பக்கம் எண் :

410திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)



186. அச்சம்மிலர் பாவம்மிலர்

கேடும்மில ரடியார்

நிச்சம்முறு நோயும்மிலர்

தாமுந்நின்றி யூரில்

நச்சம்மிட றுடையார்நறுங்

கொன்றைநயந் தாளும்

பச்சம்முடை யடிகள்திருப்

பாதம்பணி வாரே. 2

__________________________________________________

சாந்தமும் நீறேயாம், பால் அம்மதி - பால்போலும் அழகிய மதி, அம்தவிர்வழி வந்த சாரியையுமாம். பண்டைக்காலன் என்றது இப்போது சிவனடியார்மேல் செல்லும் முனைப்பற்று இருக்கின்ற நிலையை உளத்தடைத்து.

2. பொ-ரை: நஞ்சை மிடற்றிலே நிறுத்தித் தேவர்களைக் காத்தருளியவரும், மணம் கமழும் கொன்றை மலர்களை விரும்பிச் சூடியவரும், தம்மை வழிபடும் அடியவர்களை ஆட்கொண்டருளும் அன்புடையவரும் ஆகிய நின்றியூரில் விளங்கும் இறைவரது பாதம் பணிவார் அச்சம், பாவம், கேடு, நாள்தோறும் வரும் நோய் ஆகியன இலராவர்.

கு-ரை: நின்றியூரில் அடிகள் திருப்பாதம் பணியும் அடியார் அச்சமுதலாயின இலராவர் எனக் கூட்டுக. அச்சம் இலர் என்றது தமக்கு உறுதுணையாவார் ஒருவரைப் பெற்றமையால். இந்நிலையை அப்பர் சுவாமிகளும் "சுண்ணவெண் சந்தனச்சாந்தும்" என்னும் பதிகத்து "அஞ்சுவதுயாதொன்றுமில்லை அஞ்சவருவதுமில்லை" என்றமை காண்க.

பாவம் இலர் - பிராரத்த நுகர்ச்சிக் கண்ணும் இவர்கள் இது செய்தார் யானிது செய்தேன் என்னும் தருக்கதின்றிச் செய்வார்கள் ஆதலின் மேல்வினைக்கு வித்துமாகும் பாவம் இலர். கேடும் இலர் - அவ்வினை காரணமாக வரும் கேடும் இலராவர். நிச்சம் - நித்யம். நோய் - துன்பங்கள். நச்சம் - நஞ்சு. அம் சாரியை. நறுங்கொன்றை நயந்து - மணம் பொருந்திய கொன்றைப்பூவை விரும்பி, ஆளும் - அதனை விரும்பி அன்போடு சாத்தும் அடியார்களை ஆளுகின்ற. பச்சம் உடை அடிகள் - பட்சமுடைய பெருமான். பச்சம், பக்ஷம் என்பது எதுகை நோக்கித் திரிந்து நின்றது.