பக்கம் எண் :

490திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


300. சாடிக் காலன் மாளத் தலைமாலை
சூடி மிக்குச் சுவண்டாய் வருவார்தாம்
பாடி யாடிப் பரவு வாருள்ளத்
தாடி சோற்றுத் துறைசென் றடைவோமே. 7

301. பெண்ணோர் பாக முடையார் பிறைச்சென்னிக்
கண்ணோர் பாகங் கலந்த நுதலினார்
எண்ணா தரக்க னெடுக்க வூன்றிய
அண்ணல் சோற்றுத் துறைசென் றடைவோமே. 8

__________________________________________________

பாடி ஆடும் அடிகள் எழுந்தருளிய திருச்சோற்றுத்துறையைச் சென்று அடைவோம்.

கு-ரை: துடி - உடுக்கை. புறங்காடு - சுடுகாடு. அரங்கு - கூத்து மேடை. பாணி - தாளம்.

7. பொ-ரை: காலன் அழியுமாறு அவனைக் காலால் உதைத்துத் தலைமாலைகளை அணிந்து, பொருத்தம் உடையவராய் வருபவரும், பாடி ஆடிப் பரவுவார் உள்ளங்களில் மகிழ்வோடு நடனம் புரிபவருமான சிவபிரான் எழுந்தருளிய திருச்சோற்றுத்துறையைச் சென்றடைவோம்.

கு-ரை: காலன் மாளச் சாடி என மாறுக. சுவண்டாய் - பொருத்தமாய், பரவுவார் உள்ளத்து ஆடி - தியானிப்பவர் உள்ளத்து ஆடுபவன்.

8. பொ-ரை: ஒருபாகமாக உமையம்மையை உடையவரும், பிறையணிந்த சென்னியரும், தமது திருமேனியில் ஒரு பாகமாக விளங்கும் நெற்றி விழியை உடையவரும், இராவணன் பின்விளையும் தீமையை எண்ணாது கயிலை மலையைப் பெயர்க்க, அவனது முனைப்பை அடக்கக் கால் விரலை ஊன்றிய தலைமைத் தன்மை உடையவருமாகிய சிவபிரானது திருச்சோற்றுத்துறையைச் சென்றடைவோம்.

கு-ரை: பிறைச்சென்னி - பிறையையணிந்த சிரம். எண்ணாது - பின்வருந் தீமையை ஆராயாமல். அண்ணல் - பெருமையிற் சிறந்தவன்.