பக்கம் எண் :

473திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


269. காரார் வண்ணன் கனக மனையானும்
தேரார் செம்பொன் பள்ளி மேவிய
நீரார் நிமிர்புன் சடையெந் நிமலனை
ஓரா தவர்மே லொழியா வூனமே. 9

270. மாசா ருடம்பர் மண்டைத் தேரரும்
பேசா வண்ணம் பேசித் திரியவே
தேசார் செம்பொன் பள்ளி மேவிய
ஈசா வென்ன நில்லா விடர்களே. 10

__________________________________________________

கொண்டவனும் ஆகிய சிவபிரான் திருவடிகளையே அடைந்து வாழ்மின்.

கு-ரை: பலி ஏற்றுண்ணும் வாழ்க்கையானான் தாளை வணங்கி உய்யுங்கள் என்கின்றது. வானார் திங்கள் - ஒருகலைப்பிறை; வானில் பொருந்தாதாயினும் பொதுமையின் கூறப்பட்டது.

9. பொ-ரை: நீலமேகம் போன்ற நிறமுடையோனாகிய திருமாலும், பொன்னிறமேனியனாகிய பிரமனும், தேடிக் காணொணாதவனும் செம்பொன்பள்ளியில் எழுந்தருளிய கங்கை அணிந்த நிமிர்த்துக் கட்டிய சிவந்த சடைமுடியை உடையவனுமாகிய குற்றமற்ற எம் இறைவனை மனம் உருகித் தியானியாதவர் மேல் உளதாகும் குற்றங்கள் நீங்கா.

கு-ரை: மலரகிதனான இறைவனைத் தியானியாதவர்களின் ஊனம் ஒழியா என்கின்றது. கனகம் அனையான் - பொன் நிறமான பிரமன். ஓராதவர் - மனமுருகித் தியானியாதவர்.

10. பொ-ரை: அழுக்கேறிய உடலினராகிய சமணரும், மண்டை என்னும் உண்கலத்தை ஏந்தித் திரிபவர்களாகிய புத்தரும் பேசக் கூடாதவைகளைப் பேசித் திரிய அன்பர்கள் "ஒளி பொருந்திய செம்பொன்பள்ளியில் மேவிய ஈசா!" என்று கூற அவர்களுடைய இடர்கள் பலவும் நில்லா.

கு-ரை: ஈசா என்ன இடர் நில்லா என்கின்றது. மாசார் உடம்பர் - அழுக்கேறிய உடம்பை உடையவர்கள். மண்டை - உண்கலம். பேசா வண்ணம் - பேசக்கூடாதபடி, பேசித்திரிய - வாய்க்கு வந்தவற்றைப் பேசித்திரிய. தேசு - ஒளி.