நெறியில்லவர் குறிகள்நினை
யாதேநின்றி யூரில்
மறியேந்திய கையானடி
வாழ்த்தும்மது வாழ்த்தே. 10
194. குன்றம்மது வெடுத்தானுடல்
தோளுந்நெரி வாக
நின்றங்கொரு விரலாலுற
வைத்தானின்றி யூரை
நன்றார்தரு புகலித்தமிழ்
ஞானம்மிகு பந்தன்
குன்றாத்தமிழ் சொல்லக்குறை
வின்றிநிறை புகழே. 11
திருச்சிற்றம்பலம்
__________________________________________________
சமணர்களாகிய நெறியற்ற கீழ்மக்களின்
உரைகளைக் கேட்டு மயங்காமலும், தமக்கென்று உண்மை
நெறியல்லாத புறச் சமயிகளின் அடையாளங்களைக்
கருதாமலும் நின்றியூரில் மான் ஏந்திய கையனாய்
விளங்கும் இறைவன் திருவடிகளை வாழ்த்துவதே வாழ்த்தாகும்.
கு-ரை: நெறியில் வரும் - தொன்றுதொட்டுக்
குரு காட்டிய நெறியினின்று பயில்வதால் வருகின்ற.
பேராவகை நினையா நினைவொன்றை அறிவில் சமண்
ஆதர் - பேராதே மறவாதே தன்மயமாய் இருந்து நினைக்கப்படும்
ஒருபொருளை அறியும் அறிவு அற்ற சமணர்களாகிய கீழ்மக்கள்.
மயராது - மயங்காது - நெறியில்லவர் - தமக்கென்று உண்மை
நெறியில்லாதவர்களாகிய புறச்சமயிகள்.
குறிகள் - அடையாளங்கள். மறி - மான்.
11. பொ-ரை: கயிலைமலையை எடுத்த
இராவணனின் உடல்தோள் ஆகியன நெரியத் தன்
கால்விரல் ஒன்றால் ஊன்றியவனது நின்றியூர் மீது,
நன்மைகளையே செய்யும் புகலிப் பதியில் தோன்றிய
தமிழ் ஞானசம்பந்தன் உரைத்த திருவருள் நலம்
குன்றாத இத்திருப்பதிகப் பாடல்களை உரைப்பதனால்
குறைவின்றிப் புகழ் நிறையும்.
|