291. நாடவல்ல மலரான்
மாலுமாய்த்
தேட நின்றா ருறையுந் திருப்புன்கூர்
ஆட வல்ல வடிக ளவர்போலும்
பாட லாடல் பயிலும் பரமரே. 9
292. குண்டு முற்றிக் கூறை யின்றியே
பிண்ட முண்ணும் பிராந்தர்
சொற்கொளேல்
வண்டு பாட மலரார் திருப்புன்கூர்க்
கண்டு தொழுமின் கபாலி வேடமே. 10
__________________________________________________
குரியராகிய முப்புராதிகள். மலைதல்
- சண்டையிடுதல். மலை - கைலைமலை. அடர்த்து
- நெருக்கி, இதனாற் கருணை அறிவிக்கப் பெறுகின்றது.
9. பொ-ரை: பாடல் ஆடல் ஆகிய இரண்டிலும்
வல்லவராய் அவற்றைப் பழகும் மேலான இறைவர்,
எதனையும் ஆராய்ந்தறிதலில் வல்ல நான்முகனும், திருமாலும்,
தேடி அறிய இயலாதவராய் ஓங்கி நின்றவர். அப்பெருமான்
திருப்புன்கூரில் உறையும் ஆடல்வல்ல அடிகள் ஆவார்.
கு-ரை: ஆடவல்ல அடிகளே பாடலாடல் பயிலும்
பரமர் போலும் என்கின்றது. நாடவல்ல மலரான் -
பிரமனுக்கு நான்கு முகங்களாதலின் ஏனைய தேவர்களைப்போலத்
திரும்பித் திரும்பித் தேட வேண்டிய அவசியம் இல்லை
என்று நகைச்சுவை தோன்றக் கூறியது. அதிலும் துணையாகத்
தன் தந்தையையுஞ் சேர்த்துக் கொண்டு தேடினான் என
அச்சுவையை மிகுத்தவாறு.
10. பொ-ரை: கீழாந்தன்மை மிகுந்து ஆடையின்றி
வீதிகளில் வந்து பிச்சை கேட்டுப் பெற்று, அவ்வுணவை விழுங்கி வாழும்
மயக்க அறிவினராகிய சமணர்கள் கூறும் சொற்களைக்
கேளாதீர். தேனுண்ண வந்த வண்டுகள் பாடுமாறு மலர்கள்
நிறைந்து
விளங்கும் திருப்புன்கூர் சென்று அங்கு விளங்கும்
கபாலியாகிய சிவபிரானின் வடிவத்தைக் கண்டு தொழுவீர்களாக.
கு-ரை: மயக்க அறிவினராகிய புறச்சமயத்தார்
புன்சொல் கேளாதே ‘கபாலியைக் கைதொழுமின்’
என்கின்றது. குண்டு அறியாமை, இழிந்த தன்மை கூறையின்றி
என்றது திகம்பர சமணரை.
|