எழிலார் புரிபுன் சடையெம்
மிறைவனைத்
தொழுவார் தம்மேற் றுயர மில்லையே. 4
265. மலையான் மகளோ டுடனாய்
மதிலெய்த
சிலையார் செம்பொன் பள்ளி யானையே
இலையார் மலர்கொண் டெல்லி நண்பகல்
நிலையா வணங்க நில்லா வினைகளே. 5
266. அறையார் புனலோ டகிலும்
வருபொன்னிச்
சிறையார் செம்பொன் பள்ளி மேவிய
கறையார் கண்டத் தீசன் கழல்களை
நிறையால் வணங்க நில்லா வினைகளே. 6
__________________________________________________
கு-ரை: தொழுவார்க்குத் துயரமில்லை என்கின்றது.
துயரம் இல்லாமைக்கு இரண்டு ஏது; ஒன்று பகையும் பிணியும்
தடுத்தல். மற்றொன்று இன்பம் பெருக்கல். இவ்விரண்டையும்
பெற இறைவன் மழுவாள் ஏந்திப் பகையும் பிணியும்
தடுத்தும், மாதோர் பாகமாய்த் தான் இருந்து இன்பம்
பெருக்கியும் காக்கின்றார் என்று உணர வைத்தவாறு.
5. பொ-ரை: மலையரையன் மகளாகிய பார்வதி
தேவியோடு உடனாய் விளங்குபவனும்,
அசுரர்களின் மும்மதில்களை எய்தழித்த மலை
வில்லை உடையவனுமாகிய செம்பொன் பள்ளியில்
விளங்கும் சிவபிரானையே, இலைகளையும் மலர்களையும்
கொண்டு இரவிலும் நண்பகலிலும் மனம் நிலைத்து நிற்குமாறு
வணங்குவார் மேல் வினை நில்லா.
கு-ரை: இலையும் பூவுங்கொண்டு இரவும்
பகலும் வணங்குவார்க்கு வினைகள் இல்லை என்கின்றது.
மதில் எய்து மறத்தைக் காட்டினாலும் அதுவும்
கருணையாய் முடிந்தது என்பார் மலையான் மகளோடுடனாய்
மதில் எய்த என்றார். எல்லி - இரவு. நிலையா வணங்க -
வேறொன்றிலும் மனம் சென்று பற்றாது இறைவனிடத்தேயே
நிலைத்து வணங்க.
6. பொ-ரை: பாறைகளிற் பொருந்திவரும்
நீரில் அகில் மரங்களையும் அடித்துவரும்
பொன்னியாற்றின் கரையில் அமைந்த செம்பொன்பள்ளியில்
எழுந்தருளிய விடக்கறை பொருந்திய கண்டத்தை உடைய
ஈசன் திருவடிகளை மன ஒருமைப்பாட்டோடு வணங்க வினைகள்
நில்லா.
|