190. மூரன்முறு வல்வெண்ணகை
யுடையாளொரு பாகம்
சாரன்மதி யதனோடுடன்
சலவஞ்சடை வைத்த
வீரன்மலி யழகார்பொழில்
மிடையுந்திரு நின்றி
யூரன்கழ லல்லாதென
துள்ளம்முண ராதே. 6
191. பற்றியொரு தலைகையினி
லேந்திப்பலி தேரும்
பெற்றியது வாகித்திரி
தேவர்பெரு மானார்
சுற்றியொரு வேங்கையத
ளோடும்பிறை சூடும்
நெற்றியொரு கண்ணார்நின்றி
யூரின்னிலை யாரே. 7
__________________________________________________
6. பொ-ரை: புன்முறுவலைத் தரும்
வெண்மையான பற்களை உடைய உமையம்மையை ஒரு பாகமாகக்
கொண்டு, சடைமுடியில் சார்ந்துள்ள பிறைமதியோடு
கங்கையை வைத்துள்ள வீரனும் அழகு மலிந்த
பொழில்கள் செறிந்த திருநின்றியூரில் எழுந்தருளியவனுமாகிய
சிவபிரான் திருவடிகளை அல்லாது எனது உள்ளம் வேறு ஒன்றையும்
உணராது.
கு-ரை: மூரல் முறுவல் - மிகச் சிறிய
புன்சிரிப்பு, சலவம் - கங்கை. கழலைப்பற்றிய
உள்ளத்திற்கு, வேறொன்றையும் உணர முடியாமையானும்
உணர்ந்து ஆகவேண்டுவது இன்மையானும் உள்ளம் உணராது
என்றார்.
7. பொ-ரை: பிரமனது தலைகளில் ஒன்றைப்
பறித்து அதனைக் கையினில் ஏந்திப் பலிகேட்கும்
இயல்பினராய்த் திரிகின்ற தேவர் தலைவரும் புலித்தோலை
இடையில் சுற்றியிருப்பதோடு முடியில் பிறைமதியைச்
சூடியவரும், நெற்றியில் ஒரு கண்ணை உடையவரும்
ஆகிய பெருமானார் திருநின்றியூரின்கண் நிலையாக
எழுந்தருளியுள்ளார்.
|