ-ரை: மரப்பொந்துகளில்
தேனீக்கள் சேகரித்த தேன் மிகுதியான அளவில்
கிடைக்கும் பொழில்கள் சூழ்ந்ததும், அழகிய
தண்மையான நீரைக் கொணர்ந்துதரும் காவிரிக்கரையில்
உள்ளதும் ஆகிய ஆலந்துறைப் புள்ளமங்கை இறைவனை,
மணம் நிறைந்து
|