பக்கம் எண் :

44பதிப்புரை(முதல் திருமுறை)


இத்திருமுறையில் அற்புதப் பதிகங்களாக விளங்குவன ஏழு. அவை ஞானப்பால் உண்டது, பொற்றாளம் பெற்றது, முயலகன் நோய் தீர்த்தது, பனிநோய் போக்கியது, மதுரை அனல் வாதத்தின்போது எரியில் இட்டது, ஆண்பனையைப் பெண்பனை ஆக்கியது, வாசி தீரக் காசு பெற்றது ஆகிய நிகழ்ச்சிகளை உள்ளடக்கியனவாகும்.

திருமுறைப் பதிப்பு:

‘சில நூற்றாண்டுகளுக்கு முன், தஞ்சை மாவட்டம் வேதாரணியத்திலும், திருநெல்வேலியிலும் வாழ்ந்த சிவநேயச் செல்வர்கள் ஆன தேசிகர்கள் பலர், தேவாரப் பதிகங்கள் முழுவதையும் பனை ஓலைச் சுவடிகளில் எழுதி மக்கள் பலருக்கும் கொடுத்து அதனால் பெறும் ஊதியங்கொண்டு வாழ்க்கையை நடத்தி வந்தனர். அவர்கள் வரைந்த ஓலைச் சுவடிகளே தமிழகத்திலும், யாழ்ப்பாணத்திலும் கிட்டும் சுவடிகளாகும். இச்சுவடிகளிடையே பாட பேதம் காண்டற்கு வாய்ப்பின்று’ என மர்ரே கம்பெனி திரு. எஸ். ராஜம் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

பல நூற்றாண்டுகளாக ஓலைச் சுவடிகளிலிருந்த மூவர் தேவாரத் திருமுறைகளை, முதன் முதலில் காகித நூல்வடிவில் உலகுக்கு அளித்த பெருமை திருமயிலை சுப்பராய ஞானியார் அவர்களையே சாரும். திருஞானசம்பந்தர் அருளிய முதல் மூன்று திருமுறைகளை, திருவாவடுதுறை ஆதீனப் பிரதியை ஆதாரமாகக் கொண்டு, காஞ்சிபுரம் வித்துவான் சபாபதி முதலியார் அவர்களைக் கொண்டு ஆய்வு செய்வித்து, அப்பாவுப்பிள்ளை, நமச்சிவாய முதலியார் ஆகியோரின் பொருள் உதவியுடன், குமாரய்யர் அவர்களின் அச்சுக் கூடத்தில், ருத்ரோத்காரி ஆண்டு ஐப்பசித் திங்கள் (கி.பி. 1864) இல் பதிப்பித்து இவர் தமிழுலகிற்கு வழங்கினார்.

சுந்தரர் அருளிய ஏழாம் திருமுறையினை திருவாவடுதுறை ஆதீனப் பிரதியை அடிப்படையாகக் கொண்டு காஞ்சிபுரம் வித்துவான் சபாபதி முதலியார் அவர்களைக் கொண்டு ஆய்வு செய்வித்து, கலாநிதி அச்சுக் கூடத்திலும், சண்முக விலாச அச்சுக் கூடத்திலுமாக குரோதன ஆண்டு (கி.பி. 1865) பதிப்பித்து உதவினார். திருஞானசம்பந்தர் தேவாரம் அச்சில் வெளிவந்த எட்டுத் திங்களுக்குள் சுந்தரர் தேவாரம் அச்சேறிவிட்டது.

திருநாவுக்கரசர் அருளிச்செய்த நான்கு, ஐந்து, ஆறு ஆகிய மூன்று திருமுறைகளையும் திருவாரூர்ச் செப்பேட்டின்படி பனை