பக்கம் எண் :

465திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


254. மாடே யோத மெறிய வயற்செந்நெற்
காடே றிச்சங் கீனுங் காழியார்
வாடா மலராள் பங்க ரவர்போலாம்
ஏடார் புரமூன் றெரித்த விறைவரே. 5

255. கொங்கு செருந்தி கொன்றை மலர்கூடக்
கங்கை புனைந்த சடையார் காழியார்
அங்க ணரவ மாட்டு மவர்போலாஞ்
செங்க ணரக்கர் புரத்தை யெரித்தாரே. 6

__________________________________________________

உதைத்த காழியார்போலாம் என்கின்றது. மாணா வென்றி - மாட்சிமைப்படாத வெற்றி. காணா மாணிக்கு - இறைவனையன்றி வேறொன்றையும் காணாத பிரமசாரியாகிய மார்க்கண்டருக்கு. பேணார் - பகைவர்.

5. பொ-ரை: குற்றம் பொருந்திய அசுரர்களின் புரங்கள் மூன்றையும் எரித்தருளிய இறைவர், அருகில் கடல் நீரின் அலைகள் எறிந்த சங்குகள் வயல்களில் விளைந்த செந்நெற் பயிர்களின் செறிவில் ஏறி முத்துக்களை ஈனும் சீகாழிப் பதியினர். அவர் வாடா மலர்களைச் சூடி விளங்கும் பார்வதி தேவியைத்தம் திருமேனியின் ஒரு பங்காக உடையவராவார்.

கு-ரை: புரம் எரித்த இறைவரே காழியில் உள்ள உமைபாகர் போலும் என்கின்றது. கடல் ஓதத்தால் பக்கங்களில் எறியப்பட்ட சங்குகள் வயலிலே உள்ள செந்நெற்காட்டில் ஏறி முத்தீனும் காழி என்றது திருவருள் வாய்ப்பிருக்குமானால் மடுவிலிருந்த ஒன்றும் காழிக்கரையேறிக் கடவுள் கருணையெய்தி இன்பமுறும் என்று குறிப்பித்தவாறு, வாடாமலராள் என்றது தெய்வக் கற்புடையாள் என்பதைத் தெரிவிக்க. ஏடு - குற்றம்.

6. பொ-ரை: சிவந்த கண்களை உடைய அரக்கர் மூவரின் திரிபுரங்களை எரித்தவராகிய இறைவர், கோங்கு, செருந்தி, கொன்றை மலர் இவற்றுடன் கங்கையை அணிந்துள்ள சடைமுடியினர். அக்காழியர் தாம் அணிந்துள்ள பாம்புகளை அவ்விடத்தே தங்கி ஆட்டுபவராகவும் உள்ளார்.

கு-ரை: புரமெரித்த பெருமானே காழியாராகிய பாம்பாட்டி